Translate

Monday 26 March 2012

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றம்! அமைச்சர் தொண்டமான் அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா?


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றம்! அமைச்சர் தொண்டமான் அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தனது அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆளுங்கட்சியின் முக்கிய பங்காளிக் கட்சியான இக்கட்சி, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் கூடுதலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியாகும். அத்துடன் இ.தொ.கா. வின் ஆதரவு காரணமாக, கடந்த பொதுத் தேர்தலின்போது அரசாங்கம் மலையகப் பகுதியில் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.
எனினும் தற்போதுள்ள ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இந்த கட்சியின் உறுப்பினர்களுக்கு தமது தொகுதிகளில் எதிர்பார்த்தளவு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அரசாங்கத்தின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் மலையக மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி என்ற வகையில் இக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் கடந்த காலங்களில் பல தடவைகள் மோதல்கள் மற்றும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டிருந்தது.
அத்துடன் இ.தொ.கா. இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற வகையில், இந்திய அரசாங்கத்தின் விருப்பு வெறுப்பின் பிரகாரமே ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது அல்லது எதிர்க்கட்சியில் அமர்வது போன்ற தீர்மானங்களை எடுப்பது அரசியல் அரங்கில் பரவலாகத் தெரிந்த விடயமாகும்.
இந்நிலையில் இலங்கைக்கெதிரான ஜெனீவா தீர்மானத்தின் பின் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஆளுங் கட்சியிலிருந்து இ.தொ.கா. விலகவுள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கும் இந்திய நிலைப்பாடுகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் இ.தொ.கா. அரசாங்கத்திலிருந்து வெளியேறினால், அதன் பின் அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஏனைய சிறு கட்சிகள் ஒவ்வொன்றாக அரசாங்கத்திலிருந்து வெளியேறி, பதவியிலிருக்கும் அரசாங்கம் கவிழ்ந்து போவது கடந்த கால வரலாறாகும்.
இதற்கிடையே இன்றிரவு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இ.தொ.கா. வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
அமைச்சர் தொண்டமான் அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா? 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், தனது அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 
தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையின் பணிப்பாளரை நியமிப்பது தொடர்பில் எழுந்த முரண்பாடே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உத்தியோகபூர்வமாக இதுவரை எந்த தகவல்களும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment