Translate

Sunday 13 May 2012

பதியுதீனின் கருத்து தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது- வினோ எம்.பி. _


  மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப் ஆண்டகை தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய விதம் ஒட்டு மொத்த கத்தோலிக்க மக்களின் மனதையும் புண்படுத்தியுள்ள செயல் எனவும் அமைச்சரின் கூற்றிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.


அமைச்சர் றிஸாட் பதியூதீன் மன்னார் ஆயர் குறித்து பாராளுமன்றத்தில் கதைத்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தம்புள்ளையில் உள்ள பள்ளிவாசல் தாக்குதலில் புத்த பிக்குமார் மிகவும் மோசமாக நடந்து கொண்டது போல் மன்னாரில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை நடந்து கொள்வதாக அமைச்சர் றிஸாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் விவாதித்தார். தம்புள்ளையில் பிக்குகள் பள்ளிவாசலைத் தாக்கினர்கள்.ஆனால் மன்னாரில் ஆயர் எந்தப் பள்ளிவாசலை இடித்துள்ளார்? என்பதனை நான் அமைச்சரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மன்னாரில் உள்ள முஸ்ஸிம்களின் காணிகளை எங்கே ஆயர் பறித்துள்ளார் என்பதனையும் அமைச்சரிடம் நான் பகிரங்கமாகக் கேட்க விரும்புகின்றேன்.

அமைச்சர் றிஸாட் பதியூதீனின் கருத்து மன்னார் மாவட்ட கத்தோலிக்க மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்துகின்ற ஒரு பேச்சாகக் காணப்படுகின்றது. மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்கள் மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இன,மத ரீதியில் எதனையும் பார்ப்பதில்லை. மன்னார் மறை மாவட்டம் மட்டுமன்றி சகல கத்தோலிக்கர்களும் கடவுளுக்கு சமனாக அவரை மதிக்கின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் றிஸாட் பதியூதீன் அவர்களின் பிற்போக்குத்தனமான, படு மோசமான கருத்துக்கள் போன்று கிழக்கில் உள்ள முஸ்ஸிம் அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுவதில்லை.அவர்கள் உண்மையான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் இருந்து தெரிய வருகின்றது அமைச்சர் 'பங்கோரத்'அரசியலை காட்டுகின்றார் என்று.நடந்து முடிந்த தேர்தல்களின் போது தமிழ் அதிகாரிகளையும்,தமிழ் மக்களையும் அமைச்சர் ஆசை வார்த்தைகளையும்,போலி வாக்குறுதிகளையும் வழங்கி வாக்களிக்க வைத்தார்.ஆனால் தேர்தலின் பின் அமைச்சரினால் தமிழ் அதிகாரிகளும்,தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் அமைச்சருக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கெண்டனர். தற்போது அமைச்சர் அவர்கள் முஸ்ஸிம் மக்களின் வாக்குகளை மட்டுமே நம்பி இருக்கின்றார்.

இதனாலேயே இப்படிப்பட்ட வன்முறைகளை தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் தூண்டி அரசியல் குளிர் காய்கின்றார்.

1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தம்மை துரத்தி விட்டதாக சகல மேடைகளிலும் பேசி அரசியல் செய்து வருகின்றார்.

இப்படிப்பட்ட கருத்துக்கள் தமிழ்,முஸ்ஸிம் மக்களிடையே பிரிவினையையும்,பகைமையையும் ஏற்படுத்தி வருகின்றது.

அண்மையில் மன்னாரில் இடம்பெற்ற சர்வமத நிகழ்வொன்றின் போது கலந்து கொண்ட மன்னார் ஆயர் "இந்த யுத்தத்தினால் தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்ஸிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுடைய பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். இந்த நாட்டில் அனைத்து மக்களும் அரசியல் தீர்வுடன் வாழ வேண்டும். இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்கள் மீண்டும் உரிய முறையில் அவர்களுடைய செந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும்" என்ற கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் அவர்கள் மன்னார் ஆயர் முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக மதவாதம் பரப்பி வருவதாகவும்,தம்புள்ளை புத்த பிக்குகள் போன்று செயற்பட்டு வருவதாகவும் விவாதித்துள்ளார்.

-ஆன்மீகத் தலைவர் மீது இப்படிப்பட்ட கருத்துக்களை பாராளுமன்றத்தில் விவாதித்து களங்கம் ஏற்படுத்தியமைக்கு ஒட்டு மொத்த தமிழ் மக்கள் சார்பாகவும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும் எனது வன்மையான கண்டனத்ததை தெரிவித்துக்கொள்வதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார். _

No comments:

Post a Comment