Translate

Wednesday 25 April 2012

திருக்கோணேஸ்வரத்தை பௌத்த சூழலாக்க முயற்சி- இந்துமா மன்றம் கண்டனம்!


பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதும், இராணுவத்தின ரினதும் ஆதரவுடன்  எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு அகில இலங்கை இந்து மா மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து மா மன்றத்தின் தலைவர் வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் ஆகியோர் கைழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்து மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற எந்த ஒரு முயற்சியையும் பொறுக்க முடியாது,

இன்றைய தமிழ் தினசரி ஒன்றில் ‘பிள்ளையார் கோவிலை அகற்ற உத்தரவு – திருமலையில் தமிழர்கள் கொந்தளிப்பு’ எனும் தலைப்பில் பிரசுரமான செய்தி கண்டு அதிர்ச்சியும் மன வேதனையும் அடைகின்றோம்.
60 வருட கால பெருமைவாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை அகற்றுமாறு அரசாங்கமோ, எந்த ஓர் அதிகார சபையோ உத்தரவு பிறப்பிக்க இந்நாட்டின் சட்டமோ அல்லது எந்த நீதி நியாயமோ இடம் தரவில்லை.
தம்புள்ளையில் இருக்கும் இந்து ஆலயத்தை அகற்ற வேண்டும் என்ற கோஷம் சம்பந்தமான செய்தியறிந்தும் வேதனை அடைகிறோம்.
பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை அறிந்தும் கவலையடைகின்றோம்- கண்டிக்கிறோம்.
இந்த நாட்டில் சம உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழும் உரிமை இந்து மக்களுக்கு உண்டு. இந்தச் சுதந்திரத்தை பறிகொடுக்க இந்த நாட்டின் எந்தவோர் இந்துவும் தயாரில்லை. இந்து மக்களின் சுதந்திரத்தை பாதிக்கின்ற எந்தவொரு முயற்சியையும் பொறுக்க முடியாது.
இந்த நாட்டின் மக்கள் அனைவரது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்திருக்கின்ற ஜனாதிபதியோ அவரின் அமைச்சர்களோ, அமைச்சின் செயலாளர்களோ இப்படியான மதத்துவேஷ நடவடிக்கைகளுக்கு கட்டளை பிறப்பித்திருப்பார்களென்று எம்மால் நம்ப முடியாது. உடனடியாக இந்த துவேஷ நடவடிக்கைகளை நிறுத்துமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சகல தமிழ் அரசியல் தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்’

No comments:

Post a Comment