Translate

Friday 10 August 2012

அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமிக்கு இங்கு என்ன வேலை: பிரபா கணேசன்


அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமிக்கு இங்கு என்ன வேலை: பிரபா கணேசன்

pirabha
இலங்கையில் போர் முடிவுற்றதை பற்றியும் எதிர்கால இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் பேசும் சுப்பிரமணிய சுவாமி யுத்தத்திற்கு பின்னரான இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக எதுவும் பேசுவதில்லை. 


இன்று நேற்று அல்ல என்றுமே இவர் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். 

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இலங்கையின் பிரச்சினை மட்டுமல்ல இந்தியாவின் பிரச்சினையையும் எமது ஜனாதிபதி தீர்த்து வைத்துள்ளார் என சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கையின் அதிகார பரவலாக்கல் சம்பந்தமாக விடுதலைப்புலிகளுடன் பல பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது பகிரங்கமாகவே இலங்கை தமிழர்களுக்கு அதிகார பரவலாக்கல் தேவையில்லை என கூறியவர் இந்த சுப்பிரமணிசுவாமியே. அது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு எதிராக பல கருத்துக்களை அவ்வப்போது உளறிகொண்டிருப்பது இவரது பொழுதுபோக்காக இருந்தது. 

கடந்தமுறை இவர் இலங்கைக்கு வந்திருந்த பொழுது இவரை பல தமிழ் தலைவர்கள் சந்தித்து தமிழ் மக்களின் அதிகார பரவலாக்கள் சம்பந்தமாக பேசியதாக ஊடகங்களுக்கு அறிக்கைகளையும் அவரை சந்தித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர். 

அத்தருணத்தில் சுப்பிரமணியசுவாமி ஒரு அரசியல் கோமாளி என்றும் அவரை சந்திப்பதில் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசணமும் இல்லை எனவும் நான் தெரிவித்திருந்தேன். அதற்கு சுப்பிரமணியசுவாமியா அல்லது நானா அரசியல் கோமாளி என என்னை பலர் இணையதளங்கள் மூலமாக விமர்சனம் செய்திருந்தனர். 

இருப்பினும் இன்று சுப்பிரமணியசுவாமி இலங்கையில் வந்து பேசியிருக்கும் பேச்சுகளை பார்க்கும் பொழுது அவர் தமிழ் மக்களுக்கும் அதிகார பரவலாக்களுக்கு எதிரானவர் என்பது தெட்டத்தெளிவாக புரிகிறது. ஆகவே இவர் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்திய தமிழர்களுக்கும் எதிரானவரே. இதை சென்றமுறை இவர் வந்தபொழுது இவரை மதித்து இவருடன் பேச்சுவார்த்தை செய்த தமிழ் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment