Translate

Monday 26 March 2012

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் உறுப்பு நாடுகளுக்கு சம்பந்தனின் விளக்க கடிதம்


ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் உறுப்பு நாடுகளுக்கு சம்பந்தனின் விளக்க கடிதம்

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறினால் அது மாற்றத்துக்கான கடப்பாட்டை வெளிக்காட்டாத மற்றும் சீர்திருத்தத்துக்கான வெற்று வாக்குறுதிகளை மட்டும் வழங்கிவிட்டு தமது கடப்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் அரசாங்கங்களுக்கு உதவுவதாகவே அமையும். இது அபாயகரமானதும் தீங்கு விளைவிக்கக் கூடியதுமான தண்டனையில் இருந்து தப்புவதற்கான பாதுகாப்பை கவுன்ஸில் அங்கீகரித்தமைக்கான ஒரு முன்மாதிரியை நிறுவிவிடும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு - இலங்கையில் சமாதானம், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு கவுன்ஸிலினால் அதன் 19ஆவது கூட்டத்தொடரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அவசியமான தொடக்கமாகக் கருதி முழுமையாக ஆதரிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸிலில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 14ஆம் திகதி அனுப்பிய அறிக்கையின் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் தமிழாக்கம் முழுமையாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 

மீறப்பட்ட வாக்குறுதிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்.

1. உண்மையைக் கூறுவது மற்றும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு தீவிரப் பிரச்சினைகள் உள்ளன.
1.1.    2011 செப்டெம்பர் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 18ஆவது கூட்டத்தொடரில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரையை அடுத்து, அந்த உரையின் தவறுகளைத் திருத்தியும் 'இலங்கையின் நிலைவரத்தை அனைத்துலகச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும்போது நேர்மையாகவும் உண்மையாகவும்' இருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியும் அதற்கடுத்த நாளே தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஓர் அறிக்கையை வெளியிட்டது. துரதிர்ஷ்டவசமாக, தற்போது நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 19ஆம் கூட்டத்தொடரிலும் அரசாங்கம் அனைத்துலகச் சமூகத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது.

1.2.    ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் நீடித்த போர் முடிவுற்று மூன்றாண்டுகள் முடிவுறும் நிலையை இலங்கை நெருங்கிக்கொண்டிருக்கும்போதும், அத்துடன் தமிழ் மக்களைக் குறிவைத்து ஒதுக்கிவைக்கும் கொள்கை தொடங்கி ஏறக்குறைய ஆறு தசாப்தங்கள் ஓடிவிட்ட நிலையிலும் - மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வொன்றைக் காணுதல்; ஆகியன தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாறானது,  மீறப்பட்ட வாக்குறுதிகளினதும் மீண்டும் மீண்டும் ஏற்படும் வன்முறைகளினதும் கவலையூட்டும் குளறுபடிகளின் கடினமான நினைவூட்டல்களைக் கொண்டிருக்கின்றது. 

1.3.    இலங்கை 1948ஆம் ஆண்டில் 'சோல்பெரி யாப்பின்' கீழ் சுதந்திரம் பெற்றது. 'சோல்பெரி யாப்பு' சிறுபான்மையினருக்கு ஒருசில குறைந்தபட்ச பாதுகாப்புக்களை வழங்கியது. அதன் 29ஆம் பிரிவு பாகுபாடு காட்டும் சட்டங்களை இயற்றுதலுக்கெதிரான தடைகளைக் கொண்டிருந்தது. குறிப்பாக பிரிவு 29 (2)(பி), (2) (சி) ஆகியன (i) ஒரு சமூகத்தையோ மதத்தையோ சார்ந்த ஆட்களை, ஏனைய சமூகங்களையோ மதங்களையோ சார்ந்த ஆட்கள் உட்படுத்தப்படாத தகைமையீனங்களுக்கு அல்லது கட்டுபாடுகளுக்கு உட்படுத்தும்; அல்லது (ii) மற்றைய சமூகங்களையோ மதங்களையோ சார்ந்த ஆட்களுக்கு வழங்கப்படாத ஏதேனும் சலுகையை அல்லது பயனை பிறிதொரு சமூகத்தையோ மதத்தையோ சார்ந்த ஆட்களுக்கு  வழங்கும் ஏதேனும் சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றுவதை தடைசெய்தது. எனினும், பிரிவு 29 (2) நடைமுறையிலிருந்தும், இலங்கையின் சட்டவாக்கச் சபை பாரபட்சமான சட்;டங்கள் பலவற்றை இயற்றியது. அந்நேரத்தில் நாட்டின் மொத்த குடித்தொகையில் 11வீதமாக இருந்த இந்திய வம்சாவழித் தமிழரின் குடியுரிமையைப் பறித்த 1948ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டம் மற்றும்  சிங்கள மொழியை மட்டும் அரச கரும மொழியாக்கிய 1956ஆம் ஆண்டின் அரசகரும மொழிச் சட்டம் ஆகியன இத்தகைய சட்டங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும். இதே போன்று, கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும்; மக்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை  மும்முரமாக ஆதரித்தன் மூலம் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தின் இனத்துவ குடிப்பரம்பல் ஆக்கமைவை மாற்றியமைக்கும் நடைமுறையை தீவிரப்படுத்தத் தொடங்கியது.

1.4.    1947இற்கும் 1981இற்கும் இடைப்பட்ட காலத்தில் தேசிய அளவில் சிங்களக் குடித்தொகை 238 வீதத்தால் அதிகரிக்க, கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடித்தொகை 883 வீதத்தால் அதிகரித்தது.

1.5.    1957ஆம் ஆண்டின் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தமும் அதன் பின்னர் 1965ஆம் ஆண்டின் டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மொழி மற்றும் கலாசாரத் தனித்துவத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் சட்டங்களின் மூலம் நாட்டிலுள்ள இனங்களுக்கிடையே புரையோடிப்போன பூசல்களை தீர்த்துவைப்பதை நோக்காகக் கொண்டிருந்தன. ஆனால் சிங்கள சமூகத்திலிருந்த தீவிரவாதிகளின் அழுத்தம் காரணமாக முதலாவது ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்ட அதேவேளை, அடுத்தடுத்து வந்த பிரதம மந்திரிகள் இரண்டாவதை நடைமுறைப்படுத்தாது விட்டனர்.

1.6.    1972இல் தமிழ் மக்களுக்கெதிரான கொள்கைகளை முறையாக அங்கீகரித்த ஒரு புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த அரசியலமைப்பு அரசின் ஒற்றையாட்சித் தன்மையை நிலைநிறுத்தியது. குடியரசில் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கியது. சிங்கள மொழிக்கு அரசியலமைப்புரீதியான முதன்மை அந்தஸ்தை வழங்கியது.   தமிழ் மக்களின் சம்மதமும் பங்கேற்பும் இன்றியே இது சட்டமாக்கப்பட்டது.

1.7.    1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பானது, 'சோல்பரி யாப்பின்' 29(2) பிரிவில் காணப்பட்ட சிறுபான்மையினருக்கான முக்கிய பாதுகாப்புக்களை அகற்றியது. உண்மையில், 1971 வரை அதி உச்ச நீதிமன்றமாக இருந்த பிரிவி கவுன்சிலானது, பிரிவு 29(2) இல் இருந்த சிறுபான்மையினருக்கான பாதுபாப்புகளை 'அவர்கள் எந்த நிபந்தனைகளின்மீது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டார்களோ, அந்த அடிப்படை நிபந்தனையாகிய இலங்கைப் பிரஜைகளிடையேயான   உரிமைகளின் புனிதமான சமநிலையை பிரதிபலிப்பதாகவும் எனவே அவை அரசியலமைப்பின் கீழ் மாற்றியமைக்க முடியாதவை' என்றும் விபரித்தது. (பியேர்ஸ் பிரபு, இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் வி.ரணசிங்க (1964) 66 என்எல்ஆர் 73, 78இல்)

1.8.    பின்னாளில் இலங்கையின் சுதந்திரத்துக்கு வழிகோலிய சோல்பரி அரசியலமைப்பை இலங்கை மக்கள் எந்த நிபந்தனையின்பேரில் ஏற்றுக்கொண்டார்களோ, அந்த அடிப்படையாகிய இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க இணக்கப்பாட்டை அகற்றியமையானது, தமிழர்தம் நியாயபூர்வ அபிலாசைகள்மீது அவமதிப்பை குவித்தது. 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு 1972ஆம் ஆண்டின் அரசியரமைப்பின் அடிச்சுவட்டைப்; பின்பற்றிப் புத்த மதத்திற்கு மிக முக்கிய இடத்தை வழங்கி, தொடர்ந்து சிங்கள மொழிக்கு முதன்மை நிலையை வழங்கியதோடு, அரசின் ஒற்றையாட்சித் தன்மையை நிலைநாட்டியதன் மூலம் அரசியல் அதிகாரத்தின் ஜனநாயக பிரயோகத்திலிருந்து தமிழ் மக்களை ஒதுக்கி வைத்தது.

1.9.    1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் காலத்துக்குக் காலம் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட வரலாற்றின் குழப்பகரமான ஓர் அம்சமாகும். தமிழ் மக்கள் தம் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தியதற்குக் கிடைத்த நேரடிப் பதிலடிகளே இந்த வன்முறைகளாகும்.

1.10.    வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கணிசமான சுயாட்சிக்கான தமது அரசியல் வேணவாவை வெளிப்படுத்தி 1956ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கிவந்த ஜனநாயகத் தீர்ப்புகள் மேலே கூறப்பட்ட இரண்டு அரசியலமைப்புகளின் கீழ் மறுக்கப்பட்டன. குறிப்பாக கல்வி, தொழில்வாய்ப்பு பொருளாதார வாய்ப்புகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச உதவியுடனான சிங்களக் குடியேற்றங்கள்; மற்றும் தமிழருக்கெதிரான இனப் படுகொலைகள் ஆகியவற்றில் இவ்விரு அரசியலமைப்புகளின் கீழ் பின்பற்றப்படும் பாரபட்சமான கொள்கைகளுடன் சேர்ந்து இந்தக் காரணி தமிழ் இளைஞர்களின் ஆயுதமேந்திய எதிர்ப்புப் போராட்டமொன்றைத் தோற்றுவித்தது. 

1.11.    1983இல் நடந்த பெரும் தமிழினப் படுகொலையையடுத்து ஏற்பட்ட சர்வதேச  கரிசனையானது 1987ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கும் அரசியலமைப்பிற்கான பதின்மூன்றாவது திருத்தத்திற்கும் வழிகோலியது. இது மாகாண சபைகளை உருவாக்கி ஓரளவு சட்டவாக்க அதிகாரத்தை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்த போதிலும், காத்திரபூர்வமான   அதிகாரப் பகிர்விலும் பார்க்க மிகக் குறைவானதாகவே அமைந்தது. எனினும் மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதை நோக்கிய ஒரு குறைந்தபட்ச நடவடிக்கையாக இது அமைந்தது. வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பிற்கு வகைசெய்யும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் - ஒரு சர்வதேச ஒப்பந்தம் - முக்கியமானதொரு ஏற்பாடு, அதன் பின்னர் போலியான காரணங்களுக்காக மீறப்பட்டுள்ளது.

1.12.    அரச ஊழியர்கள், நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோர் அரசியலமைப்பை மதித்துப் பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் அல்லது உறுதியுரை செய்கின்றபோதும், அரசியலமைப்பிற்கான பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பது தொடர்பான மிகக் குறைந்த ஏற்பாடுகள்கூட வேண்டுமென்றே மீறப்படுகின்றன.

1.13.    மேலும், அரசியல் தீர்வொன்று சம்பந்தமாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வழங்;கப்பட்ட உறுதிமொழிகள் மதிக்கப்படவில்லை. அதேபோன்று, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாக வழங்;கப்பட்ட உறுதிமொழிகளும் கிரமமாக மீறப்பட்டுள்ளன.

1.14.    இந்தப் பின்னணியிலேயே 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 19ஆவது கூட்டத்தொடரில் விடுக்கப்பட்ட அமைச்சர் சமரசிங்கவின் அறிக்கை உப்புச் சப்பற்ற ஒரு வெற்று அறிக்கையாக ஒலிக்கிறது.

2. அரசியல் தீர்வு தொடர்பான மீறப்பட்ட வாக்குறுதிகள்
2.1 இலங்கைவாழ் மக்களுக்கு அதிகாரத்தைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதற்கான அதிகாரப் பகிர்வு ஏற்பாடொன்றை மேற்கொள்வதாக இலங்கை அரசாங்கம் பல ஆண்டுகளாக வாக்குறுதி வழங்கி வந்துள்ளது. ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் சேர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கூட்டறிக்கை, வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்வொன்று தொடர்பான பல உறுதிமொழிகளை தெளிவாக உள்ளடக்கியிருந்தது. அவற்றுள் ஒன்றில்தான்: '13ஆவது  திருத்தத்தின் அமுலாக்கத்தை தொடர்வதற்கும் அத்துடன் அந்நடைமுறையை மேலும் மேம்படுத்தி இலங்கையில் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துமுகமாக  புதிய சூழ்நிலைகளில் தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தையொன்றை ஆரம்பிப்பதற்குமான தனது திடமான உறுதிப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த வெளியிட்டார்' (ஐநா செயலாளர் நாயகத்தாலும் இலங்கை அரசாங்கத்தாலும் இணைந்து விடுக்கப்பட்ட கூட்டறிக்கை, 26 மே, 2009)

2.2 போர் முடிவடைவதற்கு முன்னரே, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு (அகபிகு) மற்றும் அதற்கு உதவுவதற்கான ஆலோசனை பல்லின நிபுணர் குழு ஆகியவற்றின் தொடக்கக் கூட்டத்தில், 2006 ஜூலை 11ஆம் திகதி பின்வருமாறு கூறி,  அரசியல் அமைப்பு மாற்றத்திற்கான தனது எண்ணத்தை விளக்கினார். 'மக்கள் தத்தமது பகுதிகளில் தமது தலைவிதியை தாமே பொறுப்பேற்று தமது அரசியல் - பொருளாதாரச் சூழலைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். சமமற்ற வகையில் வளங்களை வழங்குகின்ற மையப்படுத்திய தீர்மானமெடுக்கும் முறையானது கணிசமான காலமாகச் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வந்துள்ளது. மேலும், அதிகாரப் பரவலாக்கலானது, மத்திய அரசில் அதிகம் தங்கியிராது, மக்களின் தனித்துவம், பாதுகாப்பு மற்றும் சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியன தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டுமென்பது வெளிப்படையான உண்மையாகும். சுருங்கக்கூறின், எந்தத் தீர்வும் மக்கள் தமது தலைவிதியை தாமே துரிதமாக பொறுப்பேற்கும் வண்ணம் அதிகாரத்தைப் பரவலாக்குவதாக அமைதல் வேண்டும். இது உலகின் பல பகுதிகளில் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கே தனித்துவமான ஓர் அரசியலமைப்புச் சட்ட வரைமுறையை நாம் வகுக்கும்போது, எமது அண்டை நாடான இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் நாம் ஆராயக் கூடிய பல உதாரணங்கள் உள்ளன. எந்தத் தீர்வும் முரண்பாட்டின் பின்னணியைக் கருத்திற்கொண்டு, நாட்டின் இறைமையை தாரை வார்க்காது முடிந்தவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்தைத் தருகின்ற ஒன்றாகத் தென்பட வேண்டும்..'

2.3 மேலுள்ளதை உறுதிப்படுத்துமுகமாக, நவெம்பர் 2006இல் வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனிடம் இனப் பிரச்சினைத் தீர்விற்கான வரைசட்டமொன்றை வழங்க சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு மற்றும் அதற்கு உதவும் பல்லின நிபுணர் குழு ஆகியன ஆற்றிவரும் பணிகள் பற்றிய விபரங்களை ஜனாதிபதி மஹிந்த விளக்கினார்.

2.4 ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பல்லின நிபுணர் குழுவானது பெரும்பான்மை உறுப்பினர்களின் அறிக்கை ஒன்றின் மூலம் தனது ஆலோசனைகளை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்தது. 2006 ஜூலை மாதம் அமைக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல்கள் அரசியல் தீர்வொன்றை அடைவதற்கான பொறிமுறையாக  இலங்கை அரசாங்கத்தினால் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டப்பட்டது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் 128 தடவைகள் கூடியது. ஆனால் அதன் இறுதி அறிக்கை வெளியிடப்படவேயில்லை. எனினும், முக்கியமாக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே, கலந்துரையாடல்களில் அது பங்கேற்கவில்லை.

2.5 தமிழ் மக்களின் அபிலாஷைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதற்கான  நடைமுறையொன்றை முன்னெடுக்;கும் அதேவேளை, பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் பற்றுறுதியும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் மீண்டும் மீண்டும் எடுத்தியம்பப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு முன்னர், 2009 மார்ச் மாதம் நடைபெற்ற பேரவையின் 10ஆவது கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியின் உறுதிமொழியை அமைச்சர் மஹிந்த சமரசிங்க பின்வருமாறு மீண்டும் வலியுறுத்தினார்: 'கடந்த பல பத்தாண்டுகாலமாக எமது தேசிய உரையாடல்கள் யாவற்றிலும் இனப் பிரச்சினையே மேலோங்கி நின்றுள்ளது. இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓர் அரசியல் தீர்வே தேவை. இந்த அரசியல் தீர்வை ஆயுத பலத்தால் ஒருபோதும் திணிக்கமுடியாது. நிச்சயமாகப் பயங்கரவாத செயல்களினாலும் அதனை அடைந்துவிட முடியாது. இதன் காரணமாகவே இலங்கையர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த நாமும் முயன்று வருகின்றோம். சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பரிந்துரைக்கேற்ப, 1987இல் நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்பிற்கான 13ஆவது   திருத்தத்தை எம்மால் முறையாக அமுல்படுத்த முடியும்..'

2.6 சில மாதங்களின் பின்னர் 2009 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 11ஆவது விஷேட கூட்டத் தொடரில் அமைச்சர் சமரசிங்க பின்வருமாறு கூறினார்: 'எமது பல்லின சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, உள்நாட்டில் வகுக்கப்பட்ட நடைமுறையென்றின் மூலம் எமது குடிமக்களின் சமூக - பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புக்களையும் தீர்க்கும் ஓர் அரசியல் நடைமுறைதான் நிலையானதும் நீடித்து இருக்கக்கூடியதுமான தீர்வாகுமென நாம் எப்போதும் கூறி வந்துள்ளோம். தலைவர் அவர்களே, இத்திசை நோக்கிய எமது முயற்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன..'

2.7 இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் 2011 மே மாதம் புது டில்லி சென்றிருந்தபோது அவரும் இந்திய வெளியுறவு அமைச்சரும் வெளியிட்ட ஊடகக் கூட்டறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது: '...இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்தையில் துரிதமானதும் உறுதியானதுமான முன்னேற்றத்தை உறுதிசெய்வதற்கான தனது அரசின் கடப்பாட்டினை இலங்கை வெளியுறவு அமைச்சர் உறுதிசெய்தார். பதின்மூன்றாவது திருத்தம் மீது கட்டி எழுப்பப்படும் ஓர் அதிகாரப் பகிர்வு பொதி அத்தகைய மீளிணக்கத்திற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதற்கு பங்களிப்புச் செய்யும்..'

2.8 மேலும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கோண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, 2012 ஜனவரி 17ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியுடனான தனது சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் இணைந்து நடத்திய ஒரு கூட்டு ஊடக மாநாட்டில் பேசுகையில் பின்வருமாறு கூறினார்: 'இலங்கை அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுலாக்குதல் மற்றும் காத்திரபூர்வமான அதிகாரப் பகிர்வை அடையக்கூடிய வகையில் அதனை மேலும் கட்டியெழுப்புதல் எனும் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றை நோக்கி நகர்வதற்கான தனது பற்றுறுதியை இலங்கை அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் எமக்கு அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நடைமுறைக்கு துரிதமானதும் ஆக்கபூர்வமானதுமான ஓர் அணுகுமுறையை நாம் எதிர்பார்த்திருக்கிறோம்..'

2.9 ஜனவரி 2012இல் இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஒன்றும் புதியனவல்ல. இதுபோன்ற பல உறுதிமொழிகள் இந்தியப் பிரதமருக்கும் இந்திய அரசுக்கும் ரோக்கியோ மாநாட்டின் இணைத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் 2011 டிசெம்பர் 25ஆம் திகதி கூறியது பின்வருமாறு: 'அரசியல் தீர்வுக்கான நடைமுறையொன்றை பின்பற்றுவதற்கான தனது பற்றுறுதி குறித்து இலங்கை அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் பல தடவை எமக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்திற்கும் காத்திரபூர்வமான அதிகாரப் பகிர்வையும் உண்மையான தேசிய மீளிணக்கத்தையும்  அடையக்கூடிய வகையில் அதற்கு அப்பால் செல்வதற்கும் இது வழிவகுக்கும்..'

2.10. 'தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது' என்று அமைச்சர் சமரசிங்க தற்பொழுது கூறுகின்றபோதிலும், அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே 2011 ஜனவரி மாதம் தொடங்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஓராண்டுக்கு மேலாக இழுபட்டுச் சென்று, 2011 பெப்ரவரி - மார்ச் மாதங்களில் முன்வைக்கப்பட்ட ததேகூ இன் தீர்வாலோசனைகளுக்கு பதிலளிப்பதற்கான தனது கடப்பாட்டிலிருந்து அரசாங்கம் பின்னர் பின்வாங்கியதைத் தொடர்ந்து, ஒருவித முன்னேற்றமும் இன்றி தடைப்பட்டு நின்றது என்பதே உண்மைநிலையாகும்.

2.11. அரசாங்கம் பதில் அளிக்கத் தவறியபடியால், 2011 செப்டெம்பர் 2ஆம் திகதி  ஜனாதிபதிக்கும் ததேகூ தலைவருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பில், மங்கள முனசிங்க - தெரிவுக் குழு அறிக்கை, அரசியல்மைப்பு சீர்திருத்தத்திற்கான 1995, 1997 மற்றும் 2000 ஆண்டு  முன்மொழிவுகள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பல்லின சர்வ கட்சி நிபுணர் குழுவின் பெரும்பான்மை அறிக்கை உட்பட கடந்தகால முன்மொழிவுகள் பலவும் பேச்சுவார்த்தை நடைமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று இணக்கம் காணப்பட்டது.

2.12. ததேகூ - அரசாங்க தூதுக்குழுவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட கருத்தொருமைப்பாடு அரசாங்கத்தின் நிலைப்பாடாக அல்லது அரசாங்கம் கூட்டமைப்பு  ஆகிய இரண்டினதும் கூட்டு நிலைப்பாடாக நாடாளுமன்ற தெரிவுக் குழுவிடம் சமர்ப்பிப்பது என்றும், அத்தகைய இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் கணிசமான அளவு கருத்தொருமைப்பாடு காணப்பட்டால், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் ததேகூ பங்குபற்றும் என்றும் அச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.

2.13. 2011 செப்டெம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை பற்றிய நிகழ்ச்சிக் குறிப்பில் மேற்படி இணக்கம் பதியப்பட்டுள்ளது. 'இப்பேச்சுவார்த்தைகளில், ஆலோசனை முன்வைக்கப்பட்டவாறு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில்; சமர்ப்பிக்கக்கூடிய இணக்கம் அரசாங்க தூதுக்குழுவுடன் ஏற்பட்டதும், ததேகூ நாடாளுமன்றத் தெரிவுக் குழு நடைமுறையில்  பங்குபற்றும்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 ஒக்டோபர்; 20ஆம் திகதி    இடம்பெற்ற சந்திப்பில் மேற்படி நிகழ்ச்சிக் குறிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. 

2.14. எனினும், மேற்படி இணக்கப்பாட்டை நேரடியாக மீறும் வகையில் த.தே.கூட்டமைப்புடனான  பேச்சுவார்தைகளிலிருந்து அரசாங்கம் 2012 ஜனவரி மாதம் ஒருதலைப்பட்சமாக விலகியது. இருதரப்பு பேச்சுவார்த்தை தொடரவேண்டுமானால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ததேகூ தனது பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று அரசாங்கம் அப்போது முன் நிபந்தனை விதித்தது. இது, எட்டப்பட்ட இணக்கப்பாட்டை மீறுவதாக அமைந்ததுமட்டுமன்றி, இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஓரளவு கருத்தொருமைப்பாடு ஏற்படும் வாய்ப்பை இல்லாதொழிப்பதாகவும்  அமைந்தது.

2.15. ஆகவே, தேசியப் பிரச்சினையின் உருப்படியானதும், நிலையானதுமான ஒரு தீர்வுக்கு இட்டுச்செல்லும் பேச்சுவார்த்தை நடைமுறை ஒன்றில் தமிழ் மக்களுடன் நேர்மையுடனும் கருத்தூன்றியும் ஈடுபடும் எவ்வித நேர்மையான கடப்பாட்டையும் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் புலப்படுத்தவில்லை. எனவே, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் முயல்வதாக அமைச்சர் சமரசிங்க சொல்வதில் உண்மை இல்லை. அனைத்துலக சமூகத்தை  பிழையாக வழிநடத்துவதற்காகவே அவர் அவ்வாறு கூறுகிறார்.

3. மனித உரிமைகள் தொடர்பாக மீறப்பட்ட வாக்குறுதிகள்
3.1. தனது சொந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயத்தில் அரசாங்கம் காட்டும் அசமந்தப் போக்கு - மனித உரிமைகள் தொடர்பான அதன் வாக்குறுதிகளிலும் அதேபோன்றுதான் உள்ளது. திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டமை, மூதூரில் 17 உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை உட்பட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் பலவற்றை விசாரணை செய்யும் அதிகாரத்துடன் உடலகம ஆணைக்குழு 2006இல் அமைக்கப்பட்டது. 2008 மே 13ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு சிரேஷ்ட அதிகாரியும், ஐநா மனித உரிமை கவுன்ஸிலுக்கான இலங்கைத் தூதுக்குழுவின் ஓர் உறுப்பினருமாகிய ஜசந்த கொடகம அந்த பேரவைக்கு பின்வரும் வாக்குறுதிகளை அளித்தார்: 'தலைவர் அவர்களே, மனித உரிமை தொடர்பான வழக்குகள் அனைத்தும், சம்பந்தப்பட்ட பணிக்கென அமர்த்தப்பட்ட உடலகம ஆணைக்குழு அடங்கலான பல நிறுவனங்களால் தொடர்ந்தும் பக்கச்சார்பின்றியும் விரிவாகவும்  புலனாய்வு செய்து விசாரணை செய்யப்படும் என்பதோடு, அவற்றின் கண்டறிதல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு குற்றமிழைத்தோருக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என நான் உறுதி கூறுகிறேன்..'

3.2. 2008இல் மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக, உடலகம ஆணைக்குழுவின் கண்டறிதல்கள் ஒருபோதும்  வெளியிடப்படாததோடு, அது எந்த குற்றமிழைத்தோரை விசாரிப்பதற்காக பணியிலமர்த்தப்பட்டதோ அந்த மனித உரிமை மீறல்கள் புரிந்தோர் நீதியின் நிறுத்தப்படவேயில்லை. அதற்குப் பதிலாக, மூன்றாண்டு கால தொல்லைதரும் நடைமுறைக்குப் பின்னர், அது தனக்கிடப்பட்ட ஆணையில் உள்ளடங்கியிருந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகள் அனைத்தையும் முடிக்க முன்னரே அதன் செயற்பாடுகள் முடிவுக்கு வந்துவிட்டன. உடலகம ஆணைக்குழுவின்  அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், உடலகம ஆணைக்குழுவின் அறிக்கை அமுல்படுத்தப்படுமென்ற அரசாங்கத்தின்  வாக்குறுதி பெரிதும் சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.

3.3. உலகம் ஆணைக்குழு தோல்வியுறுவதற்கேற்றவாறுதான் தோற்றுவிக்கப்பட்டது. ஆணையாளர்களுள் நால்வர் அதன் அமர்வுகளின் பொழுது பதவி விலகினர். அத்துடன், சட்டமா அதிபரின் திணைக்களத்தை பொறுத்தவரை பெரும் முரண்பாடுகள் காணப்பட்டன. ஒருபுறம், சட்டமா அதிபரின் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகளே பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியத்தை நெறிப்படுத்தினர்;. மறுபுறத்தில், அரச பாதுகாப்புப் படைகள் இக்குற்றங்கள் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தபோதும், அதே அதிகாரிகளே சர்வதேச அரங்குகளில் அரசாங்கத்துக்கு மதியுரை கூறி, அரசாங்கத்துக்காக வாதாடினார்கள். பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாக்கும் சட்டங்கள் இல்லாமையும் உடலகம ஆணைக்குழுவின்  நம்பகத்தன்மைக்கு கடும் கேள்விக்கணைகளை விடுத்தது.

3.4. முக்கியமான சாட்சிகளில் பலர் வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர் என்பதால், திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரனின் சாட்சியம் உட்பட அவர்களது சாட்சியங்களை வீடியோ மாநாடு மூலம் விசாரணை குழு பதிவு செய்யத் தொடங்கியது. ஆனால் இது தன்னிச்சையாக இடை நிறுத்தப்பட்டு திடீரெனக் கைவிடப்பட்டது. அதன் பின்னர் அரசாங்கம் மிகவும் பலவீனமான பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்ட மூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன் வைத்தது. பின்னர் அது முன்னெடுக்கப்படாமலே கைவிடப்பட்டது. பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான  பாதுகாப்பு பொறிமுறை ஒன்று இல்லாமை உடலகம ஆணைக்குழு மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியன அடங்கலாக இலங்கையின் பல விசாரணை ஆணைக்குழுக்களின் பணிகளை கடுமையாக பாதித்துள்ளது.

3.5. இந்தியாவின் முன்னாள் உயர் நீதிபதி ஜே.என்.பகவதியின் தலைமையிலான 'முக்கிய பிரமுகர்களைக் கொண்ட அனைத்துலக சுயாதீனக் குழு'வானது உடலகம விசாரணைக் குழு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் ஆலோசனை நல்கவும் அதன் விசாரணை முறை அனைத்துலக தரத்திற்கும் அளவுகோலுக்கும் அமைய இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் நியமிக்கப்பட்டது. ஆனால்; 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜே.என்.பகவதியின் தலைமையிலான 'முக்கிய பிரமுகர்களைக் கொண்ட அனைத்துலக சுயாதீனக் குழு', உடலகம விசாரணை குழு உடனான தொடர்புகளைத் துண்டித்த போது கீழ்க் கண்டவாறு கூறியது: 'விசாரணை மற்றும்  புலனாய்வு நடவடிக்கைள் வெளிப்படைத் தன்மை மற்றும் விசாரணை, புலனாய்வு தொடர்பான அடிப்படை சர்வசே தரங்களுக்கும் வழக்கங்களுக்கும் இயைந்தொழுகல் ஆகியவற்றிலிருந்து வெகுதூரம் பின் நிற்பதாக 'முக்கிய பிரமுகர்களைக் கொண்ட அனைத்துலக சுயாதீனக் குழு' தீர்மானிக்கிறது. 'முக்கிய பிரமுகர்களைக் கொண்ட அனைத்துலக சுயாதீனக் குழு'ஆனது இவ்விசாரணையின் குறைபாடுகளை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டியுள்ளது. முதலாவதாக, எல்லா மட்டங்களிலும்; காணப்பட்ட நலன் முரண்பாடுகள். குறிப்பாக சட்டமா அதிபர் திணைக்களம் வகித்த பாத்திரம். மேலதிக குறைபாடுகள் நிதிப் பற்றாக்குறை மற்றும் சுயாதீன பணியாளர் பற்றாக்குறை ஆகியவற்றினால் ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்கு ஏற்பட்ட தடங்கல்கள், விசாரணைகளை மிக மோசமான முறையில் ஏற்பாடு செய்தலும் மோசமான கேள்வி கேட்பதும், உயர் மட்ட அரச அதிகாரிகள் புலனாய்விலும் விசாரணையிலும் முழுமையாக  ஒத்துழைக்க மறுத்தமை, சாட்சிகளுக்கான பயனுள்ள மற்றும் விரிவான பாதுகாப்பு முறைமை இல்லாமை ஆகியவற்றை உள்ளடக்கும். இந்த உள்ளார்ந்த, அடிப்படையான முட்டுக்கட்டைகள் தவிர்க்க முடியாதபடி ஆணைக்குழுவின் முன்னுள்ள முறைப்பாடுகளை புலனாய்வு செய்யவும் விசாரிக்கவும் தேவையான அரசியல் மற்றும் நிறுவன விருப்பமொன்று இல்லாதிதிருந்தது அல்லது தொடர்ந்து இல்லாமலுள்ளது என்ற முடிவுக்கு இட்டுச் சென்றது. ஆகையால் ஆணைக்குழுவின் செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகளினால்; மட்டுமல்லாது, பிரதானமாக ஆணைக் குழுவின் செயற்பாட்டுக்கு நிறுவன ஆதரவு இல்லை என 'முக்கிய பிரமுகர்களைக் கொண்ட அனைத்துலக சுயாதீனக் குழு' காண்பதனாலும் 'முக்கிய பிரமுகர்களைக் கொண்ட அனைத்துலக சுயாதீனக் குழு' இந்த நடைமுறையில் தான் வகித்த பங்கை முடிவுறுத்துகிறது. ('முக்கிய பிரமுகர்களைக் கொண்ட அனைத்துலக சுயாதீனக் குழு' பொது அறிக்கை. மார்ச் 6, 2008)

3.6. 2006ஆம் ஆண்டு இலங்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பொலிஸ் படை   தலைநகர் கொழும்பில் உள்ள தமிழ்பேசும் மக்களை மட்டும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட பல ஆட்கடத்தல் மற்றும் கப்பம் கோருதல் ஆகிய நிகழ்வுகள்; இடம்பெற்றபோது, வல்லமையற்றதாக மாறியது. 'மஹானாம திலகரத்தின ஆணைக்குழு' என அழைக்கப்பட்ட ஒரு தனிநபர் விசாரணை ஆணைக்குழுவிற்கு இவ்வாட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் பற்றி விசாரிப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டது. பெரும்பாலும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினராலேயே தாக்கல் செய்யப்பட்ட காணாமல் போனமை பற்றிய குற்றச்சாட்டுகளுள் பலவற்றை நிராகரித்து,  வழமையான நடைமுறைக்கு மாறாக, வெறும் வார்த்தை ஜாலம் மிக்க தொடரான பல பகிரங்க அறிக்கைகைளை இவ்வாணையாளர் விடுத்ததன் பின்னர், இதுவரை வெளியிடப்படாத ஓர் அறிக்கையை அவர் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருப்பதாகக் கருதப்படுகிறது. இன்றுவரை இந்தக் குற்றங்களுக்காக யாருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தவோ அல்லது அவர்களுக்கெதிராக வழக்குத் தொடரப்படவோ இல்லை.   

3.7. மேலும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்எல்ஆர்சி) இடைக்காலப் பரிந்துரைகள் அனைத்து நிறுவன ஆலோசனைக் குழுவொன்றின் மூலம் அமுல்படுத்தப்படுமென ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 17ஆவது மற்றும் 18ஆவது கூட்டத்தொடர்களில் இலங்கை அரசாங்கத்தால் மீண்டும் மீண்டும்; வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காப்பாற்றப்படவில்லை.

3.8. 2010 செப்டெம்பர் மாதம்; மேற்கொள்ளப்பட்ட இந்த மிதமான பரிந்துரைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர்ப்பட்டியலொன்றை வெளியிடுதல் மற்றும் துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைதல் ஆகியனவும் உள்ளடங்கியிருந்தன. எல்எல்ஆர்சி அதன் இறுதி அறிக்கையில், இப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து பின்வருமாறு கருத்துரை வழங்கியது: 'தனது இடைக்காலப் பரிந்துரைகள் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாததையிட்டு ஆணைக்குழு கவலை அடைகிறது. பயனுறுதிமிக்க பரிகார நடவடிக்கை மேற்கொள்வதில் ஏற்படும் தாமதம் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட வழிவகுத்து அதன் விளைவாக சட்டத்தின் ஆட்சியும் மீளிணக்க நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையும் தேய்வடைய காரணமாக அமைந்துவிடும்..' (எல்எல்ஆர்சீ அறிக்கை, பந்தி 8.190).

3.9. உண்மையில், எல்எல்ஆர்சி இனால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான பரிந்துரைகளுள் பல 1994ஆம் ஆண்டின் மேல், தென் மற்றும் சப்பிரகமுவ காணாமற் போனோர் ஆணைக்குழு, 1994ஆம் ஆண்டின் வடகிழக்கின் காணாமற்போனோர் ஆணைக்குழு, 1994ஆம் ஆண்டின் மத்திய, வடமேற்கு, வடமத்திய, மற்றும் ஊவா காணாமற்போனோர் ஆணைக்குழு மற்றும் சில ஆட்கள் விருப்பத்துக்கு மாறாக அகற்றப்படுதல் மற்றும் காணாமற்போதல் (நாடு முழுதும்) பற்றிய விசாரணைக்குழு (1998) முதலிய பல்வேறு ஆணைக்குழுக்களால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளைப் போன்றவைகளாகவிருந்தன என்பதை எல்எல்ஆர்சி இன் அறிக்கை தொடர்பான ததேகூ இன் ஆய்வறிக்கையின் அத்தியாயம் 2இல்; நாம் கோடிட்டுக் காட்டினோம். இங்கு தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் இல்லாதிருப்பதென்னவெனில், இப்பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான அரசியல் விருப்பமேயாகும்.

3.10. இத்தகைய அரசியல் விருப்பமின்மையானது, அரச விழாக்களில் தேசிய கீதம் தமிழிலும் சிங்களத்திலும் இசைக்கப்பட வேண்டும் என்ற எல்எல்ஆர்சி இன் ஒரு சாதாரண பரிந்துரை  அண்மையில் 2012 பெப்பிரவரி 4ஆம் திகதி இடம் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களில் புறக்கணிக்;கப்பட்டமையின் மூலம் உறுதியானது.  நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வித முயற்சியோ நேரமோ தேவைப்படாத இந்த எளிமையான  நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படாதது எல்எல்ஆர்சி இன் பரிந்துரைகள் தொடர்பான   அரசாங்கத்தின் எதிர்மறையான மனப்போக்கை எடுத்துக் காட்டுகிறது.

3.11. இவ்வாறு, 'உள்நாட்டில் உருவாக்கப்பட்டதொரு நல்லிணக்க நடைமுறையை  வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான நல்ல நிலையில் இலங்கை இருக்கிறது' என்று அமைச்சர் சமரசிங்க - ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு உறுதியளிக்கும் அதேவேளை, களத்தில் நிலவும் உண்மை நிலை அதற்கு மிகவும் மாறுபட்டதாகவே அமைந்துள்ளது.   உண்மையில், பின்வருமாறு கூறியிருப்பதாக 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி டெய்லிமிரர் பத்திரிகையில் அறிக்கையிடப்பட்டிருக்கும் சமரசிங்கவின் அமைச்சரவை சகாவான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்துரை இந்த யதார்த்தத்தை மேலும் சிறப்பாக பிரதிபலிக்கிறது: 'அரசாங்கத்தின் பாதை, இராணுவமயமற்றதாக்குதல், ஜனநாயக மயப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி எனும் தீர்வுக்கான ஒரு முப்பரிமாண அணுகுமுறையின்  அடிப்படையிலமைந்துள்ளது. பழைய வாய்ப்பாடுகள்தான் அரசியல் தீர்வுகளில் நம்பிக்கை வைத்தன. இச் சொற்பிரயோகம் அரச சார்பற்ற நிறுவனங்கள் பன்னாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மேற்குலக தூதரகங்கள் ஆகியவற்றினுள் மட்டுமே இருக்கிறது... எங்கள் அணுகுமுறை நிறைவேறுகையில் த.தே.கூ. இன் தமிழீழக் கனவோ முஸ்லிம் கட்சிகளின் கனவுகளோ பலிக்காது என்பதை இது உறுதிப்படுத்தும். சிங்கள தேசியவாத இயக்கம் இறுதியில் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றியுள்ளது. மற்றவர்கள் அனைவரும் பேசாமல் நாங்கள் சொல்வதுபோல் நடக்கவேண்டும்..' இந்த அமைச்சரும் வேறு அமைச்சர்களும் வேறு  அமைப்புக்களும் எல்எல்ஆர்சி இன் அறிக்கையை கண்டித்துள்ளதோடு, அதன் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படக் கூடாது என்று கோரியுமுள்ளனர். இதுவே இலங்கையிலிருக்கும் அத்தகைய நபர்களின் தொடரும் பல்லவியாகும்.

3.12 அமைச்சர் சமரசிங்க - ஜெனிவாவில் திரும்ப திரும்பப் பாடும் அதே பல்லவியையும் வழங்கும் வாக்குறுதிகளையும் அல்ல, அதற்கு மாறாக இந்த நிகழச்சி நிரலைத்தான் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் ஏற்றுத் திருப்தியுற வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

3.13 ஈபிடிபியை ஆயுதம் ஏந்திய ஒரு சட்டவிரோத குழுவாக இனங்கண்டதோடு, ஆயுதம் ஏந்திய துணைகுழுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று எல்எல்ஆர்சி பரிந்துரை செய்துள்ளபோதும், சட்டத்தின் ஆட்சிக்கு விரோதமான மனப்பாங்குடையவர் என்று எல்எல்ஆர்சியினால் கண்டிக்கப்பட்ட ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்முயற்சிக்கான அமைச்சரவை  அமைச்சராக தொடர்ந்து பணியாற்றுகிறார். உண்மையில், எல்எல்ஆர்சியின் பரிந்துரைகளை மேலும் அவமதிக்கும் வகையில், தற்போது நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கவுன்ஸிலின்  19ஆவது கூட்டத்தொடருக்கான இலங்கைத் தூதுக் குழுவின் ஓர் உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

3.14 அரசாங்கத்தால் ஜெனிவாவில் வெளியிடப்பட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல் தொடர்பான தேசிய செயல் திட்டம் இலங்கையிலுள்ள மனித உரிமை சமூகத்தின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இவர்களே இந்தச் செயல் திட்டத்தை வடிவமைப்பதில் தொடக்க கட்டங்களில் அறிவுரை வளங்கியவர்கள் ஆவர். எனினும்;, அவர்களது ஆலோசனைகளும் பரிந்துரைகளும் இப்போது பலவீனப்படுத்தப்பட்டுள்ள இந்த நகலில் தவிர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இதைவிடக் கவலை தருவது என்னவென்றால்,  இந்தத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவோ அல்லது இலங்கையின் பிரஜைகளுக்கு பகிரங்கமாக சமர்ப்பிக்கப்படவோ இல்லை என்பதேயாகும். இவ்வாறு செய்யத் தவறியமையானது, இந்தத் திட்டம் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கும் பேணிப் பாதுகாப்பதற்குமான ஒரு வழிகாட்டல் திட்டம் அல்ல என்பதும் மாறாக அனைத்துலக அரங்கில் மனித உரிமைகள்  பற்றிய கேள்விகளைச் சமாளிப்பதற்கான ஒரு வெறும் உத்தியே என்பதுமான நியாயமான அச்சத்தை உருவாக்கியுள்ளது.

3.15 கடந்த சில மாதங்களில்கூட ஏற்பட்ட கொலை மற்றும் ஆள் கடத்தல் சம்பவங்கள், வீதிகளிலும் வர்த்தகத்திலும் வியாபாரத்திலும் குடிமக்களின் நாளாந்த வாழ்க்கையிலும் என்று இப்படி எல்லா இடங்களிலும் நிர்வாகத்தில் இராணுவத்தின் ஊடுருவல்மிக்க பிரசன்னம், வடக்கில் பயனுறுதிமிக்க சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த மறுத்தல், தனியார் காணிகளை பொதுநோக்கத்திற்கென பறித்தல், இனப்பாகுபாடுமிக்க நோக்கங்களுக்காக அரச காணிகளை தான்தோன்றித்தனமாக பயன்படுத்தல், மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டிய பகுதிகளிலெல்லாம் பெரும் இராணுவ முகாம்களை அமைத்தல் ஆகிய இவையெல்லாம் இலங்கையின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரம் எவ்வாறு பாரதூரமாக ஆபத்துக்குள்ளாக்கப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. 

3.16 கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், 32இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்ட அடையாளங்களுடன் குறைந்தது 10 சடலங்கள் பொது இடங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. வடக்கில் வாழும் பெண்கள் - துணை ஆயுதக்குழுக்களால் நடத்தப்படும் விபசார நடவடிக்கைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் அதிகளவில் ஆளாகும் ஆபத்துக்குள்ளாக்கப்படும் அதேவேளை, அவர்களுள் பலர் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை திருப்திப்படுத்துபவர்கள் என்ற பாத்திரம் வகிக்குமாறு பலவந்தப்படுத்தப்படுகின்றனர்.

3.17 கடந்த கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமது தேர்தல் ஆணைகள் மூலம் மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய அவர்தம் ஜனநாயகக் குரல் அவர்களது கௌரவம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  தாக்குதல்களை தொடர்ச்சியாக எதிர்த்து நின்றது. இப்போது அரசாங்கம் அந்தக் குரலை மௌனமாக்க முயன்று வருகிறது. திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துதல், இராணுவ முகாம்களை நிறுவுதல், தமிழ் மக்களை சிவில் நிர்வாக சேவையில் இருந்து திட்டமிட்டு ஒதுக்கிவைத்தல் ஆகியவற்றின் மூலம் வடக்கு - கிழக்குப் பகுதிகளின்    குடித்தெகை இனப்பரம்பலை மீள மாற்றமுடியாதவாறு மாற்றியமைக்கும்;;; முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. எனவே, 'வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சிவில் நிர்வாகம் தமிழ் - முஸ்லிம் மக்களின்; இன விகிதாசாரத்தை பெரிதும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது' என்று அமைச்சர் சமரசிங்க கூறுகின்றபோதும், யதார்த்தம் என்னவென்றால் சிவில் நிர்வாகத்தில்; 94 வீதமானோர் சிங்களவர்களாவர் என்பதாகும். அத்துடன், ஐநா மனித உரிமைகளுக்கான 2008ஆம் ஆண்டுக்குரிய உலகளாவிய காலமுறை மீளாய்வில் அரசாங்கம் சமர்ப்பித்த தரவின்படி, நாட்டின் சனத்தொகையில் சிங்களவர் 74 வீதமாகும். இவ்வாறு, சிவில் நிர்வாகத்தில் வெறும் 6 வீதமானோர்தான் தமிழ் பேசும் மக்களாக உள்ளனர். மேலும், 13ஆவது திருத்தத்திற்கமைய நிறைவேற்று அதிகாரங்களை கையாள்பவர்களும் நேரடியாகவே ஜனாதிபதிக்கு பதில்கூறவேண்டியவர்களுமான வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த இளைப்பாறிய இராணுவ அதிகாரிகளாவர். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் தமிழ் பேசுபவர்களாகவே இருந்தபோதிலும் இம் மாவட்டங்களின்;; அரசாங்க அதிபராகவும் மாவட்ட செயலாளராகவும் இருப்பவர்கள் இளைப்பாறிய சிங்கள  இராணுவ அதிகாரிகளாவர். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் மாகாண மட்டத்திலும் மாவட்ட மட்டத்தில் மேலும் பல முக்கியமான பதவிகளைச் சிங்களம் பேசும் அதிகாரிகளே வகிக்கின்றார்கள். மேலும், அரசாங்கம் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களை அண்மையில் ஆட்சேர்ப்பு செய்ததாக சொல்லிக்கொண்டிருந்தாலும், தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மொத்த காவல்துறையினரில் 2 வீதத்திற்கு குறைவானதாகும். 2003இல் இருந்து இடம்பெறும் இனப்பாகுபாட்டை ஒழிப்பது பற்றிய குழுவிற்கு 10ஆவது கால வாரியான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தவறியமைக்கு இவைதான் காரணமாக இருக்கலாம்.

3.18. திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியார் பற்று என்னும் உப அரசாங்க அதிபர் பிரிவில் இடம்பெற்றுள்ள இன குடிப்பரம்பல் மாற்றம் இந்த விடயத்தை விளக்குவதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். 1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கொட்டியார்பற்றுப் பிரிவின் இனப் பரம்பலை பின்வருமாறு பதிவு செய்துள்ளது: 3,027 தமிழர்கள், 1,673 முஸ்லிம்கள், 11 சிங்களவர்கள். இன்று, கொட்டியார்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவு பின்வரும் மூன்று பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 'மூதூர், சேருவில, ஈச்சிலம்பற்றை' தமிழ் மக்களின் மொத்த சனத்தொகை 43,638, மொத்த முஸ்லிம் மக்கள்  தொகை 32,275, மொத்தச் சிங்கள மக்கள் தொகை 8,586. 13,886 பேர் மாத்திரமே வாழும் சிங்கள பெரும்பான்மை சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்கு 377 சதுர கிலோமீற்றர் காணி வழங்கப்பட்டிருக்கும் அதேவேளை, 11,923 பேர் வாழும் தமிழ் பெரும்பான்மை ஈச்சிலம்பற்றை பிரிவுக்கு வெறும் 98 சதுர கிலோமீற்றர் காணி மாத்திரமே வழங்கப்படிருக்கிறது. பெரும்பான்மையாகத் தமிழ் பேசும் மக்கள் வாழும் 63,690 பேர் கொண்ட மூதூர் பிரிவுக்கு 179.4 சதுர கிலோமீற்றர் காணி மாத்திரமே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில்; வாழும் சிங்களவர்களுள் மிகப் பெரும்பான்மையினர் சுதந்திரத்தின் பின்னர் வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு குடியேற்றப்பட்டவர்களாவர் என்பதோடு, சிங்கள பெரும்பான்மை சேருவில பிரிவுக்கு மிக அதிகளவு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மேலும் அதிக சிங்களக் குடியேற்றத்துக்கு வசதிசெய்வதற்கேயாகும். வேறு பகுதிகளிலும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகளை நிர்ணயம் செய்வதில் இதேமுறை மீண்டும் பின்பற்றப்பட்டுள்ளது.

3.19 அரசாங்கமும் இராணுவமும் வடக்கு, கிழக்குப் பகுதிகளின் கலாசார, மொழி, மற்றும் சமய ஆக்கமைவை மாற்றியமைப்பதிலும் மேலாண்மையாக இருக்கும் தங்கள் கலாசாரத்தை இந்தப் பகுதிகளில் பலாத்காரமாக திணிப்பதிலும் அயராது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. பல இந்து வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதும் புத்தம் புதிய பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப் படுவதும் இதற்குச் சான்றாக அமைகின்றன.

3.20. எனவே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தங்களுக்குப் போதியளவு நேரமும் அவகாசமும் தரப்படவில்லை என்னும் அரசாங்கத்தின் வாதம் முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இந்த அறிக்கையிலேயே கூறப்பட்டவாறு, சிறந்த பரிந்துரைகளுள் பெரும்பாலானவை பல வருடங்களாக பொது மக்கள் பார்வையில் இருந்துவருகின்றன. அரசாங்கம் இப்போது கோருகின்ற நேரமும் அவகாசமும் எல்எல்ஆர்சீ யின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக அல்ல, மாறாக, வடக்கு கிழக்கின் இனப் பரம்பலை மீண்டும் மாற்றியமைக்க முடியாதவாறு நிரந்தரமாக மாற்றி அமைக்கும் தனது நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கேயாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது.

4. போர் நடத்துவதற்காகக் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமையும் உண்மையை மறைப்பதும்
4.1. போரின் இறுதிக்கட்டத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் அளவிலான பொது மக்கள்  உயிர்ச் சேதமானது, இலங்கை அராங்கம் தனது சர்வதேச சட்டக் கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறியதன் நேரடி விளைவு மாத்திரமல்ல, 2008ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும் 2009ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலும் சர்வதேசச் சமூகத்திடம் அது அளித்த பிரத்தியேக உறுதி மொழிகளை மீறியதன் விளைவுமாகும். போரின் போது விடுதலைப் புலிகளின் நடத்தை எவ்வளவு தூரம் கண்டிக்கத்தக்கதாகவும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை மீறுவதாக அமைந்திருந்தாலும், அது அரசாங்கத்தை அதன் நடத்தைக்கான பொறுப்பிலிருந்து  குற்றமற்றதாக நிரூபிக்காது.

4.2. அரசாங்கத்தினால் வழங்;கப்பட்ட உறுதிமொழிகள் இருந்தும், அங்கு அக்கிரமங்கள் நடந்து கொண்டிருந்ததை, வன்னியில் அடைபட்டுக் கிடந்த மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கொடுமைகள் நிழ்ந்தபோதெல்லாம் நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் குரலெழுப்பி எடுத்தியம்பியது. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் ததேகூ தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கூறினார்: 'அங்கே தொடர்ச்சியான விமானக்; குண்டு வீச்சுகள் இடம்பெறுகின்றன. தொடர்ச்சியான விமானக்; குண்டு வீச்சுகள் சில வேளைகளில், நாளொன்றுக்கு   பல குண்டுவீச்சுகள் என்ற வகையில் இடம்பெறுகின்றன. தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. எல்லாமே பொதுமக்கள் வதியும் இடங்களில். இது உலகின் வேறு எந்தப் பகுதியிலாவது நடக்கிறதா? மக்கள் வதியும் இடங்களில் ஆகாய மார்க்கமாக குண்டுகள் வீசப்படுகிறதா? உலகின் வேறு எங்காவது பல் குழல் எறிகணைகள் மற்றும் கனரக பீரங்கிகள் மக்கள் வதியும் பகுதிகளுக்குள் குண்டு மழை பொழிகின்றனவா? மக்கள் ஏராளமான அளவில் நித்தம் நித்தம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கே சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாசம் விளைந்து கொண்டிருக்கிறது. அழிவு நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் வீடுகள் அழிக்கப்படுகின்றன. நாங்கள் எங்கள் வாழ்விடங்களையும் தொழில்சார் சொத்துகளையும் இழந்து கொண்டிருக்கிறோம். எமது விவசாய உபகரணங்கள், எங்கள் மீன்பிடி உபகரணங்கள், எங்கள் கால்நடைகள்;, எங்கள் தோட்டங்கள் எல்லாம் அழிந்து விட்டன. நாங்கள் வறுமை நிறைந்ததும்; ஆதரவற்றதுமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். (ஹான்சாட், 21 ஜனவரி 2009).

4.3. கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்குப் பதிலளிக்குமுகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட பதில் அறிக்கையில் 2008ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வன்னியில் அகப்பட்டிருந்த மக்களின் தொகை 360,000 இற்கும் 429,000 இற்கும் இடையில் இருந்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. 282,380 பேர் வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்ததை வைத்துப் பார்க்கும்போது காணாமற் போனோரின் எண்ணிக்கை 75,000 இற்கும் 146,000 இற்கும் இடையில் இருக்க வேண்டும்.

4.4. போரின் இறுதிக் கட்டத்தின் போது, இலங்கை அரசு யுத்தகளத்தில் அகப்பட்டுக் கொண்ட மக்களின் எண்ணிக்கை 70,000 ஐத் தாண்டவில்லையென்றும், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மனிதாபிமான தேவைகளை வழங்கிக் கொண்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் சபைக்கும் உலகுக்கும் உறுதி கூறிக் கொண்டிருந்தது. இறுதியில், எப்படியோ, 282,380 மக்கள் வன்னியிலிருந்து வெளியே வந்தார்கள். ஆகவே, அரசினால் சொல்லப்பட்ட 70,000 என்னும் எண்ணிக்கை வேண்டுமென்றே சொல்லப்பட்ட ஒரு குறைவான மதிப்பீடாகும்.

4.5 இலங்கையின் பொறுப்புக் கூறல் பற்றிய ஐநா பொதுச் செயலாளருடைய நிபுணர் குழு இந்த குறைவான மதிப்பீட்டை, மக்களைப் பட்டினி போடும் போர்க்குற்றம் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகள் எழுவதற்கு வழிவகுப்பதாகவும் இந்தச் செயலின் பரந்துபட்ட மற்றும் திட்டமிட்ட தன்மையினால் அது மனித குலத்திற்கெதிரான வேருடன் அழித்தல் மற்றும் சித்திரவதை ஆகியன தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகள் எழுவதற்கும் வழிவகுப்பதாகவும் விபரித்தது.

4.6 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னே வழங்கப்பட்ட முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரின் சாட்சியம், வன்னியில் சிக்குண்டிருந்த மக்களின் என்ணிக்கை 360,000 ஐத் தாண்டி இருந்தது என்பதை அரச அதிகாரிகள்கூட  அறிந்திருந்தார்கள் என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியது. குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் 2004, 2005, 2007ஆம் ஆண்டுகளின் புள்ளி விபர கை நூல்களின் முடிவுகள் திரட்டப்பட்டபோது, போருக்கு முந்திய வருடங்களில்; வன்னியில் வசித்த மக்களின் எண்ணிக்கை 402,000 இற்கு மேலாக இருந்ததென்பதை ததேகூ குறிப்பிடுகிறது.  இந்த ஆதாரங்கள் எல்லாம், அரசாங்கம் 70,000 இற்கும் குறைவான அளவு மக்களே வன்னியில் அகப்பட்டிருந்ததாக உண்மையற்ற முறையில் கூறிக் கொண்டிருந்தாலும், இவ்வெண்ணிக்கை 350,000ஐ விடக் கூடுதலானது என நம்புவதற்கு அதற்கு தாராளமான காரணங்கள் இருந்தன என்பதோடு, உண்மையில் அதனை அரசாங்கம் அறிந்துதான் இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

4.7 யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தாம் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளின் தன்மை பற்றியும் அரசாங்கம் உண்மை பேசுவதாக இல்லை. பீபீசீ ஹார்ட் டோக் செவ்வியொன்றில்; 2009 மார்ச் 02ஆம் திகதி ஜெனிவாவிலிருந்து பேசுகையில் அமைச்சர் சமரசிங்க - கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதன்; நியாயபூர்வதன்மை பற்றிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்தார். அமைச்சர் கூறினார்: 'கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு ஒருவித நியாயமுமில்லை. உண்மையில், சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் கனரக ஆயுதங்கள் எதனையும் பயன்படுத்துவதில்லை என்ற தீர்க்கமான முடிவை ஆயுதப்படைகள் மேற்கொண்டன. நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. நாங்கள் மனிதனுக்கு மனிதன், வீட்டுக்கு வீடு, தெருக்குத் தெரு என்ற வகையில் சண்டையிடுகிறோம். பயங்கரவாதம் அழித்தொழிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு நாங்கள் செல்லும் வழி இதுதான். ஏனெனில், எல்ரீரீஈ தற்போது 48 ச.கிமீ எனும் ஒரு மிகச் சிறிய பகுதியில் கட்டுண்டு கிடக்கிறது. அதனால் நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்த முடியாது..'

4.8 எனினும், எல்எல்ஆர்சீ கூட உறுதிப்படுத்துவதுபோல், போரின் இறுதிக்கட்டங்களின்போது  2009 மார்ச் மாதம் போர் முடிவடையும் வரை உண்மையில் கனரக ஆயுதங்கள் 'போர் தவிர்ப்பு வலய'த்தினுள் பயன்படுத்தப்பட்டன. இலங்கையின் பொறுப்புக் கூறல் பற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு நிறைவேற்று சுருக்கத்தின் 11ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டவாறு, அரசாங்கம் 'தனது சொந்த புலனாய்வு முறைமையினாலும் ஐக்கிய நாடுகள், ஐசீஆர்சீ மற்றும் ஏனைவர்களால் விடுக்கப்பட்ட அறிவித்தல்களினாலும் வழங்கப்பட்ட தாக்கம் பற்றிய தகவல்களை கொண்டிருந்தும் எறிகணை தாக்குதல் நடத்தியது. போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற பெரும்பாலான பொதுமக்கள் உயிரிழப்புகள் அரசாங்கத்தின் எறிகணைத் தாக்குதலால் ஏற்பட்டவையாகும்..'

4.9 அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு தான் வழங்கிய வாக்குறுதிகளை மமதையுடன் உதாசீனம் செய்து, பெரும்; பொதுமக்கள் உயிரிழப்பை ஏற்படுத்திய இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதில் விடாப்பிடியாகவிருந்தது.

4.10 பொதுமக்கள் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8,000 என ஒரு 'சனத்தொகை மதிப்பீடு' மதிப்பிட்டிருப்பதாக அரசாங்கம் இப்போது கூறுகிறது. எனினும், இச்சனத்தொகை மதிப்பீட்டை மேற்கொள்வதில் ஈடுபட்டிருந்தவர்கள் பின்பற்றிய முறைமை கடும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது. 1981இலிருந்து வடக்குக் கிழக்கில் எவ்வித உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பும் மேற்கௌ்ளப்படவில்லை. 2011இன் ஆரம்பத்தில், ஆயுதப்படைகளைச் சேர்ந்தவர்கள் சிவில் நிர்வாக உறுப்பினர்களுடன் சேர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குடும்பங்களிலிடம் சட்டவிரோத தகவல் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தமை ததேகூ இன் கவனத்துக்கு வந்தபோது, ததேகூ ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வித சட்டவிரோத தகவல் திரட்டலும் இடம்பெறுவதை நிறுத்துமாறு கோரி உச்ச நீதிமன்றத்துக்கு மனு தாக்கல் செய்தனர் (எஸ்சீ எஃப்ஆர் 73/2011). உச்ச நீதிமன்றத்தில்,  அரசாங்க உத்தியோகத்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரதி மன்றாடி நாயகம் உடனடியாக அத்தகைய தகவல் சேகரிப்பை நிறுத்துவதாக வாக்குறுதியளித்தார்.

4.11 இந்த வாக்குறுதியை நேரடியாக மீறும் வகையில் இந்த 'சனத்தொகை மதிப்பீட்டை'  மேற்கொள்வது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பது மட்டுமன்றி, வடக்குக் கிழக்கில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்திருப்பதையும் அப்பகுதிகளின் தீவிர இராணுவமயமாக்கலையும் எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. மேலே விபரிக்கப்பட்ட நிலைமைகள் 'சனத்தொகை மதிப்பீட்டு' நடைமுறையின் நம்பகத்தன்மையை குழி தோண்டி புதைக்கின்றன. மேலும், மேலே சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை கொண்டு பார்க்குமிடத்து சொல்லப்பட்ட 'சனத் தொகை மதிப்பீட்டின்' பெறுபேறு மிகவும் சந்தேகத்துக்கிடமானதாகவும் கேள்விக்குரியதாகவும் உள்ளது.

