Translate

Sunday 28 August 2011

தொடரும் துயரும் முடிவில்லாத தீர்வும்


-இதயச்சந்திரன்

கிறீஸ் மனிதர்கள் தொடர்பான
பிரச்சினையை நாடாளுமன்றில் முன்வைத்து ஸ்ரீ தரன் எம்.பி. பேசிய போது, அதனை இடைமறித்த தினேஷ் குணவர்தன, இராணுவத்தினர் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்த வேண்டாமெனக் கூறியதோடு, இந்த நாடு மறுபடியும் எரிய வேண்டுமாவென கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தகைய அச்சுறுத்தல் எதைக் காட்டுகிறது?

உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றுவது இந்த அரசுதான் என்று தமிழில் பேசிய எம்.பி. அஸ்வர் அவர்கள், நாவாந்துறை மக்கள் மீது படையினர் மேற்கொண்ட கோரமான தாக்குதலை, வாழ்வைக் காப்பாற்றும் புதிய வடிவமாகப் பார்க்கிறாரோ தெரியவில்லை.
 மலையகத்தில் ஆரம்பித்து, கிளிநொச்சி பாரதி புரம் வரை நீண்டு செல்லும் இந்தப் பூதங்களின் அட்டகாசம் தணிவடையவில்லை.

ஜனாதிபதியால் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டம், ஒரு சில
மாதங்களில் மறுபடியும் பிறப்பெடுப்பதற்கு, இந்த பூதங்களின் வெட்டி, ஓடும் விளையாட்டு காரணமாக அமையப் போகிறது.

மூன்று நாள் விஜயம் மேற் கொண்டு வருகிற 29 ஆம் திகதி, இலங்கை வரும்  மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளிற்கான அமெரிக்க உதவி
இராஜாங்க செயலர் ரொபேட் ஓ பிளேக்கின் பயணத்திற்கு முன்பாக, அவசரகாலச்சட்டம், மிக அவசரமாக நீக்கப்பட்டுள்ளது.

1979 இல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டமும், 2006 டிசெம்பரில் மெருகேற்றப்பட்ட புதிய சட்டவிதிகளும், இன்னமும் அமுலில் இருக்கும் போது, அவசரகாலச் சட்டத்தை நீக்குவதால் பெரிய மாற்றங்கள் நிகழப் போவதில்லை.
அதேவேளை அவசரகால சட்டவிதிகளின் கீழ் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள், உடனடியாக விடுதலை செய்யப்படுவார்களென்று எதிர்வு கூற முடியாது.

பிடியாணை இல்லாமல் கைது செய்தல், 18 மாதங்கள் வரை தடுத்து வைத்தல் போன்ற கொடூரமான நடைமுறைகளைக் கொண்டதுதான் இச் சட்டம்.

இருப்பினும், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு நேரடியாக இருக்கும் போது, இச்சட்டங்கள் எழுத்துருவில் இருந்தாலும் அல்லது நீக்கப்பட்டாலும் எல்லாமே ஒன்று என்பது தான் யதார்த்தம்.

இச்சட்டம் நடைமுறையில் இருந்த வேளையிலேயே, மலையகத்தில் தோன்றிய பூதக் காற்று, வடக்கு வரை வீசத் தொடங்கியது. 
 கிபீர் அடித்த தேசத்தில், தற்போது பிசாசுகள் அடிப்பதாக மக்கள் விசனமடைகிறார்கள்.

தெருவில் இறங்கிப் போராடும் மக்களை பயங்கரவாதிகளென்று முத்திரை குத்துவதற்கு, அவசரகாலச் சட்டங்கள் தேவையில்லை.

காங்கிரஸ்காரர் சுதர்சன நாச்சியப்பன் கூட்டிய டெல்லி ஒன்று கூடலில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்த களநிலைகள் குறித்தான கருத்துகள், இராணுவ நிர்வாகம் பற்றி இருந்தன.
சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு அதிகரிப்பதாகவும், தமிழர் நிலங்களிலிருந்து படையினர் வெளியேற வேண்டுமெனவும்
அக்கூட்டத்தில் மாவை வலியுறுத்தியிருந்தார்.

இந்த டெல்லிக் கூட்டம், பழைய திம்புக் கூட்டமல்ல என்பதை அதன் முடிவுகளே வெளிப்படுத்தியிருந்தன.
இலங்கை அரசுடன் ஒரு தீர்வினை எட்டுவதற்கு முன்பாக, தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைந்த கருத்தினை வெளிப்படுத்துவது என்பதுதான் இக் கூட்டத்தை கூட்டியதன் நோக்கம் என்று, இதனை ஏற்பாடு செய்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் எந்தெந்த விடயங்களை தீர்வாக முன்வைக்காமல் தவிர்க்க வேண்டுமென்பதை, காங்கிரஸ்காரர் வலியுறுத்திய விடயத்தை, இரண்டாவது
நாள் அமர்வில் காணக்கூடியதாக இருந்ததென சொல்லப்படுகிறது.
சுதந்திரமாக உரையாடல்களை நிகழ்த்துமாறு கூறிய சுதர்சன நாச்சியப்பன், தமது நிலைப்பாட்டில் மென் போக்கினை கடைப்பிடிக்குமாறு தமிழ்க் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கினாராம்.

