Translate

Thursday 18 October 2012

வெளிநாட்டு இராஜதந்திர பதவிகளில் திடீர் மாற்றம்; ஜெனிவா எதிரொலி; அரசு அதிரடி

வெளிவிவகார இராஜ தந்திர செயற்பாடுகளில் அவசர மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு இலங்கை அரசு முஸ்தீபு செய்துள்ளது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இதன் பிரகாரம் முக்கிய இராஜதந்திரப் பதவிகளில் விரைவில் பாரிய மாற்றங்கள் நிகழவுள்ளன.   ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை இராஜதந்திரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பலகோணங்களில் எழுந்துள்ள  விமர்சனங்களே இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.


   இதற்கிணங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோளக் காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் இராஜதந்திர சேவையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு  அரசு தீர்மானித்துள்ளதென நம்பகரமான  வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.   குறிப்பாக, மேற்குலக நாடுகளில் இராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபடும் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் தமது நாடு குறித்தான பிரசாரங்களை முன்னெடுப்பதில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர் என அரச உயர்மட்டத்திற்குப் பல்வேறு துறைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

  குறித்த இராஜதந்திரிகளின் மதிநுட்பமற்ற  செயற்பாடுகளே ஜெனிவாத் தீர்மானம் போன்ற அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளன எனவும் அரச உயர்மட்டத்தினருக்கு எத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.  அதேவேளை, இலங்கை அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பணிகளை சர்வதேசத்திடம் கொண்டுசெல்லும் விடயத்தில் இலங்கை இராஜதந்திரிகள் அவசர நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை என அரச உயர்மட்டத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.   

 இதனையடுத்து தமது ஆலோசகர்களை அழைத்து மந்திராலோசனை நடத்தியுள்ள அரச தலைமை, வெளிவிவகார இராஜதந்திர சேவையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் மேற்குலக நாடுகளில் பணிபுரியும் முக்கிய இராஜதந்திரிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோரின் பதவிகளில் பாரிய மாற்றங்கள் நிகழவுள்ளன என பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரியொருவர் நேற்று “சுடர் ஒளி’யிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment