Translate

Wednesday 16 May 2012

மிகப்பெரிய மனித அவலத்தை சிறிலங்காவின் இனவெறி அரசு நடாத்தியிருக்கின்றது


உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ் பேசும் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகிப்போன முள்ளிவாய்க்கால் படுகொலையின் வலியினையும் சதிகளையும் சோதனைகளையும் சுமந்து மூன்று ஆண்டுகள் கடந்து போய்விட்டது. 
ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஒரே நாளில் கொன்றொழித்த இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை இடம் பெற்ற நாள் மே18. 

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்கள் மீதும் வீர மறவர்கள் மீதும் தடைசெய்யப்பட்ட அதிபாரக்குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் வீசி சிங்களம் விதைத்த மனிதப் பேரவலத்தில் தமிழ்மக்களின் குரல்கள் மரணத்திற்குள் அமிழ்தப்பட்ட நாள் மே18.

நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்களை சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி பல்லாயிரம் போராளிகளைச் சிறைப்பிடித்து பல்லாயிரக்கணக்கான பெண்களை விதவைகளாக்கி எஞ்சிய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து மிகப்பெரிய மனித அவலத்தை சிறிலங்காவின் இனவெறி அரசு நடாத்தியிருக்கின்றது.

உணர்வு மிக்க சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!

2009ம் ஆண்டு மேமாத நடுப்பகுதியில் ஈழத்தமிழர்களிற்கு வரலாறுகாணாத பேரழிவினை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வினைச் சிதைத்து அநீதிகளையும் அக்கிரமங்களையும் செய்த மகிந்தஅரசாங்கம் முப்படைகளோடு முள்ளிவாய்க்கால் வெற்றிவிழாவினை இக்காலப்பகுதியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடிவருகின்றது.

மறுபுறத்தில் உலக வல்லாதிக்க நாடுகள் இணைந்து சிறிலங்கா அரசாங்கத்தின் மனிதப்படுகொலைக்கு எதிராக குரல் எழுப்ப ஆரம்பித்திருப்பதுடன் சுயாதீன விசாரணையின் அவசியத்தினையும் வலியுறுத்திவருகின்றார்கள்.

எமது இனத்திற்கு ஏற்பட்ட உயிரழிவுகள் காலத்தால் ஈடுசெய்யமுடியாதவை. எனினும் தமிழ்மக்களின் வாழ்வினை சீரழித்த சிங்கள அரசாங்கத்தினை சர்வதேசத்தின் முன் நிறுத்தி நீதி கேட்கவேண்டும். இதனை வயுறுத்தியும்; ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஆறாத வடுவாகிப்போன முள்ளிவாய்க்கால் படுகொலையினை நினைவுகூர்வதற்காகவும் தமிழ் இனஅழிப்பு நாளான சிவந்த மே18 நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி 14:30 மணியளவில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசனின் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களினதும் எமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடிய வீர மறவர்களின் தியாகத்தினையும் நெஞ்சினில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துவதற்கும் மனித அவலம் இடம்பெற்ற நாளான மே 18ம் திகதியினை தமிழ் இனஅழிப்பு நாளாக அறிவித்து போர்குற்ற விசாரணைகளை வலியுறுத்துவதற்குமாகவும் காலத்தின் தேவைஅறிந்து அனைத்து தமிழ்மக்களையும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை இடம் பெற்ற கொடூர யுத்தத்தின் போது உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தவிருக்கும் சுவிசில் வசிக்கும் உறவினர்கள் அவர்களது உருவப்படங்களை ஜெனீவா முன்றலுக்கு 13:30 மணியளவில் எடுத்துவந்து வணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலதிக விபரங்களை 076 224 88 59 078 713 09 18 078 662 93 06 என்னும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நன்றி.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

No comments:

Post a Comment