Translate

Sunday 10 June 2012

தேர்தலை பகிஷ்கரிக்கும் படி கூறியமையே புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்: ஹக்கீம் _


  2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கும் படி விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை கேட்டது தான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று திருகோணமலை சிங்கபுர என்ற எல்லையோரக் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். 


அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள எல்லைப்புற சிங்களக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். தேசத்திற்கு மகுடம் கண்காட்சி அம்பாறையில் நடைபெறுவதால் தமது அமைச்சின் மூலம் கிழக்கு மாகாண மக்களுக்கு ஆற்றக்கூடிய பணிகளை இனங்காணவே அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டு சிங்களக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.

சிங்கபுர கூட்டத்தில் அவர் தொடர்ந்து கூறியதாவது,

விடுதலைப் புலிகளுடன் அரசு நடத்திய ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளிலும் நான் அரச பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளேன். புலிகள் தரப்பில் தற்போதைய அமைச்சர் கருணாவும் அப்பேச்சுக்களில் கலந்து கொண்டுள்ளார். 2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கும் படி விடுதலைப் புலிகள் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதுதான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது.

மஹிந்தபுர கிராமத்தில் மீள்குடியேறிய மக்கள் தம்மை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய அங்குள்ள கிராம சேவைகள் உட்பட அதிகாரிகள் மறுப்பதாக என்னிடம் முறையிட்டனர். நான் இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவேன் எனவும் தெரிவித்தார்.

எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அமைச்சரை கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் படி கேட்டுக்கொண்டனர். இது தேர்தல் விஜயம் அல்ல என அமைச்சர் அம்மக்களுக்கு பதிலளித்தார். 

No comments:

Post a Comment