Translate

Tuesday 8 May 2012

தமிழ் அமைப்புக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

    முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்ததை விடவும் இப்போது அதிக வலியை உணர்கின்றோம். முள்வேலி முகாம் தந்த அவலங்களை விடவும் இப்போது அதிக அச்சத்திற்குள்ளாகியுள்ளோம். 


    இறுதி யுத்தம் இத்தனை அவலங்களைத் தந்தபோதும் எங்களது மக்கள் புலம்பெயர்ந்து வாழும் எங்கள்மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். தமிழீழப் போர்க் களம் சிதைக்கப்பட்டு விட்டாலும், புலம்பெயர் தமிழ் உறவுகள் சிங்கள இனவாதத்திடமிருந்து தங்களை மீட்பார்கள் என்ற எதிர்காலக் கனவுடன் காத்திருந்தார்கள். 


    ஆனால், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாகி விஸ்வரூபம் எடுத்துள்ள தலைமைப் போட்டி, தாயகக் கனவுகளைப் பின் தள்ளிவிட்டன. சிங்கள தேசத்தால் சிறை பிடிக்கப்பட்டு, உயிர்ப் பாதுகாப்பற்ற வாழ்வையே விதியாகக் கொண்ட தமிழ் மக்களது உளவுரணைப் புலம்பெயர் களத்தில் உங்களால் மேற்கொள்ளப்படும் போட்டிகள் சிதைத்து வருகின்றன. அடிமை வாழ்வுக்குள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைப் புலம்பெயர் தமிழ்த் தலைமைப் போட்டியாளர்கள் உருவாக்கியதைத் தவிர வேறெதனையும் சாதித்ததாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. 

    உங்கள் தலைமைப் போட்டி அரசியலுக்குள் தமிழீழம் சிதைக்கப்படுவதை இனியும் பார்வையாளர்களாக இருந்து சகித்துக்கொள்ள முடியாது. தேசத்தை மீட்பதற்காகப் போராட வேண்டிய தமிழ் மக்களாகிய எங்களை இனியும் நீங்கள் உங்கள் கோஷங்களுக்குள் அலைக்களிப்பதை அனுமதிக்க முடியாது. தமிழீழ விடுதலைக்கான புலம்பெயர் போர்க் களம் சிதறடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.         இதுவரை காலமும் உயிர்களை விலையாகச் செலுத்தி, உருவாக்கிய தமிழ்த் தேசிய விடுதலைத் தளங்கள் சுயலாபங்களுக்காக விலையாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. 

    எனவே, உங்களுக்குள் உருவாகி கோர வடிவெடுத்திருக்கும் தலைமைப் போட்டியைப் புறம்தள்ளிவிட்டு, களத்தில் இணைந்து பணியாற்ற அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்ற எங்களது இறுதி வேண்டுகோளை உதாசீனம் செய்ய வேண்டாம் என்று இந்தத் தருணத்தில் இறுகிய மனத்துடன் நிபந்தனையாக உங்கள் முன் வைக்கின்றோம். 

    இனியொரு காலம் இரண்டாக நிற்பது சாத்தியமே இல்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றோம். இரண்டு மாவீரர் தினம், இரண்டு முள்ளிவாய்க்கால் தினம் என்பது தமிழ்த் தேசிய சிதைவின் அதி உச்ச நிலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஓரணியில் நின்று உறுதியாகப் போராட முடியாதவர்கள் தமிழீழ விடுதலைத் தளத்திலிருந்து தாமாக விலகிக் கொள்வதே நல்லது. மாறாக, தனி மனிதர்களாகத் தம்மை முன்நிறுத்த முயல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மக்கள் அணிதிரள்தல் மூலம் காணாமல் ஆக்கப்படுவார்கள். 

    தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட புலம்பெயர் தமிழ்த் தேசிய தளங்களான கிளைகளின் பொறுப்பாளாகள் முரண்பட்டு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும்முன்னால் பணியாளர்களுடன் திறந்த பேச்சுக்களை நடாத்தி, அவர்களை உள்வாங்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், தேசியத் தலைவர் அவர்களது பாதையிலிருந்து விலகி, போட்டி அரசியல் செய்ய முற்படுபவர்கள் தமது தவறுகளைத் திருத்தி, தமிழீழ விடுதலைப் போர்க் களத்தில் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். 

    தமிழீழ மக்களை எதிரியின் கோரப் பிடியிலிருந்து மீட்கவும், தமிழீழ மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவும் புலம்பெயர் தமிழர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள். அந்தத் தேசிய கடமையிலிருந்து யாரும் விலகிச் செல்ல முடியாது. மாவீரர் தினமும், மே 18 முள்ளிவாய்க்கால் பேரழிவு தினமும் இரண்டு படுத்தப்படுவது திட்டமிட்ட தேசியச் சிதைவு முயற்சியே! எனவே, இந்த நாசகார எண்ணங்களிலிருந்து விடுபடுமாறு மண்ணுக்காக மரணித்த மாவீரர்கள் பெயராலும், மண்ணில் உயிர்நீத்த மக்களின் பெயராலும் வேண்டுகின்றோம்!

- புலம்பெயர் தமிழ் சிவில் சமூகம் 
 tamileelamvoice@gmail.com

No comments:

Post a Comment