Translate

Friday 24 August 2012

போரில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபி மான சட்டங்கள் மீறப்பட்டன - ஆங்கில உரை இணைப்பு

போரில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபி மான சட்டங்கள் மீறப்பட்டன - ஆங்கில உரை இணைப்பு
24 ஆகஸ்ட் 2012
போரின் பின் உறுதியளிக்கப்பட்டவை காற்றில் பறந்தன - பாராளுமன்றில் சம்பந்தன்


போரில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டன.  போருக்கு பின்னர், இலங்கை அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் இடையில்; கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 13வது அரசியல் அமைப்புத்திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும்,  போர் நடைபெற்ற போது நடந்தவற்றை ஆராயந்து பார்க்கவும் உறுதியளிக்கப்பட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன நேற்று முன்தினம் 22.08.12 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் முன்வைத்துள்ள செயற்பாட்டு திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை யோசனையை சபையில் சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதிகார பரவலாக்கம், போரில் காணாமல் போனவர்கள்.  சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தல் போன்ற பரிந்துரைகளை ஆணைக்குழு முன்வைத்துள்ளது. எனினும் இவை எதுவும் அமுல்படுத்தப்படவில்லை. இந்த பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துவது தேசிய தேவையாகும்.



ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த தேசிய செயல்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. அந்த திட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவதே எமது பொறுப்பாகும். இதன் மூலம் மேற்படி செயல்திட்டத்தை சிறந்த முறையில் அமுல்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.


காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த பக்கசார்பற்ற குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.அத்துடன் கைதுசெய்யட்டமை, தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பாக விசாரணையை நடத்த சுயாதீன குழுவொன்று இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.


திருகோணமமலை மூதூர் பிரதேசத்தில் 78 தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். திருகோணமலை 5 அப்பாவி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் தமிழர்கள், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியதிக்கப்பட்டகுழுவில், இருந்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் விலகி கொண்டனர். இந்த கொலைகள் குறித்து கண்டறிய இலங்கை அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என அவர்கள் தெரிவித்தனர். இந்த விசாரணை குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பதை நாங்கள் அறியவில்லை. இந்த சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவமாகும். திருகோணமலையில்  5தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்படுவதற்கு ஏதுவான உண்மை நிலைமையை அரசாங்கம் வெளியிட வேண்டும். ஜனாதிபதி இது சம்பந்தமாக தலையிட்டு செயற்பட வேண்டும்;.


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் செயல்திட்டத்தில், ஏற்கனவே சுயாதீன ஆணைக்குழுக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எங்கு அவை இருக்கின்றன. தேர்தல், காவற்துறை, அரசசேவை ஆகிய சுயாதீன ஆணைக்குழுக்கள் இருக்கின்றனவா?.  செயல்திட்டம் பிரதிபலன் இல்லாத ஒரு ஆவனம். பக்கசார்பற்ற மற்றும் நியாயத்தை எம்மால் எதிர்பார்க்க முடியுமா?. நல்லெண்ணத்தை ஏற்படுத்தி, நல்லிணக்கம், நல்லாட்சியை ஏற்படுத்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. சம்பூர், வலிகாமம் காணிகள் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என செயல்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இன்னும் அது நடக்கவில்லை. சம்பூர் அனல் மின் நிலையத்திற்கான காணியை தவிர ஏனைய காணிகள் அனைத்தும் மக்களுக்கு மீள வழங்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். எனினும் இராணுவத்தினர் மக்களை பிரதேசத்தை விட்டுச் செல்லுமாறு அச்சறுத்துகின்றனர். அமைதி மற்றும் சமாதானம் தேவையொன்றால் அரசாங்கம், வலிகாமம் காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும். அங்குள்ள மக்களுக்கு 6 மாதங்களாக உணவு வழங்கப்படவில்லை. அவர்கள் பட்டினியில் இருந்தனர். இவ்வாறு எப்படி அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்?.


தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்ததது. அரசாங்கம் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஏற்படுத்தியது. நாங்கள் இன்னும் அதற்கான பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. அது குறித்த எமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க அரசாங்கம் தவறியது. நாங்கள் முன்வைத்த யோசனைக்கு உரிய பதில் வழங்க அரசாங்க பிரதிநிதிகளால் முடியவில்லை. பிளவுப்படாத இலங்கைக்குள் பேச்சுவார்த்தை மூலமான நியாயமான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். எனினும் அரசாங்கம் பொறுப்பான வகையில் செயற்படுவதில்லை. நாங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க போவதில்லை எனக் கூறவில்லை.  தெரிவுக்குழு செயற்திறன் மிக்கதாக இருக்கவேண்டும். அதில் பயன்பெற எவரும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை.  போர் காலத்தில் எமது மக்கள் துயரங்களை அனுபவித்தனர். ஆயிரக்கணக்கான் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பல்குழல் பீரங்கி, எரிகணைகள், பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறான கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என உறுதியளிக்கப்பட்டது.  ஆனால் அந்த ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இவற்றை மூடி மறைக்க முடியாது. இது சாட்சியங்கள் அற்ற போர். வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பலர் பட்டினியால் இறந்தனர்.


அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமாதானம் அவசியம். அரசாங்கம், சகல இனங்களும் கௌரவமாக வாழும் சூழலை ஏற்படுத்தினால் மாத்திரமே  கௌரவமான சமாதானம் உருவாகும் எனவும் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். 

http://www.globaltam...IN/article.aspx 

No comments:

Post a Comment