Translate

Friday 16 March 2012

ஞானதேசிகனுக்கு சோனியா கடும் உத்தரவு! – வினோத்



அதிபர் ராஜபக்ச மீண்டும் சோனியா காந்திக்கு அவசரத் தகவல் அனுப்பியுள்ளார். மனித உரிமை மாமன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வீழ்த்த உதவாவிட்டால் தமிழர்களுக்கு எதிரான போருக்கு இந்தியா வழங்கிய உதவிகளை அம்பலப் படுத்தப் போவதாக ராஜபக்ச கடும் தொனியில் மிரட்டியுள்ளார்.


தமிழ் நாட்டில் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மத்திய அரசின் போக்கிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அது மக்கள் இயக்கமாக மாறும் தறுவாயில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரசியல் தலைவர்களின் தூண்டுதல் இல்லாமல் மக்கள் கிளர்ந்தெழுந்தது நினைவிருக்கலாம். 

அம்மணி கடுப்பில் இருக்கிறார். கருணாநிதி முதலமைச்சர் பதவியில் இருந்த போது தமிழ் நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர் மத்திய அரசிற்கு ஒத்;தாசை வழங்கினார். மனிதச் சங்கிலிப் போராட்டம், மத்திய அரசிற்குத் தந்தி அனுப்புதல், இறுதியாக உண்ணாவிரதம் என்று பல உத்திகளை அவர் கையாண்டார்.

காவல்துறையை வைத்து எதிர்ப்புக்களைச் சமாளித்தார். ஊடகங்களை மிரட்டிப் பணிய வைத்தது தான் கருணாநிதியின் மிகப் பெரிய சாதனை. இதனால் அவர் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. சங்கரரன்கோயில் இடைத் தேர்தல் வர இருப்பதால் அவரால் மத்திய அரசிற்கு வெளிப்படையான உதவி ஒத்தாசை செய்ய முடியவில்லை.

ஜெயலலிதாவை வகைப்படுத்தலாம் என்றால் அது முடியாத காரியம். அவர் பா.ஜ.க அனுதாபி. அத்தோடு கருணாநிதியை மடக்குவது தான் அவருடைய அரசியலின் குறிக்கோள். இதை அறிந்த சோனியா காந்தி ஆயிரம் வாற் மின்சாரமும் மேம்பாட்டுத் திட்ட நிதியும் உடனடியாகத் தருவதாக ஆசை காட்டியுள்ளார்.

ஜெயலலிதா தமிழ் நாட்டு மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிவார். இப்போதைக்கு அவர் மக்களை எதிர்க்கத் தயாரில்லை. கருணாநிதியின் மாயாஜால அரசியலும் அவருக்கு ஒத்துவராது. நிலமை கட்டுக்கு அடங்காமல் போகக் கூடாது என்று அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி தமிழ் நாட்டு உணர்வுகளை மதியாமல் அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்க முடியாது என்று கூறியதால் தமிழ் நாட்டில் அவருடைய உருவப் பொம்மைகள் எரியூட்டப் படுகின்றன. அவற்றை அணைப்பதில் காவல்துறை துரிதமாக ஈடுபடுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் பொம்மையும் எரிக்கப்பட்டது. காவல்துறை உசார் அடைந்து பதின்மூன்று நபர்களைக் கைது செய்துள்ளது. பிரதமருக்குப் பொம்மைகள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவரே ஒரு பொம்மை தானே. எதற்கு இன்னொரு பொம்மை.?

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சூடு கண்ட பூனை. தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த போது சென்னை நகர்ச் சுவர்களில் ஒட்டப்பட்ட அனுதாபச் சுவரொட்டிகளைக் கிழித்தெறியும்படி அவர் தனது அடியாட்களுக்கு ஆணை இட்டார். இதன் விளைவு பயங்கரமாக இருந்தது. அடியாட்கள் பந்தாடப்பட்டனர்.

ஞானதேசிகன் சில காலம் புதுடில்லியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். மக்கள் மறந்து விட்டார்கள் என்ற ஐடியாவில் அவர் மீண்டும் சென்னைக்கு வந்து விட்டார். இந்த முறை அவர் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கூச்சல் போடுகிறார்.

இதெல்லாம் அரசியலில் சகஜம் என்று சோனியாவுக்கு விளக்கம் கூறியபோது அதை ஏற்க சோனியா மறுத்துவிட்டார். இந்து ராம் அடக்கி வாசிக்கிறார். தமிழ் நாட்டை விட்டு ஓடு என்று சொன்ன சுவரொட்டிகளை அவர் இன்னும் மறக்கவில்லை. இந்தியா ஒரு போதும் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டாது.

ராஜபக்சவின் கையோங்கி விட்டது. தமிழர்களை வகை தொகையாகப் படுகொலை செய்த ராஜபக்ச தற்காப்பிற்காக இந்தியா பற்றிய இரகசியங்களையும் திரட்டி வைத்திருக்கிறார். இந்தியாவின் மானம் மரியாதை காற்றில் பறக்கச் செய்ய ராஜபக்சவால் முடியும்.

இந்தியாவின் தர்ம சங்கடமான நிலமைக்கு அதனுடைய சோனியா குடும்ப அரசியல் தான் காரணம். தனது நாட்டு மக்களை எதிர்க்கும் போக்கு நீடிக்கும் போது நாட்டின் ஒருமைப்பாடு மாத்திரமல்ல உறுதிப்பாடும் சீர்குலைய வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment