Translate

Tuesday 31 July 2012

தங்களைத் தாங்களே ஆளும் தீர்வே தமிழருக்குத் தேவை; சம்பந்தன் திட்டவட்ட அறிவிப்பு


தங்களைத் தாங்களே ஆளும் தீர்வே தமிழருக்குத் தேவை; சம்பந்தன் திட்டவட்ட அறிவிப்பு
news

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
 
 இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு நடத்தும் பேச்சு நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் அது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
 
திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நேற்றுமுன்தினம் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரியாயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவிததார்.
 
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு 
அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பேச்சை அரசுடன் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், பேச்சு நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதான பேச்சாக இருக்கக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழிப்புடன் இருக்கின்றது.
 
அண்மையில் கொழும்பில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து நடத்திய கலந்துரையாடல்களின் போதும் இது பற்றி நாம் தெளிவாகக் கூறியிருந்தோம்.
 
அரசுடன் இதுவரை நடத்திய பேச்சுகளின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான தனது அடிப்படை நிலைப்பாட்டைத் தெளிவாக எழுத்து மூலம் முன்வைத்தது. அரசு தனது பதிலைத் தருவதாகத் தெரிவித்தது. இன்னும் அதற்கான பதிலைத் தரவில்லை. அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியாத நிலையில் உள்ளது.
 
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக்கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்ககூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை இன்று நாட்டின் எல்லைகளை தாண்டி சர்வதேசத்தின் கூர்மையான பார்வைக்கு சென்றுள்ளது என்றார்.
 
திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நடைபெற்ற இக்கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment