Translate

Sunday 13 May 2012

தமிழீழத்தைத் தீர்வாக தமிழர்கள் கேட்கவில்லை; உறுதியாகக் கூறுகிறார் சுமந்திரன்


தமிழீழத்தைத் தீர்வாக தமிழர்கள் கேட்கவில்லை; உறுதியாகக் கூறுகிறார் சுமந்திரன்
news
 "தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழம் தான் வேண்டும் என்று கேட்கவில்லை. எனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது'' என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
 
ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
 
அங்கு "அதிகாரப்பரவலாக்கல் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு' என்ற கருப்பொருளில் அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
"நான் யதார்த்தமாக பேச விரும்புகின்றேன். மக்களின் கைதட்டல்களுக்காக நடக்க முடியாதவற்றைப் பற்றிப் பேசுகின்றவன் நான் அல்ல. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
 
எமக்கு சர்வதேச பலம் கிடைத்திருக்கின்றது என்பதை ஜெனீவா தீர்மானம் உறுதிப்படுத்தியிருக்கிறது. நாங்கள் சுயநிர்ணய உரித்துடைய மக்கள் என்பதையும் தேசிய இனம் என்பதையும் இன்று உலகம் உணர்ந்துள்ளது.
 
வடக்கு, கிழக்கில் சுயாட்சியை ஏற்படுத்துவதற்கு சுர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியமாகத் தேவை. சர்வதேசத்திற்கு எமது சுயாட்சியைப் பற்றிய நியாயப்பாடுகள் தெளிவாக தெரியும். சர்வதேச தேசிய இனத்தினுடைய நிலப்பரப்பில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசு முயல்கிறது. இது தடுக்கப்பட வேண்டியதொன்று.
 
தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழம் தான் வேண்டும் என்று கேட்கவில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து ஆணை வழங்கியுள்ளனர்.'' என்றார்.
 
இதேவேளை, எமது மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்கான அமெரிக்காவினால் முடியும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தக் கருத்தரங்கில் தலைமை உரையாற்றும்போது தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
"தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய பிரச்சினைக்கான தீர்வை கேட்டு நிற்கின்றோம். எமது பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்காக நாங்கள் ஆயுத ரீதியில் போராடினோம். அது உலகத்தின் சூழ்ச்சிகளினால் அழிக்கப்பட்டுள்ளது
உலகத்தின் ஓட்டத்தில் ஜனநாயக ரீதியாக எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு பயணத்தை ஆரம்பித்துள்ளளோம். 
 
இளைய சமூதாயத்தை அரசியல் மயப்படுத்தி எமது உரிமைக்கான வென்றெடுக்க முயன்று வருகின்றோம் வடக்கு மற்றும் கிழக்கு என்பது எமது தாயக பூர்வீகபூமி. அந்த பூமியில் எங்களை நாங்கள் ஆளக்கூடிய சுய நிர்ணய உரிமையுடன் கூடியதான தீர்வை நாங்கள் எதிர்பார்கின்றோம் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூற முடியாத நிலையில் இன்று இருக்கின்றோம்.  
 
எமது உணர்வுகளுக்கு இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. என்றாவது ஒரு நாள் எமக்கான தீர்வு கிடைக்கும். அது சர்வதேசத்தின் கைகளில் தான் தங்கியிருக்கிறது'' 

No comments:

Post a Comment