Translate

Wednesday 25 April 2012

தமிழீழத்தை உருவாக்க இந்தியா உதவ வேண்டும் – இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த குரல்கள்

தமிழர் பகுதிகளில் சிங்கள ஆதிக்கமுள்ள சிறிலங்காவின் கொடுங்கோலாட்சி தொடர்கின்ற நிலையில், தமிழீழத் தனிநாட்டை உருவாக்குவதற்கு ஐ.நாவை இந்தியா இணங்கச் செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இன்று கேள்வி நேரத்தின் போது, இது பற்றிப் பிரச்சினை எழுப்பிய அவர், 

“சிறிலங்காவில் தமிழர் வாழ்விடங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவத்தினரே உள்ளனர். 

ஆயிரக்கணக்கான தமிழர்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வாழ்கின்றனர். 

கொடுங்கோலாட்சி தான் அங்கு நடக்கிறது. 

இந்திய- சிறிலங்கா உடன்பாடு மதிக்கப்படவில்லை. 

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டபடி, தமிழீழத்தை அமைப்பது குறித்து அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 

தமிழர்கள் அங்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்காக இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஐ.நாவையும் அனைத்துலக சமூகத்தையும் இந்தியா இணங்கச் செய்ய வேண்டும். 

இந்திய நாடாளுமன்றக் குழு சிறிலங்காவில் இருந்து திரும்பியுள்ள போதும், மத்திய அரசிடம் இருந்து எந்த அறிக்கையும் வராதது வருத்தமளிக்கிறது.“ என்று தெரிவித்தார். 
அதேவேளை, தமிழர்களுக்கு புனர்வாழ்வு உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திமுகவின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தாமரைச்செல்வன் வேண்டுகோள் விடுத்தார். 

“தமிழர்களுக்கான உதவிகள் அவர்களுக்கே சென்றடைவதற்கும், அது திசை திருப்பி விடப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கும் இந்தப் பொறிமுறை அவசியம். 

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகள் பல சிங்களவர்களால் ஆக்கிரமிக்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. 

சிங்களவர்கள் அங்கு அத்துமீறிக் குடியேறி வருகின்றனர். 

சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் இந்த விவகாரங்களையெல்லாம் இந்தியா கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்

No comments:

Post a Comment