Translate

Wednesday 25 July 2012

இரகசிய கமெரா பொருத்தி மாணவிகளை படம் பிடித்த நபருக்கு தண்டனை


பேருந்தின் கதவில் இரகசிய கமெரா பொருத்தி, குட்டை பாவாடை அணிந்து வரும் மாணவிகளை படம் பிடித்த ஓட்டுநருக்கு, 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் டகுயா கோஸ்(வயது 48). இவர் ஜப்பான் வம்சாவளியை சேர்ந்தவர்.

பேருந்தில் மினி ஸ்கர்ட் போன்ற யூனிபார்ம்(குட்டை பாவாடை) அணிந்து வரும் பள்ளி மாணவிகளை இரகசியமாக கமெராவில் படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பேருந்தின் கதவில் யாருக்கும் தெரியாத வகையில் கமெராவை பொருத்தி உள்ளார் டகுயா. பேருந்தில் மாணவிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் படம் பிடித்துள்ளார். மேலும் 10 வயதுக்கு குறைந்த மாணவிகளை மட்டும் கமெராவில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து டகுயாவை பொலிசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு மணி நேரத்துக்கு மேல் ஓடக்கூடிய வீடியோவையும் கைப்பற்றினர். இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் டகுயாவுக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து டகுயா மேல்முறையீடு செய்தார். அப்போது இவரது வக்கீல் வாதிடுகையில், பேருந்து ஓட்டுநர் டகுயா, அவமானமான விஷயத்தை செய்துவிட்டோம் என்பதை இப்போது உணர்ந்துவிட்டார். அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் எந்த மாணவிக்கும் சமூகத்துக்கும் அவர் தீங்கு இழைக்கவில்லை. மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கமும் அவருக்கு இல்லை. எனவே டகுயாவை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.
எனினும் டகுயாவுக்கு 7 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் சிறையில் இருந்து அவரை விடுவித்து மனநல சிகிச்சை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment