Translate

Friday 10 August 2012

இலங்கை இராணுவத்திற்கு பெங்களூரில் இராணுவப் பயிற்சி! தமிழ் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்... இந்திய அரசுக்கு இந்து அமைப்புகள் கண்டனம்... .

இலங்கை இராணுவத்துக்கு எந்தப் பயிற்சியும் அளிக்காமல் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கருநாடகத் தமிழர் பேரவை நேற்று பெங்களூர் டவுன்ஹால் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தது.      இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஏற்றுப் பேசியப் பேரவையின் தலைவர் இராவணன் “இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்து, தற்போது அங்குள்ள தமிழ் மக்களை விலங்குகளை விடக் கேவலமாக நடத்தும் இலங்கைப் படையினருக்கு, பெங்களூரில் பயிற்சி அளிப்பது தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது. உலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.மன்றத்தில் வாக்களித்துவிட்டு, பிறகு யாருக்கும் தெரியாமல் அந்த நாட்டு இராணுவப் படையினருக்கு இந்தியாவில் பயற்சி கொடுப்பது தமிழர்களுக்குச் செய்யும் இரண்டகமாகும். மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பது இதன்மூலம் புலனாகிறது.      சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் கூட்டாளி நாடான இலங்கைக்கு ஆயுதப் பயிற்சியோ, போர்ப் பயற்சியோ அல்லது பண உதவியோ செய்வது இந்தியாவிற்கு ஆபத்தானது. மத்திய அரசு இதனை உணரவேண்டும்.      ஆகையால், இலங்கை இராணுவத்துக்கு எந்தப் பயிற்சியும் அளிக்காமல், இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால், தீவிரமான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.      இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், புரட்சிகரத் தமிழ் இளைஞர் இயக்கம், நாம் தமிழர் கட்சி, கர்நாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கர்நாடகா கன்னடர் தமிழர் பெடரேஷன் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்தனர்.
**********

     அதேபோல் முந்தாநேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்ரீ ராமசேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் “அகன்ற பாரதத்திலிருந்து இலங்கையை வேறுபடுத்தி, ஸ்ரீலங்கா அல்லது சிலோன் என்று அழைத்தது அன்றைய ஆங்கிலேய அரசு.
     அங்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மூலக் குடிகளான இந்து மக்களை, இரண்டாந்தரக் குடிகளாக்கியது சிங்கள பேரினவாத அரசு. அங்குள்ள இந்து மக்களுக்கு அரசு அலுவலகங்களில், இராணுவத்தில், புலனாய்வுத்துறையில், காவல்துறை போன்ற துறைகளிலெல்லாம் வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது. 

அங்கு பெரும்பான்மையாக உள்ள இந்து மக்கள் அடிமைபோல் நடுத்தப்படுகிறார்கள்.
     1948ல் இருந்து இன்றுவரை இந்தியாவில் ஆட்சி நடத்தி வரும் ஊழல்வாத காங்கிரஸ் அரசு, என்றைக்கும் இலங்கை வாழ் இந்துக்கள் மீது அக்கறை கொண்டதே இல்லை. இலங்கை அரசு, இந்து விரோதப் போக்கைக் கடைப்பிடித்தாலும், இந்து மக்களைப் படுகொலை செய்தாலும், கொஞசமும் கவலைப்படாத இந்திய அரசு, அவர்களுக்கு இராணுவ உதவி, புலனாய்வுத் தகவல், ஆயுத உதவி, பொருளாதார உதவியாக மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடிகளுக்கும் மேலாக இலங்கை அரசுக்கு உதவி செய்துள்ளது.
     2009ல் நடந்த போரில், இலங்கை அரசு சுமார் ஒன்றரை லட்சம் இந்து மக்களைக் கொன்றது. ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் இந்துக்களைக் கொன்று குவித்த இலங்கை, இதுவரை சுமார் மூன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்துள்ளது. போர் முடிந்த பிறகும் கூட, இந்தியாவின் உதவியோடு இலங்கை அதிகாரிகளுக்கு இராணுவப் பயற்சி கொடுக்கப்படுகிறது. இலங்கையில் இந்துப் பெண்கள் மற்றவர்களைப் போல் சேலை உடுத்தவும், நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ளவும் தடை போடப்படுகிறது. அங்குள்ள இந்து மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள்.
     நமது இந்திய அரசு, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பெங்களூர், எலங்கா விமான பயற்சி மையத்தில் கொடுக்கப்பட்டு வரும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவில் வேறு எங்கும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடாது. அவர்களை உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பவேண்டும்” என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment