Translate

Friday 16 September 2011

விடுதலைப் புலிகள் லிபிய விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்கள் !

தமிழீழ விடுதலைப் புலிகளை, கடாபிக்கு எதிரான லிபிய போராளிகளுக்கு ஒப்பிட்டு, நெதர்லாந்து, ஹேக் நீதிமன்றதில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து இலங்கையர்களுக்கு எதிரான வழக்கு நேற்றைய தினம் ஹேக் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பிரதிவாதிகள் தரப்பில் வாதிட்ட பிரபல சட்டத்தரணி, தமது தரப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே நிதி திரட்டியதாக சுட்டிக்காட்டினார். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும், அவர்கள் கடாபிக்கு எதிரான போராட்டக் குழுவுக்கு ஒப்பான விடுதலைப் போராளிகள் எனவும் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், இந்த வழக்கின் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி விக்டர் கொப்பே, விடுதலைப் புலிகள் லிபிய விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்களா என்ற வாதம் இடம்பெறவில்லை என தெரிவித்தார். எதிர்வரும் மூன்று வாரங்களில் விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளா அல்லது பயங்கரவாதிகளா என்ற விவாதம் ஹேக் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே, நிதி வழங்கல் தொடர்பில் கைதான குறித்த ஐவரினதும், ஏனைய நெதர்லாந்து தமிழர்களின் நிதிவழங்கல் வழக்குகளும் தங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையை மூவர் கொண்ட ஹேக் நீதிமன்றம் நீக்கினால், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்குவது சட்ட ரீதியானதாக்கப்படும் என கொப்பே சுட்டிக்காட்டியுள்ளார். உலக அரங்கில் இந்த வழக்கு ஒரு முக்கியமான வழக்காகப் பார்க்கப்படுவதோடு, இலங்கை அரசும் இதனை உண்ணிப்பாகக் கவனித்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment