Translate

Tuesday 10 July 2012

பஸிலை அவசரமாக அழைக்கிறது டில்லி இனப்பிரச்சினைக்கான தீர்வின் தேக்கநிலை குறித்து ஆராய


பஸிலை அவசரமாக அழைக்கிறது டில்லி இனப்பிரச்சினைக்கான தீர்வின் தேக்கநிலை குறித்து ஆராய
news
 இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதில் காணப்படும் தேக்கநிலை, தாமதங்கள் குறித்தும், அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது குறித்தும் விரிவாக ஆராய்வதற்காகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை புதுடில்லிக்கு வருமாறு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

 
இந்தியாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் பஸில் பெரும்பாலும் அடுத்து வரும் வாரங்களில் இந்தியா பயணமாவார் எனப் பொருளாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கிலேயே இந்தியா அமைச்சர் பஸிலுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச்சு நடத்தியிருந்தார்.
 
அரச தரப்பினருடனான பேச்சின் போது அவர்கள் சில விடயங்களில் விடாப்பிடியாக இருந்ததாகவும் இதனால் இலங்கைக்கான பயணம் பெரிதாக வெற்றியளிக்கவில்லை எனவும் புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. 
 
இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய மேனன் தனது பயணம் குறித்துத் திருப்தியற்ற நிலை உள்ளதாகவும் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
 
 இதனை அடுத்து இனப்பிரச்சினை விடயத்தில் அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்காக அமைச்சர் பஸிலைப் புதுடில்லிக்கு அழைக்க மத்திய அரசு முடிவு செய்ததாகவும் இதன் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் புதுடில்லி வட்டாரங்கள் மேலும் கூறின.
 
இந்திய அரசினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை அமைச்சர் பஸில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஆயினும் புதுடில்லிக்கான பயணத்தை அவர் எப்போது மேற்கொள்வார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் பொருளாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
 
அமைச்சர் பஸில் இந்தியா செல்லுமிடத்து இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் ஆகியன குறித்து இந்தியா வற்புறுத்தல்களை மேற்கொள்ளக் கூடும் எனவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment