Translate

Sunday 13 May 2012

முதல் அமைச்சர் பதவி வேண்டும் இல்லையேல் வெளியேறுவோம்: ஹக்கீம்


முதல் அமைச்சர் பதவி வேண்டும் இல்லையேல் வெளியேறுவோம்: ஹக்கீம்


Haheem
எங்களுக்கு முதல் அமைச்சர் பதவி தரப்படவேண்டும், இல்லையேல் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது.
.
"கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே வழங்கப்படும் என மாகாண சபையைக் கலைப்பதற்கு முன் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கவேண்டும். இல்லையேல், முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகி தனித்து அல்லது எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும்.'' இதுவே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாதபோதிலும், இத்தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில்  கட்சிகள் களமிறங்கியுள்ளன. தாம் விரும்பும் கட்சியில் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
.
பிரதான கட்சிகள் முதலமைச்சர் பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தல்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. இரகசியப் பேச்சுகளும் இடம்பெறுகின்றன. முஸ்லிம் முதலமைச்சர், தமிழ் முதலமைச்சர் என்ற போட்டியின் மத்தியில் முஸ்லிம் முதலமைச்சர் பதவியைத் தமது கட்சியே கைப்பற்றவேண்டும் என முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியில் இறங்கியுள்ளன.
.
அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்தப் போட்டியில் இறங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
.
அந்தவகையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது.
.
அரசுடன் இணைந்து போட்டியிட்டாலும், எதிர்த் தரப்பில் நின்று போட்டியிட்டாலும் தாமே பெரும்பான்மையைக் கைப்பற்றும் பலத்தைக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரம், அரசுடன் இணைந்து போட்டியிட்டால் முஸ்லிம் காங்கிரஸுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று ஜனாதிபதி சபையைக் கலைப்பதற்கு முன் தமக்கு உறுதியளிக்கவேண்டும்.  இல்லையேல், தனித்து அல்லது இதே நிபந்தனையின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment