Translate

Friday 30 March 2012

இந்தியப் பொருட்கள் இலங்கையில் வேண்டாமா? முதலில் புத்தர் சிலைகளை அகற்றுங்கள்!!


இந்தியப் பொருட்கள் இலங்கையில் வேண்டாமா? முதலில் புத்தர் சிலைகளை அகற்றுங்கள்!!
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. இந் நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறுபட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிப்போமானால் முதலில் இங்குள்ள புத்தரின் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டிவரும். ஏனெனில், புத்த தர்மமும் எமக்கு இந்தியாவிலிருந்தே கிடைத்தது என ஐ. தே. க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்கம் வெளிநாட்டுக் கொள்கையை கையாள்வதில் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்விடயம் தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா. எமக்கெதிராக நிபுணர் குழு அமைக்காது. அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணை கொண்டு வராது என வெளிநாட்டமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உறுதிமொழிகளை வழங்கினார்.

ஆனால் இவையனைத்தும் நடைபெற்று முடிந்துவிட்டது. அரசாங்கத்திற்கு இராஜதந்திர ரீதியான எதிர்காலத் திட்டம் கிடையாது. இதுவே இன்றைய நிலைமைக்கு காரணமாகும்.

இது நாட்டுக்கு எதிரான பிரச்சினையல்ல. அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் அரசுக்கு எதிராகவே இப்பிரச்சினை எழுந்துள்ளது. எனவே, அரசாங்கமே இதற்குத் தீர்வு காணவேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் இராஜதந்திரம் கிடையாது.

சுதந்திரம் கிடைத்தது தொடக்கம் இந்தியாவுடன் நட்புறவை பேணி வந்துள்ளோம். அந்நாட்டின் உதவி எமக்கு அவசியம் தேவையாகும். ஆனால் இன்றைய அரசாங்கத்தால் இந்தியாவின் நட்புறவை பெற முடியவில்லை. இது எமது வெளிவிவகாரக் கொள்கையின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.

இவ்வாறானதோர் தருணத்தில் அமெரிக்கா, இந்தியா பொருட்களை பகிஷ்கரிக்குமாறும் இந்நாடுகளுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துமாறும் சில அமைச்சர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறு நாம் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்கும் பட்சத்தில் முதலில் புத்தர் சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டிவரும். ஏனென்றால் புத்த தர்மமும் இந்தியாவிலிருந்தே எமக்கு கிடைத்தது என்றார்.

No comments:

Post a Comment