Translate

Monday 28 May 2012

நவநீதம்பிள்ளையின் இரண்டாவது பதவிக்காலம்

ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு இரண்டாவது பதவிக்கால நீடிப்பு அரைமனதுடன் வழங்கப்பட்டிருப்பதாக தென்படுகிறது. தென்னாபிரிக்காவின் முன்னாள் நீதிபதியாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் பணிபுரிந்த நவநீதம்பிள்ளை 2008 செப்டெம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த அவரின்  முதலாவது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மேலும் இரு ஆண்டுகளுக்கு அவரின் சேவைக்காலத்தை நீடிக்க ஐ.நா. பொதுச் சபை அங்கீகரித்துள்ளது. 

இரண்டாவது பதவிக்காலமாக நான்கு வருடங்களுக்கு பணிபுரிய நவநீதம்பிள்ளை கோரியிருந்தபோதிலும் அதனை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்து விட்டதாக ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேவேளை அவர் இருவருடங்களுக்கு மட்டுமே பணிபுரிய விருப்பம் தெரிவித்திருந்ததாக மற்றொரு தரப்பினர் கூறியுள்ளனர். ஆனால், நவநீதத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அமெரிக்கா கடும் ஆட்சேபனையை தெரிவித்திருந்ததாகவும் ஆயினும் பிள்ளையின் சொந்த நாடான தென்னாபிரிக்காவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் மனதை மாற்றி இருவருட பதவிக்கால நீடிப்புக்கு இணங்கச் செய்ததாகவும் அறிய வருகிறது. சீனா, சிரியா மற்றும் மனித உரிமைகளை மீறுவோர் மீது நவநீதம்பிள்ளை கடுமையாக நடந்துகொள்ளவில்லையெனவும் அதேசமயம் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பத்திரும்ப பக்கச்சார்பான தன்மையை அவர் வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவித்தே ஒபாமா நிர்வாகம் நவநீதம்பிள்ளையின் இரண்டாவது பதவிக்கால நீடிப்புக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. 
இருவருடங்களுக்கு நவநீதத்தின் பதவியை நீடிக்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேற்கொண்டிருந்த சிபார்சை ஐ.நா. பொதுச் சபை அங்கீகரிப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் விசனத்துடனான கடிதம் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் ரைஸின் கரத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வழமையாக இருந்துவரும் நடைமுறையைப் பின்பற்றி நவநீதம்பிள்ளைக்கு பதவிக்காலத்தை இருவருடங்களுக்கு நீடிப்பதாக காட்டிக்கொண்டாலும் இந்த நியமனம் தொடர்பாக ஏனைய வேட்பாளர்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டுமென்ற எண்ணப்பாட்டை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கொண்டிருப்பதாக நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் அங்கீகரிக்கப்பட்ட செய்திச் சேவையான இன்னர் சிற்றி பிரஸ்  குறிப்பிட்டிருக்கிறது. நவநீதம்பிள்ளைக்கு இருவருட கால பதவி நீடிப்பை வழங்கும் ஐ.நா. செயலாளரின் பிரேரணை தொடர்பாக ஆராய்ந்து அங்கீகரிப்பதற்காக வியாழன் மாலை ஐ.நா. பொதுச் சபை கூடிய போது அக்கூட்டத்தில் நிரந்தர  வதிவிடப் பிரதிநிதியின் தரத்தில் இல்லாத சிரியாவின் பிரதிநிதி மட்டுமே உரையாற்றியுள்ளார். அத்துடன் அக்கூட்டத்திற்கு பான் கீ மூனோ அல்லது அவரின் பிரதி அதிகாரியான ஆஷா ரோஸ்மைக்கிரோபோ பிரசன்னமாகியிருக்கவில்லையென்று கூறப்படுகிறது. 
தென்னாபிரிக்காவில் இந்திய வம்சாவளி தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை பலபடிகளைத் தாண்டியே ஐ.நா. வில் உயர் பதவியை பெற்றுக்கொண்டவராகும். உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அளப்பரிய பணிகளை முன்னெடுத்தவரெனவும் தற்போதும் தீவிரமாக முயற்சிக்கப்படுவபரெனவும் நியாயமான சிந்தனை கொண்டவர்களால் கருதப்படுபவர். மனச்சாட்சிக்கு விரோதமின்றி அதேசமயம் தான் வகிக்கும் பதவிக்கான விதிமுறை வரம்பை மீறாமலும் செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை மனித உரிமைகளை உதாசீனம் செய்துவரும் அரசாங்கங்களின் கண்டனத்துக்கும் விசனத்துக்கும் உள்ளாகியமை எதிர்பார்க்கப்பட்ட விடயமேயாகும். வாஷிங்டனிலுள்ள இஸ்ரேல் ஆதரவாளர்களினால் அவர் எதிர்ப்புக்குள்ளாகியிருந்த போதிலும் ஐரோப்பிய அரசாங்கங்கள் பல அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கின்றன. பிரிட்டனின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் ஜெரமி பிரவுணியிடமிருந்து பிள்ளைக்கு இரண்டாவது பதவிக்கால நீடிப்பு கிடைத்ததும் உடனடியாகவே பாராட்டுத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நவநீதம்பிள்ளையென்ற தனி மனிதருக்கு அப்பால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரென்ற ரீதியில் அவருக்குள்ள பொறுப்புகளை அவர் சிறப்பாக இதுவரை காலமும் நிறைவேற்றியிருக்கிறாரா என்பதைப் பார்ப்பதே முக்கியமானதாகும். ஐவரி கோஸ்ட், அரபு வசந்தம், ஏன் இலங்கை விவகாரங்களில் கூட மனித உரிமைகள் விவகாரத்தில் தனது வரையறைக்குள் அவர் சிறப்பான பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார். ஆனால், அரை மனதுடனேயே அவருக்கு இரண்டாவது பதவிக்கால நீடிப்பு வழங்கப்பட்டிருக்கமானால் உலகநாடுகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் ஐ.நா. முறைமையில் குறைபாடு இருக்கின்றது என்ற சந்தேகமே பரவலாக ஏற்படும். மனித உரிமைகள் உலகின் எந்தப் பகுதியில் இடம்பெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தியாக அடுத்த இரு வருடங்களுக்காவது நவநீதம்பிள்ளை விளங்குவார் என்பது நியாயமான சிந்தனையாளருக்கு நிச்சயமாக சிறிதளவு ஆறுதலளிக்கும் செய்திதான்.

No comments:

Post a Comment