Translate

Sunday 13 May 2012

கண்ணிவெடிக் கதைகளெல்லாம் மக்களை ஏமாற்றும் வித்தை: விக்கிரமபாகு _


  வடக்கில் பிரதேச சபைத் தேர்தல்களை நடத்த முடியுமானால் ஏன் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாதென கேள்வியெழுப்பும் நவசமசமாஜக் கட்சி கண்ணிவெடிக் கதைகள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக சோடிக்கப்பட்ட கற்பனைக் கதைகளாகுமென்றும் தெரிவித்தது. 


இது தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

உள்நாட்டில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதோடு, நாளுக்கு நாள் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

அதேபோன்று சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தின் மீதான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. எனவே உள்நாட்டு மக்களின் அரச எதிர்ப்பலைகளை திசை திருப்பவும், அரசியல் பலத்துடன் மக்கள் ஆதரவுடன் அரசாங்கம் இருப்பதாக சர்வதேசத்திற்கு காட்டிக் கொள்வதற்காகவே கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளைக் கலைத்து அரசாங்கம் அவசர அவசரமாக தேர்தல்களை நடத்தவுள்ளது.

வடபகுதி மக்களுக்கு இன்று ஜனநாயகம் சிவில் நிர்வாகம் தேவைப்படுகிறது. எனவே அங்கு தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டுமென சோடிக்கப்பட்ட கதையைச் சொல்லி தேர்தல் நடத்தப்படாமைக்கு கதை சொல்கிறது.

அப்படியானால் எப்படி அங்கு பிரதேச சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். எனவே மக்கள் சிந்திக்க வேண்டும். அரசாங்கத்தின் உண்மையான 'முகத்தை' புரிந்து கொண்டு தேர்தல்களில் எதிர்த்து வாக்களித்தால் தகுந்ததொரு அரசியல் பாடத்தை புகட்ட முடியும் என்றார். __

No comments:

Post a Comment