Translate

Monday 26 November 2012

இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் சீமான்


ஒன்றுபடுவோம், இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம். மாவீரர்கள் நினைவு நாளில் அவர்களின் நினைவை சுமந்து கனவை நோக்கி தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியேற்போம்” நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூ‌றியு‌ள்ளா‌ர்.
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நம் மண்ணைக்காக்க, நம்மினத்தின் மானத்தைக் காக்க, தமிழீழத் தேசத்தில் தன்னாட்சியை படைக்க உருவானதே தமிழீழ விடுதலைக்கான ஆயுத வழிப் போராட்டமாகும். லட்சியத்தை நோக்கிய போராட்டத்தை, உறுதியுடனும் முன்னெடுத்த நமது தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள்.

தனது பிறந்தநாளுக்கு பிரபாகரன் முக்கியத்துவம் அளித்திடவில்லை. அதற்கு மாறாக, நவம்பர் 27ஆம் நாளையே தமிழ்த் தேசியத்தின் எழுச்சிமிகு மாவீரர் தினமாக அறிவித்து, அதனை தமிழினம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கடைபிடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதனைத்தான் நாம் தாய்த் தமிழ் நிலமான தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கடைபிடித்து வருகின்றோம்.
நம் மீது இன அழிப்புப்போரை நடத்திய சிங்கள பௌத்த இனவாத அரசை எதிர்த்து, நம் இனத்தின் விடுதலைக்காக நமது மாவீரர்கள் நடத்திய ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப்பின் மௌனிக்கப்பட்டது. விடுதலைக் களத்தில் ஏற்பட்ட அந்த பின்னடைவைப் பயன்படுத்திக்கொண்டு, முடிந்தது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்று இலங்கை அரசும், தம்மை இனத்தின் தலைவர்கள் என்று பீற்றிக் கொண்டவர்களும் கூச்சமின்றி பேசிய நிலையில்தான், நாம் தமிழர் கட்சி பிறந்தது. துரோகிகளின் துணையுடன் இனப் பகைவர்கள் புணைந்த அரசியல் சதியை தொடர்ந்து முறியடித்து, தமிழினத்தின் விடுதலை வேட்கையை அணையாமல் காத்து வருகிறது.
இந்த மாவீரர் தின நாளில் இன்னுயிரைத் தந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வீரவணக்கம் செலுத்திடும் வேளையில், எப்பாடு பட்டாகினும், இன்னுயிரைத் தந்தாகினும் இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று உறுதியேற்கிறோம். இந்த உறுதியை தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நாளில் மனப்பூர்வமாக எடுக்க வேண்டும். தமிழீழ தேசத்தின் மீது தொடுத்த போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதனை இன அழிப்பு என்று இதுவரை எந்த ஒரு நாடும் கூறவில்லை.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அங்கு நடந்தது போர்க்குற்றமல்ல, அந்தப் போரே குற்றம் என்று கூறி வருகிறது. நம் தலைவரால் பன்னாட்டு அரசியலிற்காக நியமிக்கப்பட்டு, அரும்பணியாற்றி வந்த மதீந்திரன் பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்டது கொடூர நிகழ்வாகும். தமிழினத்தின் ஆயுத போராட்டத்தை முடக்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்த சிங்களம், அது சர்வதேச அளவில் கொழுந்துவிட்டு எரிவதை சகிக்க முடியாமல் மேற்கொண்ட நடவடிக்கைதான் பரிதியின் கொலையாகும்.
எனவே நமது இனத்தின் விடுதலையை முறியடிக்க எதையும் செய்த நம் எதிரிகள் முனைப்பாக செயலாற்றி வரும் நிலையில், அதனை முறியடித்து, விடுதலையை வென்றெடுக்க இனத்தின் ஒற்றுமை ஒன்றே ஒரே வழியும் வலிமையுமாகும். இலக்கை நோக்கிய ஒன்றிணைந்த செயல்பாடே அந்த ஒற்றுமையை உண்டாக்கும். ஒன்றுபடுவோம், இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம். மாவீரர்கள் நினைவு நாளில் அவர்களின் நினைவை சுமந்து கனவை நோக்கி தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியேற்போம் எ‌ன்று ‌சீமா‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

No comments:

Post a Comment