Translate

Friday 30 November 2012

தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலையே : முன்னாள் ஐரோப்பிய எம்.பி. எவன்ஸ்


இலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்குகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் ஆரம்பமமாகியுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா சனநாயக சோசலிச குடியரசு என அதன் பெயரில் உள்ளதுபோல் சனநாயகத்தையோ அல்லது சோசலிசத்தையோ பின்பற்றவில்லை எனக்குறிப்பிட்ட ரொபர்ட் எவன்ஸ் அவர்கள் அங்கு நடைபெற்றது இனப்படுகொலை என்பதனை உறுதிபடத் விளக்கினார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னியில் மக்கள் சுதந்திரமாக வாழ்ந்ததை தான் நேரில் கண்டாதகவும் அது நாட்டுக்குள் ஒரு நாடாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பிரித்தானிய தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திரசர்மா, தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் லீ ஸகொட், நோர்வே நாடடைச்சேர்ந்த விவரணப்பட இயக்குனர் பியர்ட் அன்சார்ட் , சர்வதேச மனித உரிமைவாதியும் சட்டவாளருமான  கரன் பார்க்கர், பேராசிரியர் பீற்றர் சால்க், வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் மார்க் டாற்றன் ஆகியோருடன் உலகின்பலபாகங்களிலும் இருந்து வருகை தந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கெடுத்திருந்தனர்.

மாநாட்டு விபரம் :

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி மாணிக்கவாசகர் தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டினை துணை சபாநாயகர் சுகன்யா புத்திசிகாமணி அவர்கள் அகவணக்கத்துடன் தொடக்கி வைத்திருந்தார்.

மாணிக்கவாசகர் தனது அறிமுகவுரையில், நாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பான அரசியல் பின்னணி பற்றி விபரித்ததுடன் அதன் சர்வதேச பரிமாணங்கள் பற்றியும் விளக்கினார். தாயகத்தில் அமைதியானதும், நியாயமானதுமான தீர்வு ஏற்படும்வரை புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து போராடுவார்கள் எனவும் குறிப்பிட்டார். இலங்கைத்தீவில் இடம்பெற்ற மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றினை விசாரிப்பதற்கான சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியதுடன், தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை கண்டறிய சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

லண்டன் ஈலிங் தொகுதியின் பிரித்தானிய தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திரசர்மா தனதுரையில் நடந்து முடிந்தவைகளைப்பற்றி பேசுவதுபோல், இனி என்ன செய்யப்படவேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும், ஒரு நியாயமான தீர்வினை கொண்டுவரவேண்டும் எனத் தெரிவித்தார். இவ்விடயங்களை தான் இந்திய அரசாங்க மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் லீ ஸகொட் அவர்கள தனதுரையில் தமிழ் மக்களின் பிரச்சனையை தொடர்ந்தும் ஐநா சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

நோர்வே நாடடைச்சேர்ந்த விவரணப்பட இயக்குனர் திருமதி. பியர்ட் அன்சார்ட் இலங்கைத்தீவில் ஊடகவியலாளர்களும் இழைக்கப்படும் கொடுமைகள், கருத்துச் சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள், வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி விபரித்தார்.

சர்வதேச மனித உரிமைவாதியும் சட்டவாளருமான  கரன் பார்க்கர் அம்மையார் தனதுரையில் இலங்கைத் தீவு விடயத்தில் ஐநா சபையின் வேறு வேறு பிரிவுகள் முறையாகச் செயற்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். ஐநா சபையின் சிறுவர் விவகாரங்களுக்கான சிறப்பு ஆணையாளர் ராதிகா குமாரசாமி சிறுவர் விவகாரத்தில் ஐந்து பிரிவுகளின் வெறுமனே சிறுவர்களை போரில் ஈடுபடுத்துதல் என்ற ஒரு விடயத்தில மாத்திரம் கவனம் செலுத்தியதாகவும், சிறுவர் நலன் சார்நத மற்றய விடயங்களில் கவனம் செலுத்தவில்லை எனவும்குறிப்பிட்டார்.

பேராசிரியர் பீற்றர் சால்க், வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்  மார்க் டாற்றன் ஆகியோரும் உரை நிகழ்தினார்கள்.

மாநாட்டின் நிறைவுரையினை வழங்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல்விவகார அமைச்சர் தயாபரன்தணிகாசலம் அவர்கள், தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில்,  ஆபிரிக்க தேசியக் கொங்கிரஸ் கொண்டு வந்தது போல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 'தமிழீழ விடுதலை சாசனம்' கொண்டுவர வேண்டும் என்ற பிரேரணையை வரும் அமர்வுகளின் சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment