Translate

Friday 16 March 2012

வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் - தண்டிக்கப்படுமா இலங்கை?

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od/player/3303398
வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் - தண்டிக்கப்படுமா இலங்கை?
- மகா.தமிழ்ப் பிரபாகரன்
இலங்கை அரசின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் 4-ன் புதிய ஆவணப் படம் குறித்த அலசல் இது. (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)

"ஆசையால் வெற்றி பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான். ஆனால் தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக வாழ்ந்திடுவான்." இது சிங்களவர்கள் வணங்கும் புத்தரின் வாக்கு!


'ஒற்றைத் தமிழனையும் விட்டுவிடாதே, தமிழச்சிகள் கருவில் உள்ள குழந்தை கூட நாளை விடுதலைப் புலியாக மாறிவிடும்' என்ற ரத்த வெறிக்கொண்ட இக்கூப்பாடுகள் இறுதிக்கட்ட போர் நடக்கையில் ராணுவத்துக்கு 'மகிந்த ராஜபக்சே'வால் பணிக்கப்பட்ட வேலைகள். இதுவே அன்று சிங்கள ராணுவத்துக்கு வேத வாக்கு!

இலங்கை ராணுவத்தின் ஒவ்வொரு விலங்கு மனிதர்களும் ராஜபக்சேவாக மாறி தமிழ் மழலைகளை முண்டமாக, பிறந்து விழித்திறக்காத குழந்தைகளை பூட்ஸ் கால்களில் நசுக்கி, தமிழச்சிகளின் பிணத்தை கூட முகர்ந்து பார்த்தது உள்ளமே இல்லாத இலங்கை ராணுவத்தின் உடல்.

'தப்பு செய்தவன் ஒரு தடயத்தையாவது விட்டுச் செல்வான்' என்பது துப்பு துலக்குவர்களின் வாக்கு. அந்த வாக்கை போல் 'போரில் வதைப்பட்டவர்கள், தப்பி வந்தவர்கள், ஐ.நா. பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், இவ்வளவு ஏன்.. இப்போர்க்குற்ற காணொளியை கொடுத்த உதவிய சிங்கள ராணுவர் வரை இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு ஆயிரம் ஆயிரம் சாட்சியங்கள் உண்டு. ஆனால் தண்டணைகள்தான் இல்லை.

இதைத்தான் 'இலங்கையின் கொலைக்களங்கள் - தண்டிக்கபடாத குற்றங்கள்' என்று இரண்டாவது பாகமாக இலங்கை இனப்படுகொலைகள் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது 'சேனல்-4'.

'இன்று உனக்கு இனிய நாள்' என்ற தோழமையின் குறுஞ்செய்தியுடன் அலைபேசியை ஓரங்கட்டிவிட்டு கணினியின் முன் காலை அமர்ந்தேன். அதுவே 'இலங்கை கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத குற்றங்கள்' ஒளிபரப்பட்ட நேரம். கண்ணில் நீர் வற்றிய தருணம் .

அய்யோ! இந்த பச்சப் பிள்ளைய காப்பாத்த இயலையே... என்ற 'சேய்'யை இழந்த ஈழத்தாயின் கதறலே 53:12 நிமிட காட்சியில் கண்ணீரை சொட்ட வைக்கும் முதல் காட்சி.

'தமிழீழம் என்றொரு தேசம் விடிய போராடிய விடுதலைப் புலிகளுக்கு' எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர் பல ஆயிரம் மக்களை காவு வாங்கியதை ரணத்தை ஏற்படுத்தும்  காட்சிகளுடன் வெளியிட்டும் 'சேனல்- 4', ஜெனிவா முதல் நியூயார்க் வரை ஒளிப்பரப்பியும் இதுவரை இம்மக்களுக்கு நீதி கிடைத்ததா தெரியவில்லை.

நீதி கிடைக்காத இன்றைய நிலைமையில் தான் 'தண்டிக்கபடாத போர்க்குற்றங்கள் 'என்ற படத்தை ஓர் ஆவண சான்றாக வெளியிடுகிறோம் என்பதுடன் 'ஐ.நா. மற்றும் கண்டும் காணாது இருந்த சர்வதேச சமூகத்தின் மனசாட்சியற்ற கதவுகளை தன் கேள்விகளால் தட்டுகிறார், ஆவணப் படத் தயாரிப்பாளர் ஜான் ஸ்னோ. 

உலக நாடாளுமன்றங்கள் பலவற்றில் சேனல் 4-ன் முதல் ஆவணப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்கா இதனால் ஏற்பட்ட விளைவை கூறியதே 'தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை சிங்களமே ஒப்புக்கொள்கிறது' என்பதற்கான சான்று. அவர் "சேனல்-4 வெளியிட்ட இலங்கை கொலைக்களங்கள் வீடியோவை பார்த்துவிட்டு, "என் 28 வயது மகன் கலங்கிப் போனான், அவன் அதில் காட்டிய சித்தரவதைகளை பார்த்துவிட்டு, நான் சிங்களன், இலங்கையன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக உள்ளது என்றான்," என்று தெரிவித்துள்ளார்.

2007 முதல் 2010 வரை இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்லிபேன்ட் கருத்துரைத்த பொழுது, நல்லிணக்க அறிக்கையில் போருக்கு அந்த குரூர இனப்படுகொலைக்களுக்கு யார் காரணம் என்பதையே இலங்கை அரசு மறைத்து விட்டது.

"விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களையே முழுவதுமாக அழித்துள்ளனர் கோத்தபயாவும், மகிந்தாவும்" என்று குறிப்பிட்டுள்ளார், மில்லிபேன்ட்.

சிங்கள அரசு அலுவலகங்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல், ஐ.நா. விதியை மீறி 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இறுதிக்கட்ட போரில் புலிகள் போரிட பயன்படுத்தினர்  என்று சான்றுகள் முன்வைக்கப்பட்டாலும், ஏன் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த படுகொலைகளுக்கு, போர் விதிகளை மீறி புலிப்போராளிகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு தண்டனைகள் அளிக்கப்படவில்லை? என்ற கேள்விகள் காட்சிகளுக்கு இடையே எழுப்பப்பட்டது.

மக்கள் மீதே எறியப்பட்ட குண்டுகள்...

பாதுகாப்பு வலயங்களில் (No Fire zone) இருந்த பதுங்கு குழிகள், மக்களை காக்க ஐ.நா அமைத்த பதுங்கு குழிகள் என பதுங்கு குழிகள் எல்லாவற்றி்ன் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. சரத் பொன்சேகா போரில் எவ்வித வலிமையான ஆயுதங்களும் பயன்படுத்தவில்லை என்று சொல்லிவிட்ட பிறகே, ஐ.நா. பதுங்கு குழிகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இத்தாக்குதல் நடக்கும்போது பீட்டர் மக்கே என்ற ஐ.நா.வின் ஆஸ்திரேலிய பணியாளரால் இதை நிறுத்தக்கோரி பல அழைப்புகள் கொழும்புக்கு விடப்பட்ட பிறகும், அங்கிருந்து சற்று தள்ளி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இப்போரில் ஐ.நா. பதுங்குக்குழிகள் மீது தெரிந்தே தகுதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசு போரின் விதிகளை அப்பட்டமாக மீறியது தெரிகிறது.

உணவுக்கு வழி இல்லை... மருந்தில்லாமல் வலியோடு துடித்தவர்கள்!

அரசுக்கு பணிந்து பாதுகாப்பு வலயங்களுக்குள் வரும் மக்களுக்கு உணவு, மருந்து கொடுப்பது ஐ.நா.விதிப்படி ஒரு ஜனநாயக நாட்டின் கடமை. ஆனால் எந்த கடமையும் இல்லை என்றே இலங்கை ராணுவமும் அரசும் செயல்பட்டுள்ளது என ஆதாரங்களுடன் வருகிறது அடுத்தடுத்த சாட்சியங்கள்.

பாதுக்காப்பு வலயங்களுக்கு உள்ள மருத்துவராக பணியாற்றிய ஒருவரின் பதில் "அவசர சிகிச்சை (ஐசியூ) யூனிட்டில் மருந்து மிகவும் பற்றாக்குறையாக உள்ளது என்று சொல்லியும் அரசு பொருட்படுத்தவே இல்லை, இதனாலே குண்டுகளால் அடிப்பட்டு சிகிச்சையின் பொழுது  ரத்தப்போக்கு  நிற்காமல் இறந்தவர்களே அதிகம்."

இதுகுறித்து இதில் வதைப்பட்டு தமிழ் பெண்மணி கூறியது, "கடைக்கு பொருள் வாங்க போனால் குண்டு எப்ப வந்து விழும் என்றே தெரியாது, விழுந்தால் வியாபாரியும் விழுந்துக்கிடப்பார்.. மக்கள் உணவுக்கு வழியின்றி கீழே சிதறிய பொருட்களை அள்ளிக்கொண்டு இருப்பார்கள். அடுத்த அவர்கள் இருப்பார்களா இல்லையா என்றே தெரியாது" என்று அனுபவித்த கொடுமையை விளக்கினார்.

இதே போல் பல காயங்களுடன் தப்பி வந்த ஆண் ஒருவர் "நாங்கள் பட்ட காயங்களுக்கு எல்லாம் மருந்து இல்லை.. கத்திக்கொண்டே கண்கள் சொருகி விழுந்து விடுவோம் ,அதுவே குண்டடிபட்ட எங்களுக்கு வலிப்போக்கும் மருந்து. அப்படி இல்லாமல்  அடிப்பட்டவர்கள் வலியால் துடித்து கத்துவதைக் கண்டால் இழுத்திப்போட்டு சுட்டுக்கொன்று விடுவார்கள் ராணுவ ஆட்கள்" என்றார்.

முழுமையான திட்ட வகுத்தலுடன் குண்டுவீச்சு!

எந்தவித எச்சரிக்கையும் விடப்படாமலே திட்டுமிட்டு பொது மக்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதுவும் மருத்துவமனை என்று அறிந்தும், அதன் மீதே குண்டுகள் வீசப்பட்டுள்ளன. 2009 ஏப்ரல் 22-ம் தேதி இலங்கை அரசு 'வலிமை வாய்ந்த குண்டுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை' என்று சொல்லியதே, அப்படியென்றால் குண்டுவீச்சுத் தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது? இந்த தாக்குதலுக்கு யார் உத்தரவு கொடுத்தது? என்று வினவியுள்ளது, சேனல் 4.

இவ்வளவு ஏன், ராஜபக்சேவே தன் பேச்சில் "மக்களை எங்கள் பக்கம் கொண்டு வருவதற்காக தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அதில் 5000 முதல் 10000 பேர் செத்திருக்கலாம்" என்று கொலைவெறிப் பேச்சு இணைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரம் இல்லாத நாடு.. 

ராஜபக்சே அரசுக்கு எதிராக பத்திரிகை எதாவது எழுதினால் உடனே அவர்  'எல்.டி.டி.ஈ. உதவி பெறுபவர்' என்று முத்திரை குத்தப்பட்டு காணாமல் போவார் என்பது தான் இலங்கையின் பத்திரிகை விதி.

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்திலும் அதன் பிந்தைய காலக்கட்டத்திலும் பத்திரிகையாளர்கள் நிலைமையை பேசிவருபவர் இலங்கையின் சுதந்திர பத்திரிகையாளர், பாஷன அபயவர்தனே. அவர், "தன் அரசுக்கு எதிராக நடக்கும் பத்திரிகையாளர் யாராக இருந்தாலும் அவர் கொல்லப்படுவார் அல்லது நாட்டைவிட்டு விரட்டப்படுவார் என்றே நிலைமையே இதுவரை தொடர்கிறது. இந்த தருணம் வரையிலும் 60 ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். 2005-லிருந்து  சிங்களர்கள், தமிழர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்," என இலங்கையின் பத்திரிகை சுதந்திரமற்ற தன்மையை விளக்கினார்.

பிரபாகரன் மகன் என்பதாலே பாலச்சந்திரன் படுகொலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திர பிரபாகரன். பிரபாகரன் மகன் என்பதாலே கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரருகே ஐந்து பேரின் சடலமும் கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் இருக்கின்றன. அவரின் மெய்க்காவலர்களாக இருக்கக்கூடும் என்று இப்படத்தின் தடயவியல் நிபுணர் டெர்ரிக் பவுண்டர் (Derrick Pounder) குறிப்பிட்டுளார்.

பாலச்சந்திரனின் உடம்பில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளன. பாய்ந்த குண்டுகள் அனைத்தும் சில அடிகள்  தொலைவில் இருந்தே பாய்ந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதில் உடல் அளவிலான சித்திரவதைகளுக்கு சாட்சியங்கள் இல்லை என்றாலும்  'பிரபாகரன் மகன்' என்பதாலே மனதளவில் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று அறியப்படுகின்றது. இக்கொலை மே 17, 2009 அன்று நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.     

சிங்கள அரசு கணக்கின் அடிப்படையில் பிரபாகரன் இதுவரை பத்து முறைக்குமேல் இறந்துள்ளார். சேனல்-4 காட்சிப்படுத்திய இப்படத்திலும், தலை மோசமாக அடிப்பட்டு நைந்து போன நிலையில் கைக்குட்டையால் மூடப்பட்ட தலையுடன்... சிங்கள அரசு, 'இவரே  பிரபாகரன், விடுதலைப் புலிகளின் தலைவர்' என்று ஒரு உடலை காட்டியது. அதுவே  இந்த ஆவணப் படத்திலும் காட்டப்பட்டது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுற்றதாக சொல்லப்பட்டபோது சிங்களர்களின் கொண்டாட்ட உற்சவங்களை பார்த்தால் தெரியும் தமிழர்கள் இலங்கையில் பட்டப்பாடினை. இந்த போர் முடிவுற்ற பொழுது இந்தியாவின் சார்பாக கலந்துக்கொண்டு ராஜபக்சேவுக்கு கைக்குலுக்கிய சிவசங்கரன் மேனன் உள்ளிட்ட காட்சிகள் வரை காட்டப்பட்டது.

'2013 காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்கவிருக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், 40,000 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா.வும் சர்வதேசச் சமூகமும் மறந்துவிடக் கூடாது' என்று உள்ள குமுறல்களுடன் இலங்கையின் மனித உரிமை மீறல்களை சேனல்-4 தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கும்' என்று ரத்தக்கறைகள் நெஞ்சில் பதிவதோடு முடிவு பெறுகிறது.

நீதிக்கு இன்னுமா புலப்படவில்லை தண்டிக்கப்பட்டத இக்குற்றங்கள்?
*
சேனல் 4-ன் புதிய ஆவணப் படமான 'இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' (Sri Lanka's Killing Fields : War Crimes Unpunished)  இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஒளிபரப்பப்பட்டது.

அப்படத்தை இங்கே முழுமையாக காணலாம். பலவீனமான மனம் படைத்தோர், சிறார்கள் முதலானோர் இப்படத்தைக் காண்பதைத் தவிர்க்கவும். 

சேனல் 4 புதிய ஆவணப் படம் முழுமையாக..

No comments:

Post a Comment