4.12 முழு இலங்கையும் அவசரமாக கவனிக்க வேண்டிய கடும் யதார்த்தம் என்னவெனில், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக தோன்றிவரும் சாட்சியங்களுக்கு விளக்கமளிக்க இப்போது திண்டாடிக்கொண்டிருக்கும் அரசாங்கம் அப்போது  சாட்சிகள் இன்றியே யுத்தம் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொண்டது என்பதாகும். 2008 செப்டெம்பர் 05ஆம் திகதி வன்னி மீதான இறுதித் தாக்குதலுக்கு சற்று முன்னதாக, வன்னியில் நிரந்தர வதிவாளர்கள் அல்லாத அரசசார்பற்ற  மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரையும் தமது சொத்துக்களை மீளப்பெற்றுக்கொண்டு உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு கட்டளையிட்டது. ரகசியத்தை பேணுவதற்கு கடமைபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு மட்டுமே அங்கு தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டது. மேலும், செல்லப்பட்ட அந்தக் கட்டளை எந்த மனிதாபிமான பணியாளர்களும் ஓமந்தை காவலரணுக்கு அப்பால் செல்வதையும் தடை செய்தது. இறுதியில் 2009 பெப்ரவரி மாதம் ஐசீஆர்சீகூட வன்னியிலிருந்து அகன்று செல்லுமாறு வற்புறுத்தப்பட்டது. இவ்வாறு உதவிப் பணியாளர்கள் அனைவரும் வன்னியிலிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டமை முற்றுகைக்குள்ளாகியிருந்த மக்களை பயங்கரமான பட்டிணிக்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கியதுமட்டுமின்றி - குறிப்பாக, வன்னியின் மொத்த சனத்தொகையை அரசாங்கம் பெரிதும் குறைத்து மதிப்பிட்டமையினால்-, குற்றங்கள் தொடர்பாக பின்னர் வரக்கூடிய எல்லா சுயாதீன சாட்சிகளையும் அங்கிருந்து அகற்றுவதற்கும் எதிர்பார்த்தது.

4.13 யுத்த களத்திற்கு ஊடகவியலாளர்களையும் பத்திரிகையாளர்களையும் அனுமதிக்காததும் அரசாங்கம் போரை நடத்தும் விதம் குறித்த தகவல்கள் வெளி உலகத்திற்கு தெரியவருவதை தடுப்பதற்காகவே திட்டமிடப்பட்டது. இவ்வாறு ஊடகவியலாளர்கள் மௌனமாக்கப்பட்டமை  அவர்கள் வன்னிக்குச் செல்வதைத் தடுப்பதோடு நின்றுவிடவில்லை. வடக்கிலுள்ள நிலைமைகள் பற்றி சுதந்திரமாக அறிக்கையிட முயன்ற பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது திட்டமிட்டு குறிவைத்தமையானது, அரசாங்கத்தின் நடத்தை வெளிக் கொணரப்படுவதையும் விமர்சிக்கப்படுவதையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், கடத்தப்பட்டனர். உண்மையில், 2006ஆம் ஆண்டளவில் எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் என்ற ஒரு சர்வதேச ஊடக உரிமைகள் நிறுவனம் இலங்கையை பத்திரிகையாளர்களுக்கான உலகின் மிக ஆபத்தான நாடாக இனங்கண்டிருந்தது.  மேலும், அரசாங்கத்திற்கு பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தும், வன்னியில் சிக்குண்டிருந்த  தொகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட அப்பகுதிகளுக்கு செல்வதிலிருந்து தடுக்கப்பட்டனர்.

4.14 பின்னர் பொது மக்கள் யுத்த வலயத்திலிருந்து வெளியே வந்தபோது, அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் அடைக்கப்பட்டதோடு, வெளி உலகத்தோடு எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்வதிலிருந்தும் தடுக்கப்பட்டனர். 2009 ஜூலை மாதம் அவர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஓர் அடிப்படை உரிமைகள் மனு (எஸ்சீ எஃப்ஆர் 521/2009) அவர்களது தடுத்து வைப்பை எதிர்த்தது. இன்று முப்பத்திரெண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், நீதிமன்றம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க அனுமதிக்குமா என்ற அதன் தீர்ப்பை இன்னும் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

4.15 அமைச்சர் சமரசிங்கவின் அண்மைய அறிக்கை பொறுப்புக்கூறல் பற்றி மிக சுருக்கமாகவே குறிப்பிடுகிறது. எல்எல்ஆர்சீ யினாலும் செனல்4 தொலைக்காட்சி காணொளியினாலும் மேலும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இராணுவமும் கடற்படையும் விசாரணை நீதி மன்றங்களை ஏற்படுத்தியிருந்ததாக அவர் கூறினார். இராணுவ கட்டமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகள் குற்றங்கள் இடம் பெற்றதென்பதை அழுத்தமாக மீண்டும் மீண்டும் மறுத்திருந்தும், இராணுவத்துக்கு அதன் சொந்த நடத்தை பற்றி விசாரிக்கும் பணியை வழங்குவது, போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான  பற்றுறுதி அரசாங்கத்திற்கு அறவே இல்லாதிருப்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

5. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்ஸிலின் நடவடிக்கையின் முக்கியத்துவம்
5.1 இலங்கையில் போருக்குப் பின்னரான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான  வாய்ப்புக்கள் படிப்படியாக நழுவிக்கொண்டிருப்பதால் ஐநா மனித உரிமைக் கவுன்ஸிலின் உறுப்பினர்கள் கடந்த கால அவலங்கள் மீண்டும் தலைதூக்காமலிருப்பதற்கு வேண்டிய நடவடிக்கையை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

5.2  நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருப்பதும் ஆழமாக வேரூன்றியிருப்பதுமான தேசியப் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுப்பதை பேரவை உறுதிப்படுத்துவதோடு, மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி பற்றி தீவிர அக்கறை செலுத்த வேண்டும்.

5.3  நாட்டில் தற்போது நிலவும் தண்டனையிலிருந்து தப்பும் பாதுகாப்புக் கலாசாரத்தை பொறுப்புக்கூறும் முறைமையாக மாற்றுமுகமாக சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றின் பாரதூரமான மீறல்கள் தொடர்பான நீதி மற்றும் உண்மைத்தன்மை பற்றிய விடயங்கள்மீதும் பேரவை முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.  இந்த அவை, உண்மை மற்றும் நீதி தொடர்பான அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மானிடச் சட்டம் கடுமையாக மீறப்படுவதையிட்டு கவனம் செலுத்த வேண்டும்.

5.4 இலங்கை அரசு தனக்கு நேரமும் இடைவெளியும் தரப்பட்டால்; அரசியல் தீர்வுக்கான தேவை, மனித உரிமை மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றை மேம்படுத்தல் ஆகியவற்றை கையாளும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு நடைமுறையை உருவாக்குவதாக தொடர்ச்சியாக கூறிவருகிறது. இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அது வழங்கிய தனது சொந்த கடப்பாடுகளையே மதிப்பதற்கான அரசாங்கத்தின் விருப்பமின்மையைக் கொண்டே இக்கூற்று மதிப்பிடப்படவேண்டும். இந்தக் கடப்பாடுகளில் சில நடைமுறையில் எந்த முன்னேற்றமுமின்றியே திரும்பவும் திரும்பவும் பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது.

5.5 மேலும், குத்துக்கரணமடிக்கும் அரசாங்கத்தின் நடத்தை, நேரமும் இடமும் தரப்பட்டால், அந்த நேரமும் இடமும் அது தான் வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக திமிருடன் மேற்காண்டிருக்கும் அதன் நிகழ்ச்சி நிரலை தொடர்வதற்கே பயன்படுத்தப்படும். அந்த நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களது ஜனநாயகக் குரலை மௌனமாக்குதல், மத்தியில் அதிகாரத்தை குவித்தல், ஓர் அரசியல் தீர்விற்கான தேவையை மறுக்கும் வகையில் வடக்குக் கிழக்கின் மொழி, கலாசார மற்றும் மத ஆக்கமைவை மாற்றியமைத்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

5.6 இலங்கை தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டமை கவுன்ஸில் இப்போது நடவடிக்கை எடுக்க தேவைப்படுத்தியுள்ளது. சர்வதேச சட்டத்திலுள்ள  ஒன்றுக்கொன்று ஈடுசெய்தல் என்ற கோட்பாடு, ஓர் அரசாங்கம் தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கமைய நீதியை நிலைநாட்ட நம்பக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க விரும்பாவிடில் அல்லது முடியாவிடில் சர்வதேச பொறிமுறையை செயல்படுத்தப்பட வேண்டும் என்று விதித்துசைக்கிறது.

5.7 ததேகூ என்ன சொல்கிறதென்றால், கவுன்ஸில் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறினால் அது மாற்றத்துக்கான கடப்பாட்டை வெளிக்காட்டாத மற்றும் சீர்திருத்தத்துக்கான வெற்று வாக்குறுதிகளை மட்டும் வழங்கிவிட்டு தமது கடப்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் அரசாங்கங்களுக்கு உதவுவதாகவே அமையும் என்று ததேகூ கூறுகிறது. இது,  அபாயகரமானதும் தீங்கு விளைவிக்கக் கூடியதுமான தண்டனையில் இருந்து தப்புவதற்கான பாதுகாப்பை கவுன்ஸில் அங்கீகரித்தமைக்கான ஒரு முன்மாதிரியை நிறுவிவிடும்.

5.8 எனவே ததேகூ இலங்கையில் சமாதானம், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு கவுன்ஸிலினால் அதன் 19ஆவது கூட்டத்தொடரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அவசியமான தொடக்கமாகக் கருதி முழுமையாக ஆதரிக்கிறது.

5.9 அக்கவுன்ஸிலினால் எடுக்கும் நடவடிக்கை இலங்கையில் வாழும் சகல மக்களது நலன்களுக்கும் உகந்ததாக அமையும் என ததேகூ நம்புகிறது.

இரா.சம்பந்தன்
தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

No comments:

Post a Comment