Translate

Thursday 15 November 2012

உள்ளக அறிக்கையில் மறைக்கப்பட்ட விஜய் நம்பியார் – பதிலளிக்காமல் நழுவிய பான் கீ மூனின் பேச்சாளர்


ஐ.நாவின் மூத்த அதிகாரி சாள்ஸ் பெற்றி சமர்ப்பித்துள்ள சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்த உள்ளக மீளாய்வு அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் குறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. 




போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தபோது ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதியாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார். 
போரின் முடிவில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளுக்கு, பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரிமாறுவதில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். 
ஆனால், அவரது உத்தரவாதத்தின் பேரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் பலர் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். 
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குத் துணைபோனதாக விஜய் நம்பியார் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், உள்ளக மீளாய்வு அறிக்கையில் அவர் பற்றிய குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்த விஜய் நம்பியார் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படாதது தொடர்பாகவும், அறிக்கையின் பல பகுதிகள் கறுப்பு மையினால் நீக்கப்பட்டுள்ளது குறித்தும் இன்னர்சிற்றி பிரஸ் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் கேள்வி எழுப்பியிருந்தது. 
அதற்கு அவர், நாளை இந்த விடயங்கள் குறித்து இன்னொரு சந்திப்பில் பதிலளிப்பதாக கூறியுள்ளார். 
அதேவேளை, நேற்று மதியம் இந்த அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், பின்னர் அந்த இணைய இணைப்பை பெறமுடியாமல் தடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 
இதற்கிடையே நேற்று உள்ளக அறிக்கை கையளிக்கப்பட்ட நிகழ்விலும் ஐ.நா பொதுச்செயலரின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment