Translate

Tuesday 23 October 2012

மஹிந்தவின் இரகசியத் திட்டம்; அம்பலப்படுத்துகிறார் மனோ

news
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் இல்லாது ஒழித்து, நாட்டிலுள்ள 9 மாகாணங்களின் எல்லைகளையும்  மீளமைத்து ஐந்து மாகாணங்களாக மாற்றுவதற்கு இந்த அரசு இரகசியத் திட்டம் தீட்டியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


"பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ தலைமையில் அரசின் பங்காளிக் கட்சிகள் இந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.  இந்த இலக்கை முன் வைத்தே அரசு இன்று காய் நகர்த்துகிறது.

முடியுமானால் அரசின் உத்தியோகாரபூர்வ பேச்சாளர் இந்தத் தகவலை மறுக்கட்டும். அதேபோல் அரசில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் இதற்குப் பதில் சொல்லட்டும்'' எனவும் அவர் குறிப்பிட்டார்.

13ஆவது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்புத் தீவிரவாதக் கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
முழு நாட்டையும் சிங்கள பௌத்த நாடாக அறிவிக்க வேண்டும் என்பதுவே இவர்களது திட்டமாகும். இதன் முதற்கட்டமாக 13ஆவது திருத்தமும்  அதையோட்டிய மாகாண சபைகளும் ஒழிக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக நாட்டின் மாகாணங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு ஒன்பது மாகாணங்கள் ஐந்து மாகாணங்களாக குறைக்கப்படும்.

இதன் மூலம், எந்த ஒரு மாகாணத்திலும்  தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கமாட்டார்கள். மூன்றாவது கட்டமாக அனைத்து நிர்வாக மற்றும் தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையாக மாற்றப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு எந்த ஒரு மாவட்டத்திலும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருக்க முடியாத நிலைமை உருவாக்கப்படும்.

இன்று வட மாகாணத்தில் தமிழர்களும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த மாகாணங்களுக்கு உள்வரும் மாவட்டங்களிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த நிலைமை மாற்றப்படும்.

அனைத்து மாகாணங்களுக்கும் கடல் எல்லை அவசியம் என்ற காரணத்தைக் காட்டி மாகாண எல்லைகளை மீளமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மாகாண மற்றும் மாவட்டங்களின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் சனத்தொகை குடிபரம்பல் மாற்றி அமைக்கப்படும்.

இதுதான் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசின் தீர்வாகும். இந்த இலக்கை நோக்கியே அரசு பயணம் செய்கிறது. இதன் முதல் கட்டமாகவே 13ஆவது திருத்தத்துக்கும் மாகாண சபைகளுக்கும் எதிரான பிரசார இயக்கத்தை அரசு இன்று தனது பங்காளிக் கட்சிகள் மூலமும் பாதுகாப்புச் செயலாளர் மூலமும் ஆரம்பித்துள்ளதுஎன்றார்.

No comments:

Post a Comment