Translate

Thursday 24 November 2011

கனத்த நினைவுகள் சுமந்து ஓர் பகிர்வு(நினைவுகளின் மீளாப் பயணம்)

கனத்த நினைவுகள் சுமந்து ஓர் பகிர்வு(நினைவுகளின் மீளாப் பயணம்)

மாவீரர் நாளின் முதல்நாள். 26ந் திகதி. நாம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்கிறோம்.

கண்களில் நீர் சொரிய சொரிய தேடுவார்கள். விசும்பும் அவர்கள் குரல் கேட்டு நெஞ்சு வெடிக்கும். கல்லறையை கண்ட உடன் கட்டியணைத்து குமுறி அழுவார்கள். என்ன ஆறுதல் சொல்ல முடியும். தேசவிடுதலை, மாவீரர் என என்ன சொன்னாலும் பத்துமாதம் சுமந்த தாய்க்குதானே தெரியும் அதன் பிரிவு வலி. வார்த்தைகளால் வடிக்க முடியாத சோகம். ஒரு கல்லறையை நிலைத்து பார்த்தால் எமக்கு தொண்டை அடைக்கும். கண்களில் நீர் எட்டிப்பார்க்கும். 


பெற்றவர்கள் கல்லறைகளுக்கு மாலைகள் போடுவார்கள். பூக்கள் சொரிவார்கள். தம் மணியான செல்வங்களுக்கு உணவு கொண்டு வந்து படைப்பார்கள். சந்தணக்குச்சிகளை கொழுத்தி, மெழுகுதிரி, நெய்விளக்கு என்பவற்றை ஏற்றி வழிபடுவார்கள். கண்களில் இருந்து சொரியும் நீரைப் பார்த்து வருணதேவனும் பொறுக்காமல் மழையாய் பொழிந்து அழுவான். அது எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. குடும்பமாய் அமர்ந்து கண்ணீரால் அர்ச்சிப்பார்கள்.

அடுத்தநாள்(27ந் திகதி) தான் மாவீரர் தினம் என்றாலும் முதல்நாளே அவர்களின் அஞ்சலிகள் தொடங்கிவிடும். காலையில் இருந்து மாலைவரை மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாது கல்லறைகளுக்கு அருகே இருப்பார்கள்.

வீடு திரும்பும் போது அவர்கள் முகத்தில் சோகம் இழையோடும். எவருடனும் கதைக்க மாட்டார்கள். நெஞ்சு முழுவதும் கண்மணிகளின் கனத்த நினைவு. 

சிறிய குழந்தைகள் கூட தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும். மிகவும் மனதைப்பிழியும் நினைவு அது. தமது பிள்ளைகளின் கல்லறை அங்கே இல்லை என்றவுடன் அவர்கள் படும்பாடு சொல்ல முடியாது. குழறி குழறி அழுவார்கள். மீண்டும் புனரமைக்கப்பட்ட துயிலும் இல்லம் என்பதால் அந்த தினத்துக்குள் முழுக்கல்லறைகளும் மீண்டும் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டு அன்று கல்லறைகள் இல்லாத பெற்றோர்கள் மண்களில் வீழ்ந்து புரண்டு அழுதனர். எவராலும் அவர்களை தேற்றமுடியவில்லை. அப்படியான் பெற்றோர்களுக்கு தூயிலும் இல்ல பொறுப்பாளரால் 27ந் திகதி 'நினைவுச்சுடர்' ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன

இவற்றைத்தவிர அங்கே தொண்டர்களாலும் போராளிகளாலும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தென்னங்கன்றுகள் ஒவ்வொரு கல்லறைக்கும் அருகே வைக்கப்பட்டன. மிக மிக அற்புதமான முயற்சி. மாவீரர் நாள் முடிவுற்றதும் அவர்கள் வீடு செல்லும் போது தென்னங்கன்றுகளை தம்மோடு எடுத்து சென்று அந்த பிள்ளையின் நினைவாக தமது வளவிலே நாட்டுவார்கள். அந்த தென்னம்பிள்ளையை தமது பிள்ளையாக பாவனை செய்து வளர்ர்ப்பார்கள். கல்லறைகளுக்கு முன்னாலே சுடர் ஏற்றுவதற்காக ஒரு கம்பியிலே சிறிய தாளியை பொருத்தி, அதற்குள்ளே தேங்காய் கொப்புறாக்கள், திரி, கற்பூரம், ஒரு நெருப்புபெட்டி என்பவற்றை பொலித்தீன் துனியாலே மூடி கட்டுவார்கள். இது ஒவ்வொரு கல்லறைகளுக்கு முன்னாலும் இருக்கும். கல்லறை இல்லாத பெற்றோர்களுக்கு இப்படியான சுடரை கல்லறைகள் அமையப் போகும் இடத்தில் வைப்பார்கள். 

துயிலும் இல்ல வளாகம் எங்கும் மின் விளக்குகள் வண்ண ஒளி வீசும். ஒலி பெருக்கிகளில் மாவீரர் நினைவு கானங்கள் காற்றினூடே கல்லறை தழுவும் கானமாய் இதய்த்தை வருடும். 

அன்றைய தினம் தலைவனின் பிறந்த தினம் காலையில் உற்சாகமாக இருந்தவர்கள் எல்லாம், துயிலும் இல்லம் வந்த உடன் இறுக்கமாகி போவார்கள். கல்நெஞ்சனையும் கசியவைக்கும் அற்புதமான இடம். கண்ணீரால் நனைந்து நனைந்து துயிலும் இல்லம் எப்பொழுதும் ஈரலிப்பாகவெ இருக்கிறது போன்ற ஒரு பிரமை. 

நாளை மாவீரர் நாள். தலைவன் உரை. உச்ச நாளிகை என மாலை நேரம் நம் மனதைப் பிழியப்போகிறது. இந்த எண்ணத்துடன் எல்லோரும் வீடு திரும்பினர்.

No comments:

Post a Comment