ஜெனிவா, நியுயோர்க், வொசிங்டன் என்று உலகில் எங்கிருந்து வரும் அழுத்தங்களையும் எதிர்கொள்வதற்கு தமது அரசாங்கம் தயாராகவே இருப்பதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.


கொழும்பில் நேற்று அரசஅதிகாரிகள், கூட்டுத்தானபங்களின் தலைவர்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அரசியல் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை அடுத்து சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள ‘ஒன்றுபட்ட நாடு‘ என்ற பரப்புரை நிகழ்வுத்தொடரின் ஒரு பகுதியாக இந்தக்கூட்டம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, “இன்று சிறிலங்கா பலத்த சவால்களைச் சந்தித்து நிற்கிறது. ஆனால் இத்தகைய சவால்கள் எமக்குப் புதியவையல்ல.

சிறிலங்காவை ஒற்றையாட்சி நாடாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட காலத்தில் இருந்து, நாடு பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது. ஆனாலும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிராக ஒன்றுபட்ட குரலை எம்மால் வெளிப்படுத்த முடிந்தது.

எரிபொருள் விலை உயர்வு, அனைத்துலக நிதி நெருக்கடி காரணமாக வங்கிகள் மூடப்பட்டமை, பயங்கரவாதம் போன்ற சவால்களை நாம் எதிர்கொள்ள நேர்ந்தது.  அணிசேரா கொள்கை மூலம் இவற்றை எம்மால் எதிர்கொள்ள முடிந்தது. தொடர்ந்தும் நாம் அணிசேராமல் இருப்போம். இதனால் எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ள நாம் தயார்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.