Translate

Tuesday 17 April 2012

கோட்டாபயவுக்கு எதிராக சிறப்புரிமை மீறல் விவகாரத்தை எழுப்புவேன்: கிரியெல்ல


கிரியெல்லவுக்கு கோட்டாபய சவால்!


தான் தெரிவித்த கருத்துக்கு அரச சேவையாளரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ சவால் விடுத்தமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் விவகாரத்தை எழுப்பவுள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினரான தான் கூறிய கருத்தை சவாலுக்குட்படுத்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உரிமை இல்லை என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

'பாதுகாப்புச் செயலாளர் ஓர் அரச ஊழியர் ஆவார். எனவே மரியாதை முறைமைப் படியில் அவர் மிக கீழ் நிலையிலேயே உள்ளர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அறிக்கைக்கு சவால்விடும் அதிகாரம் அவருக்கு இல்லை. குரல் அற்ற மக்களுக்காக குரல்கொடுப்பது எமது கடமை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது கருத்துக்களை வெளிப்படுத்துகிறோம்' என லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறினார்.

தனது மகன் கடத்தப்பட்டமை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, தனது மகனை கடத்திய நபரை பொலிஸ் நிலையத்தில் கண்டதாக கூறும் பெண்ணின் பெயரை தருமாறு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சவால் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இவ்விடயத்துடன் தொடர்பான நபரின் பெயரை வழங்குவதில் தான் மகிழ்ச்சியடைவதாக லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறினார். ' பாதுகாப்பு அமைச்சரும் முப்படைகளின் தளபதியுமான இந்நாட்டின் ஜனாதிபதி கோரினால் எந்த தகவலையும் வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைவேன்' என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment