Translate

Wednesday 13 June 2012

பிரதமராக கோத்தபாய மகிந்த அதிரடித் தீர்மானம்! கொழும்பு தகவல்


இலங்கையின் பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கு தற்போது சுகயீனமுற்றிருப்பதால், அவருக்குப் பதிலாக ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்‌சவை அந்தப் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தீர்மானித்துள்ளார் என கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் விரிவான செய்தி ஒன்றை லங்கா நியூஸ் வெப் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டி.எம். ஜயரத்ன அண்மைக்காலமாக சிங்கப்பூர் மௌவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தற்போது நாடு திரும்பியுள்ள போதிலும் அவருக்கு தமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என மருத்துவ நிபுணர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஜனாதிபதி அண்மைக்காலமாக பலமுறை முயற்சித்தார். எனினும், பிரதமர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதில் ஏற்பட்ட நெருக்கடியால் அந்தத் தீர்மானத்தை அவர் தொடர்ந்து ஒத்திவைத்து வந்தார்.
எனினும், அடுத்து நடத்தத் திட்டமிட்டுள்ள மூன்று மாகாணசபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்து, அதன்போது பிரதமர் பதவியை கோத்தபாய ராஜபக்‌சவிற்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
மகிந்த ராஜபக்‌ச லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்நாள் நாடு திரும்பியவுடன், மகிந்தவிற்கு நெருக்கமான சிலருடன் இதுகுறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் அரச வங்கியின் உயர் அதிகாரியொருவரும், சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலரும், ஜனாதிபதியின் மைத்துனர் ஒருவரும் கலந்துகொண்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருக்கின்றனர். எனினும், இவர்கள் மீது எவ்விதத்திலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், பசில் அல்லது சமல் ஆகியோரில் ஒருவரை பிரதமராக நியமிக்க சிரந்தி ராஜபக்‌ச உள்ளிட்ட, தனது மகன் நாமல் ராஜபக்‌சவிற்கும் விருப்பமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமிக்க தான் எதிர்பார்த்திருந்த போதிலும், அவர் பாரிய ஊழல், மோசடிகளைச் செய்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச, ஆவணங்கள் சிலவற்றைக் காண்பித்து தனக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஒருவரை நியமிக்கும் போது நாமல் ராஜபக்‌சவின் அரசியல் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருவரை நியமிக்க வேண்டாம் என இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரும் ஜனாதிபதியை அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்‌சவை பிரதமராக நியமிப்பதற்கு தனது மனைவியும், மகன்மார் மூவரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்குப் பெயரிடப்பட்டுள்ள ஜனக பண்டாரவை நீக்கவிட்டு, கோத்தபாய ராஜபக்‌சவை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்து, அவருக்கு நகர அபிவிருத்தி, பௌத்த விவகார, கலாசார அமைச்சுப் பதவியை வழங்கி, பாதுகாப்பு பிரதியமைச்சராக நியமிக்க முதலில் நடவடிக்கை எடுப்பதென இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்திற்குப் பெயரிடப்பட்டுள்ள மாலினி பொன்சேகா, கமலா ரணதுங்க, ஜே.ஆர்.பி.சூரியப்பெரும, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோரையும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக விசுவாசமான சிலரை நியமிக்க தான் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இவர்களில் ஒருவரை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவும் தான் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment