Translate

Tuesday 10 July 2012

சிங்களப் பேரினவாதிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக தமிழர்களை அடக்க நினைக்கும் இந்திய மத்தியரசு.

சிங்களப் பேரினவாதிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக தமிழர்களை அடக்க நினைக்கும் இந்திய மத்தியரசு.

 இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விவரங்களை, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக டி.ஜி.பி., மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுர
ை, திருநெல்வேலி டி.ஐ.ஜி.,க்கள், க்யூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவு பிரிவு பொலீசாருக்கு மத்திய உள் விவகாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா அனுப்பி உள்ளார். என்று செய்திகள் கூறுகின்றன.

ஏன் இப்படி இந்திய மத்திய அரசு இப்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது? 



அண்மையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறியிருந்தார். மற்றும் தமிழகத்தில் கருணாநிதியும் டெசோ அமைப்பை மறுபடியும் கூட்டி ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் தான் தீர்வு என்று கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழர்கள் இதேபோன்று பேசினால் இன்னும் 100 முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்திக்க நேரிடும் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இந்தக் கடிதத்தில் இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கும் மாறும், தமிழர்களுக்கு தனியான தாயகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் ஒன்றை அண்மையில் அனுப்பியிருந்தார். சிங்களப் பேரினவாதிகளின் கோரிக்கையை ஏற்று இந்திய மத்தியரசு இந்த உத்தரவை இப்போது பிறபித்திருக்கிறது.

மீண்டும், மீண்டும் இந்திய அரசு தமிழின விரோதப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. சிங்களப் பேரினவாதிகள் 100 முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்தினாலும் அந்தப் படுகொலைகளுக்கு உதவும் முதல் நாடாக இந்திய அரசு இருக்கப் போகிறது போல? அதனால் தான் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறிய கருத்திற்கு கண்டனம் தெரிவிக்காத இந்திய மத்தியரசு அவர்களின் (ஜாதிக ஹெல உறுமய கட்சி) கோரிக்கையை இப்போது ஏற்றுள்ளது.

இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் மனிதவுரிமை மீறல்களும் நடைபெற்று வருகின்றன, அவற்றுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்காமலும், தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கிறது இந்திய மத்தியரசு. இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சியினர் இந்திய அரசு சிங்களப் பேரினவாதிகளின் இந்த நடவடிக்கைகளை தடுக்கமாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்தியாவிற்கு எதிரான கொள்கைகள் கொண்ட ஜாதிக ஹெல உறுமய கட்சி கட்சியினரை (சிங்கள பேரினவாதிகளை) திருப்தியடையச் செய்வதற்கு இந்திய அரசு இந்த உத்தரவைப் பிறபித்திருக்கிறது. அதுமட்டுமல்லாது இந்திய அரசிற்கு எதிரான கொள்கைகள் கொண்ட சிங்களப் பேரினவாதிகளுடன் நட்புறவைப் பேண இந்த உத்தரவைப் பிறபித்திருக்கிறது.

இலங்கையில் தமிழ் மக்களை அடக்கி ஆட்சி செய்வது போல இலங்கையில் இருந்து கொண்டு தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு குரல் கொடுப்பவர்களை அடக்க முனைந்து வருகிறார்கள் சிங்களப் பேரினவாதிகள். சிங்களப் பேரினவாதிகள் தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் அவர்களைத் தமிழக மக்கள் துரத்தி அடிப்பதால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாதிகள் இந்திய அரசிடம் தொடர்ந்து கூறிவருகிறார்.

தமிழக முதல்வரை வளைத்துப் போடும் முயற்சியில் தோல்வியடைந்த சிங்களப் பேரினவாதிகள் இப்போது மத்திய அரசு ஊடாகத் தமிழகத்தில் ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை அடக்க நினைக்கிறது.

தமிழக மீனவர்கள் தங்களின் வளங்களைக் கொள்ளையடிப்பதாகவும், அவர்களுக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப் போவதாக அண்மையில் மஹிந்த கூறியிருந்தார். தொடர்ந்து தமிழக மீனவர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாமலும், கண்டிக்காமலும் மத்திய அரசு அமைதியில் இருக்கிறது. மற்றும் தமிழ்நாட்டை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்திவருகிறது என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வருகிறார். இப்படி தமிழக மக்களுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சிங்களப் பேரினவாதிகள் தங்களுடைய அடக்கு முறைகளைக் கொண்டுவர நிற்பது நல்லதல்ல. தமிழக மக்கள் முன்னரை விட ஈழத்தமிழர் விடையத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள், இதனை சிங்களப் பேரினவாத தடுப்பதற்கு முனைகிறார்கள், இதற்கு இந்திய மத்திய அரசும் துணை போகிறது. இந்திய மத்திய அரசு சிங்களப் பேரினவாதிகளுடன் இணைந்து கொண்டு தமிழர்களை அடக்க நினைப்பதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கண்டிக்கவும் வேண்டும், எச்சரிக்கையும் செய்து போராட்டங்களை நடத்த வேண்டும்.

No comments:

Post a Comment