Translate

Friday 17 August 2012

இலங்கை அரசு தமிழருக்கு தீர்வுத் திட்டம் எதுவும் வழங்க விரும்பவில்லை; சம்பந்தன் குற்றச்சாட்டு

இலங்கை அரசு தமிழருக்கு தீர்வுத் திட்டம் எதுவும் வழங்க விரும்பவில்லை; சம்பந்தன் குற்றச்சாட்டு
news
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு அதிகபட்ச அதிகாரத் தீர்வுகள் எதனையும் வழங்க விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் ஆனந்தபுரி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளினால் எமக்குத் தரப்பட்ட சந்தர்ப்பம் ஆகும். நீதி, நியாயத்தில் வெற்றி பெற  வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். இதனை சரியாக முகங்கொள்ள வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் வெற்றி பெற்று அந்த ஐனநாயகத் தீர்ப்பை துஷ்பிரயோகம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதற்கு நாம் துணைபோகப்போகின்றோமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தை செல்வாவின் வழியில் நாங்கள் கண்ணியமான, நிதானமான வழியில் சென்றுகொண்டிருக்கின்றோம். அதன் மூலம் நிலைத்து நிற்கும் நிரந்தர தீர்வைப்பெற நாங்கள் விழைகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசில் கூறப்பட்டுள்ளது அதிகபட்ச அதிகாரத்துடன் கூடிய அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதாகும்.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசை நடைமுறைப்படுத்த ஒரு செயல்முறைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம்  முன்வைக்கவேண்டும் என்று.ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தினால் ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தத்தில் இருந்து விடுபட, கிழக்கு மாகாணசபையை நாம் வெற்றி பெறவேண்டும் என்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் இப்போது பகிரங்கமாகவே கூறுகின்றனர் இதனை நாம் அனுமதிக்கமுடியுமா?

சர்வதேச சமூகத்தின் தமிழர்களுக்கு சார்பான சிந்தனையை நாம் இந்தத் தேர்தல் மூலம் பலப்படுத்தப்போகின்றோமா? அல்லது பலவீனப்படுத்தப்போகின்றோமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment