Translate

Monday 30 July 2012

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின்; உரிமைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை; திருமலையில் சம்பந்தன் உறுமல்


வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின்; உரிமைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை; திருமலையில் சம்பந்தன் உறுமல்
news

 திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் தமிழர்களின் உள்ளக்கிடக்கைகளை வெளியிட்டார் சம்பந்தன்.
போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்களுக் குத் தீர்வு வழங்கப்படவில்லை. இந்த விடயத்தில் சர்வதேசம் தொடர்ந் தும் பார்வையாளராக இருக்கமுடியாது. இலங்கை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்.

 
 தமிழ் மக்களின் உரிமைக்கான எமது போராட்டம் இன்னும் ஓயவில்லை. நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. ஒருமித்த இலங்கைக்குள் விசேடமாக வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற் கான அதிகாரத்தையே கேட்கிறோம்.
 இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா. சம்பந்தன் திருமலையில் வைத்துத் தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட் டத்திலிருந்து போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைக்கும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் திருகோணமலை சிவன்கோயிலடி வீதியில் தந்தை செல்வா நினைவாலயத்திற்கு அருகில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணிக்கு திருகோணமலை நகரசபைத் தலைவர் க.செல்வராஜா (சுப்ரா) தலைமையில் நடைபெற்றது.
 
அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு  தெரிவித்தவை வருமாறு:
ஜனநாயக வழியிலான சாத்வீகப் போராட்டம் எமது போராட்டத்தின் ஆரம்பமாக இருந்தது. அதன் பின்னர் 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இப்போதும் எமது போராட்டம் ஓயவில்லை. எமது மக்களின் உரிமைக்காகத்தான் போராடுகின்றோம். நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. ஒருமித்த இலங்கைக்குள் விசேடமாக வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும்.
 
தமிழரின் போராட்டம் இந்நாட்டின் எல்லை தாண்டி சர்வதேசம் வரை சென்றிருக்கின்றது. இன்று எமது பிரச்சினை என்றுமில்லாதளவு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். 
 
இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அவலங்களைச் சந்தித்தார்கள். மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டன. தொடர்ந்தும் இந்தப் பிரச்சினை நீடிக்கக் கூடாது. இதற்குத் தீர்வு காணவேண்டும். 
 
யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கப்படவில்லை. சர்வதேசம் தொடர்ந்தும் பார்வையாளராக இருக்கமுடியாது. இலங்கை சம்பந்தமாகப் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்.
 
ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கிணங்க  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவேண்டும். இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு வருடத்திற்கு முன்னர் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகின்றது. கிழக்கு மாகாணசபையை வெற்றிபெற்றால் அதிகாரப்பகிர்வு வழங்கத்தேவையில்லையென அரசு எதிர்பார்க்கின்றது.
 
விடயம் அறிந்த வட்டாரங்களின் கணிப்பின்படி கிழக்கு மாகாண சபையை அரசு வெற்றிபெற்றால், தற்போது இருக்கின்ற பொலிஸ், காணி அதிகாரங்களை மீளப்பெறலாம். மத்திய அரசின்கீழ் இதனைக் கொண்டுவரலாம். அந்தக் காரணத்தினால்தான் வடமாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட்டது. 
 
இந்தச் சூழ்நிலையில்தான் நாம் இந்தத் தேர்தலை எதிரத்கொள்கின்றோம். 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். ஆட்சி அதிகாரம், அதிகாரப் பரவலாக்கல், மக்களுடைய உரிமை, தமிழ் மக்களுடைய பிரச்சினை முஸ்லிம் மக்களுக்கும் உண்டு. அதனால்தான் அதிகாரப்பகிர்வு கேட்கின்றோம். 
 
நாங்கள் சிங்கள மக்களை எதிர்க்கவில்லை. ஆனால், சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கின்றோம். தமிழ் மக்களுடைய சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் வாழவேண்டும். தனித்துவமாக முஸ்லிம் மக்களின் வாக்கைப் பெற்று அதன் பின்னர் அரசுடன் இணைத்தால் உங்கள் மக்களை நீங்கள் ஏமாற்றுவதாக அமையும்.
 
தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை முற்கூட்டியே கூறுகின்றோம். சர்வதேச சமூகம் இந்தத்தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் அரச தரப்பிலிருந்து ஒரு தமிழ் வேட்பாளர்கூடத் தெரிவுசெய்யப்படக்கூடாது. 
 
இந்நிலை ஏற்படுமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் கூட அரசுடன் இணையமுடியாத நிலை ஏற்படும். கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து பங்காளிகளாக செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம்  என்றார் சம்பந்தன். 
 
வேட்பாளர் அறிமுக விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.விநாயகமூர்த்தி, விநோநோகராதலிங்கம், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம், சிவாஜிலிங்கம், த. சித்தார்த்தன் உட்பட கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment