யாழ்.கொக்குவில் கலட்டி சந்திப் பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த முகாம் காணியினுள் இராணுவத்தினரால் புத்தர் கோவில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்தமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,


சமாதான காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களைக் கண்காணிப்பதற்காக யாழ்.பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த குறித்த பகுதியில் இராணுவத்தினரால் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அப்பக்கடை பல்கலைக்கழக மாணவர்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ முகாமின் ஒருபகுதிக்காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியிருக்கின்றனர். இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து காணியின் கட்டடங்கள் சில இடிக்கப்பட்டிருக்கின்றன. கட்டங்கள் இடிக்கப்பட்ட நிலையிலேயே இராணுவத்தினர் அமைத்திருந்த புத்தர் கோவில் வெளித்தெரியவந்திருக்கின்றது.

காலப் போக்கில் குறித்த புத்தர் கோவிலை பெரிய அளவில் அமைப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்கக் கூடும் என்று அயலில் உள்ள மக்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். அதன் அருகாக விநாயகர் ஆலயம் ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.