எதுவித இணக்கமுமில்லாமல் முடிவடைந்த துயரும் தீர்வும் கூட்டத்தில், ஈழத் தமிழர்கள்
ஒரு தேசமென்றும் (NATION), அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டென்றும் முன் வைக்கப்பட்ட கருத்தினை, சில கட்சித் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தேசிய இனம் என்கிற சொல்லாடலிற்குள், சுயநிர்ணய உரிமையும் அடங்கி விடுகிறதென வாதிட்ட தமிழ்க்கட்சி தலைவர்
ஒருவர், வட  கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள், இறைமையுள்ள தேசிய இனத்தவர் என்பதனை புரிந்து கொள்ளவில்லை.
இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்று அவசியமென வலியுறுத்தும் அமெரிக்காவும், இந்தியாவும், ஈழத் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமென்றோ அல்லது இறைமையுள்ள தேசமென்றோ, இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை.

சிறுபான்மை இனம் என்கிற குறுகிய கருத்து நிலைக்குள், தமது பார்வைக்கு எல்லைக் கோடுகளை வரையும் இந்நாடுகள், நிரந்தரத் தீர்வினை
உருவாக்க முனையவில்லை போல் தெரிகிறது.

இம் மாத இறுதியில் இலங்கை வரும் ரொபேர்ட் ஓ பிளேக் அவர்கள், அரசு தீர்வொன்றினை முன்வைத்தால், போர்க் குற்ற விசாரணைக்கான
அழுத்தங்களை கிடப்பில் போடுவதாக ஒரு பேரம் பேசலை முன் வைக்கலாமென கூறப்படுகிறது.
துயரும் தீர்வும் (AGONY AND SOLACE) அரங்கில், பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால், தருவதை பெற்றுக்கொள்வதே சரியென எண்ணிய சிலருக்கு, இத்தகைய பேரம் பேசும் விடயத்தை பிளேக் முன்வைத்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
 
 இவை தவிர இவ்வரங்கில் கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த கஜேந்திரக்குமார்
பொன்னம்பலம் அவர்கள் தனிப்பட்ட வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
ஒரே நாட்டிற்குள் எட்டப்படும் ஒரு தீர்வொன்றிற்கு அடிப்படையான தமிழ் தேசத்தின் அரசியல் பிறப்புரிமையை,
சர்வதேசமும் இந்தியாவும் அங்கீகரிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே இதனை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜ்ய சபாவில் மேற்கொண்ட விவாதத்தின் போது உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவும், ஓ பிளேக் அவர்களும், தீர்வொன்றிற்கான அடிப்படையாகக் கொள்வது பொருத்தமாக விருக்கும்.

சகல இனங்களும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழக்கூடிய வகையில், நிரந்தர தீர்வொன்றினை அடைய இந்திய அரசு பாடுபடுமென பழைய பல்லவியைப் பாடிய எம்.எஸ். கிருஷ்ணா, காணாமல் போகடிக்கப்பட்டோர், யுத்த குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. நிபுணர்குழு
அறிக்கை போன்றவை, ஐ.நாவின் உபகட்டமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என கூறியுள்ளார்.

அவர் கூறவிழையும் விடயம் இதுதான்.
அதாவது நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. பொதுச் சபையிலோ, மனித உரிமைப் பேரவையிலோ அல்லது அதன் பாதுகாப்புச் சபையிலோ, பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் சமர்ப்பிக்கவில்லையென்று கிருஷ்ணா கவலைப்படுவது போல் தெரிகிறது.
சமர்ப்பிக்கவிடாமல் தடுப்பதும், சமர்ப்பிக்கவில்லை என்று கவலைப்படுவதும், வல்லரசாளர்களின் இரட்டை வேடங்களின் வெளிப்பாடுகள் என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல.

இருப்பினும் பிரச்சினைகளை தமது இராஜதந்திர வளையத்திற்குள் வைத்திருக்க வேண்டுமென விரும்பும் இந்தியாவானது, பிளேக்கின் பயணம் நிறைவுற்றதுடன், இந்திய நாடாளுமன்றக் குழுவொன்றினை அனுப்பப் போவதாக செய்திகள் கூறுகின்றன.
அதன் பின்னர் பிரதமர் மன் மோகன் சிங் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார்.
ஆகவே தமது தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலிற்குள், இலங்கை இனப்பிரச்சினையை வைத்திருக்கவே இந்தியா முனைகிறது
என்பதே உண்மை.

No comments:

Post a Comment