Translate

Tuesday 25 September 2012

கூட்டமைப்பின் உறுப்பினர்க்கு அசம்பாவிதம் நடந்தால் அரசே முழுப்பொறுப்பு! - அரியநேத்திரன் எச்சரிக்கை!!

'கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கழிந்தும் மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பதினொரு பேருக்கும் இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எங்களது உறுப்பினர்களுக்கோ அல்லது ஆதரவாளர்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும்.'

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் 'பொங்குதமிழ்' இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
சாதாரணமாக பிரதேசசபைத் தேர்தலில் வெற்றியடைந்தவர்கள் பாதுகாப்பு இல்லை எனும் பட்சத்தில் அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவேண்டியது அரசின் கடமையாகும். அப்படி இருந்தபோதும் மக்களால் தெரிவுசெய்யப்பட் 11 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல் இருந்தும்கூட இதுவரை அரசால் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கில் மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இராணுவப் புலனாய்வாளர்கள், அரசுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்கள் ஆகியோரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக அரசின் உயர்மட்டத்திற்கும், பொலிஸ் மா அதிபருக்கும் நாம் தெரியப்படுத்தியும் எந்தவிதமான உடனடி நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது கட்சிக்கு அன்றிருந்து இன்றுவரைக்கும் அச்சுறுத்தல் என்பது தொடர்ந்து இருந்துகொண்டே வருகின்றது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.
மக்களால் தெரிவுசெய்யப்பட் மாகாணசபை உறுப்பினர்கள் இதுவரைக்கும் தமக்கு வாக்களித்த மக்களிடம் சென்று நன்றி கூறுவதற்குக்கூட போகமுடியாத சூழ்நிலை உள்ளதை நோக்கும்போது எமது நாட்டின் ஜனநாயகம் எந்தளவிற்கு உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
வெற்றியீட்டிய நாள் தொடக்கம் இன்றுவரைக்கும் எமது கட்சியின் உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல்கள் நாளாந்தம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பகல்வேளையிலும்,  இரவு வேளையிலும் இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தல் விடுக்கும் குழுவினர் சுற்றித் திரிகின்றனர். இவர்கள் எமது உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் எதற்காக நடைபெறுகின்றன என ஆராயுமிடத்து எமது கட்சி உறுப்பினர்களை அரச கட்சிக்கு இழுக்கும் செயற்பாட்டின் வெளிப்பாடே இவ்வாறான  அச்சுறுத்தல்களுக்கு காரணமாகும். இவர்கள் எப்படித்தான் எங்களுடைய கட்சி உறுப்பினர்களுக்கு விலைபேசினாலும் எமது உறுப்பினர்கள் பணத்திற்காகவும் அற்பசொற்ப ஆசைகளுக்காகவும் விலைபோகின்றவர்கள் அல்லர் என்பதை அரசும், கொலை அச்சுறுத்தல்களில் ஈடுபடும் குழுவினரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
எங்களது உறுப்பினர்களுக்கோ ஆதரவாளர்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் இடம்பெறும் பட்சத்தில் அதற்கான முழுப்பொறுப்பையும் இந்நாட்டின் அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொங்கதமிழுக்குத் தெரிவித்தார்.
கிழக்கில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கிழக்கு புத்திஜீவிகள் தெரிவித்திருக்கும் நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மேற்படிக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.


http://ponguthamil.c...71-e9da3cc46c6e 

No comments:

Post a Comment