Translate

Tuesday 6 November 2012

நீதிகோரி லண்டனில் தமிழ் உணர்வாளர் மாநாடு


இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிடப்பட இனப்படுகொலை ஓர் சர்வதேச தீர்ப்பாயத்தின் முன்பாக விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் மாநாடு நாளை புதன்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது.

இதனை பிரிட்டன் தமிழர் பேரவையும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். தாயகத்துத் தமிழர் பிரதிநிதிகள், தமிழக மக்கள் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனத் தமிழ் கூறும் நல் உலகின் பிரதிநிதிகள் அனைவரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த மாநாடு தொடர்பாக பிரிட்டன் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மாநாட்டின் நோக்கம் 2009ஆம் ஆண்டு மாபெரும் மனிதப்படுகொலையுடன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நாள்முதல் இன்று வரை நாம் மரணங்களை கணக்கிட்டு வருகின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுமார் 40000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இழப்புக்களின் எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம்.
சனல் 4 முதலான ஊடகங்கள் அங்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலையின் சாட்சிகளை காட்சிப்படுத்திய வண்ணமும் உள்ளனர். இந்த நிலையில் தமிழர்கள் அனைவரும் அங்கு நடைபெற்ற, நடைபெற்றுவரும் இனஅழிப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரணையை கோரி நிற்கின்றனர் என்பதனை தமிழர்கள் அனைவரும் இணைந்து ஏகோபித்த குரலில் கோருவதும், சர்வதேச சுயாதீன விசாரணைக்கான அழுத்தங்களை மேலும் அதிகரிக்க ஏதுவான வழிகளை ஆராய்வதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
பொறுப்புக்கூறலும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்களும்தான் ஓர் நிலையான தீர்வுக்கு அடைப்படை என்பது இம்மாநாட்டின் அடி நாதமாக அமையும்.
தமிழ் மக்கள் மீது ஏவி விடப்பட்ட இன அழிப்பிற்கான சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரும் அனைத்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் அழைப்பப்பட்டிருக்கிறார்கள். மனித உரிமைகள் மீது நம்பிக்கை கொண்டு, தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பாடுபடும் தாயகத்தில் வாழும் தமிழ் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளும், சமூக மக்கள் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
இந்தியாவிலிருந்து வருகை தருவோர் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு இந்தியா ஒரு பக்க பலமாக இருந்து வருவதாக இலங்கை அரசு தொடர்ந்தும் பிரசாரம் செய்கின்றது. அத்தோடு இந்திய மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தம் பக்கம் இருப்பதாகவும் மேற்குலகை நம்ப வைக்க இலங்கை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதனை முறியடிக்கும் வகையில் தமிழ் நாட்டின் மாநில சட்ட சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள், இந்திய பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் தமிழ் பிரதிநிதிகள், சமூக அமைபுக்களின் பிரதிநிதிகள், தமிழகத்து கலைசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் வழிவகைகளை ஆராய்வார்கள்.
தமிழகத்தில் இதுவரை காலமும் இன உணர்வை ஓர் அணையாத தீயாக தமது பல்வேறு தியாகத்தினால் காத்துவரும் இன உணர்வாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வது இம்மாநாட்டின் முக்கியமான சிறப்பியல்பாகும். அதேபோல் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக குரல் கொடுக்கும் பெரும்பாலான அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்துகொள்வார்கள்.
தாயகத்து தமிழர் பிரதி நிதிகள், தமிழ்நாடு மக்கள் பிரதி நிதிகள், புலம் பெயர் தமிழர்களின் பிரமுகர்கள் என பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈழத்தில் நடைபெற்ற அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுப்பது ஓர் வரலாற்று முக்கிய நிகழ்வாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச பிரதி நிதிகள் ஊடகவியலாளர்கள் சமூக ஆர்வலர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள். இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இனிவரும் காலங்களில் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பரப்புரைகளை தாம் வாழும் நாடுகளில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு இனிவரும் காலங்களில் அனைத்து தமிழர்களும் ஓர் இணக்கப்பாட்டுடன் பணியாற்றுவது குறித்தும் விவாதிப்பார்கள் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment