2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் “அக்ஷன் பெய்ம்’ தொண்டு நிறுவனத்தின் 17 பணியாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்தமைக்கு அமைவாக அவைபற்றிய நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் குறித்து வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசு தீர்மானித்திருக்கிறது. அதன் முதற்படியாகவே இந்த இருபடுகொலைகள் பற்றிய விசாரணைகளை சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

நல்லிக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில், 2006 ஆம் ஆண்டு திருகோண மலையில் இடம்பெற்ற இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் “அக்ஷன் பெய்ம்’ தொண்டுப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்யுமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டுள்ள சட்டமா அதிபர் திணைக்களம், இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்திச் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

சட்டமா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக பொலிஸ் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக சிறீலங்கா பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.