Translate

Monday 20 August 2012

தமிழர்கள் கொல்லப்படும் போது அமரிக்காவுக்கோ ஐரோப்பாவிற்கோ இந்தியாவிற்கோ வலிக்காது : மனோ கணேசன்

டெல்றொக்ஷன் மற்றும் நிமலரூபன் படுகொலை செய்யப்பட்டது வெள்ளை வானில் கடத்தியோ அல்லது வீதியில் வைத்து சுட்டோ படுகொலை செய்யப்படவில்லை அதன்படி இந்த அரசு வழமையாக கூறுவதனைப் போன்று விசாரணை நடாத்துகின்றோம், கொலையாளிகளைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றோம், கண்டு பிடித்துவிடுவோம். இது தான் கொலையாளி என்று கூறி சமாளித்து விட முடியாது.

ஏனெனில் இக் கொலை அரசின் கண்காணிப்பில் உள்ள சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. அரசிற்கு கொலையாளி யார் என்று நன்றாகத் தெரியும். இது அரசினால் ஏவிவிடப்பட்ட கொலைப்படை தான் செய்தது. இக் கொலைக்கு பொறுப்பு அரசாங்கம் என்பதை யாழ். மண்ணில் வைத்து உறுதியாகக் கூறுகின்றேன் இதனை அரசு முடியுமானால் இந்த இடத்தில் வைத்து மறுப்புத் தெரிவிக்கட்டும் என இலங்கை அரசிற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் சவால் விடுத்துள்ளார்.
இன்றைய தினம் அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்சன் ஆகியோரின் படுகொலையினைக் கண்டித்தும் சிறையில் தடுத்து வைத்துள்ள ஏனைய அரசியற் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் யாழ். நகரில் தமிழ் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:
வவுனியா சிறைக் கைதிகள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர்கள் யார் என்பது அரசிற்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் அசம்பாவிதத்தினையடுத்து கொழும்பில் இருந்து வந்த விசேட அதிரடிப்படையினர் இவர்களை அடித்துத் துன்புறுத்தினார்கள் என்ற உண்மையினை இந்த இடத்தில் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இதனை அரசு முடியுமானால் இந்த இடத்திலேயே மறுக்கட்டும். கொலை செய்யப்பட்டவர்களை யார் துன்புறுத்தினார்கள் என்பதற்கு சாட்சியாக ஏனைய கைதிகள் இருக்கின்றார்கள். அதனால் நாம் சொல்கின்றோம் இவர்களைக் கொலை செய்தது வேறு யாருமல்ல இந்த அரசு தான். அவர்களினால் ஏவி விடப்பட்ட கொலைப்படை தான் இவர்கள் இருவரையும் கொலை செய்தது.
எனவே இந்த ஆர்ப்பாட்டம் ஆனது கொழும்பில் இருக்கக் கூடிய மகிந்த அரசின் காதுகளுக்கு எட்ட வேண்டும். இனிமேலும் இத்தகைய படுகொலைகள் நடைபெறாது இருக்க தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து அணி திரள்வார்கள் எழுச்சி பெறுவார்கள் என்பதனை மகிந்த ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மிகவும் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
முன்னர் குட்டிமணி போன்றோரைப் கொலை செய்தது போன்றே இவர்களும் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டனர். எனவே நாம் இனியும் அமைதியாக இருப்போம் ஆனால் இக் கொலைகள் தொடரத் தான் செய்யும். எனவே படுகொலை தொடர்பில் வெறுமனே அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ ஜரோப்பாவுக்கோ நாங்கள் கோரிக்கைகளையும் மனுக்களையும் விடுப்பதால் எதுவும் நடந்து விடாது.
தமிழர்கள் கொல்லப்பட்டால் அது அமெரிக்காவுக்கு வலிக்காது, இந்தியாவுக்கு வலிக்காது, ஜரோப்பாவுக்கு வலிக்காது.அது எங்களுக்குத் தான் வலிக்கும். ஆகவே நாம் போராட வேண்டும்.
எமது போராட்டம் அமெரிக்காவிற்கு வலிக்க வேண்டும், இந்தியாவிற்கு வலிக்க வேண்டும், ஐரோப்பாவிற்கு வலிக்க வேண்டும். அது போல எமது போராட்டம் கொழும்பில் இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய மகிந்த ராஜபக்சவிற்கும் வலிக்க வேண்டும்.
எல்லோரும் வலிக்கின்ற வகையில் வடக்கு கிழக்கு எங்கும் முழுமையான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். தென்னிலங்கை அமைப்புக்கள் சிலவும் எம்முடன் சேர்ந்துள்ளன. காட்டாட்சியின் உண்மை வெளியில் கொண்டு வரப்படுகின்றது.
நாம் தனித்து விடப்படல்லை. வடக்கு கிழக்கில் நடைபெறும் போராட்டங்கள் ஒரு ஜனநாயகப் போராட்டமான ஒட்டு மொத்தமாக முன்னெடுக்கப்பட்டு எமது அநீதி துன்பங்களுக்கு ஒரு தீர்வினைக் காண வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment