Translate

Thursday 12 July 2012

யார் இந்த தமிழினி ? சிறப்பு தகவல்கள் !


 
சிவசுப்பிரமணியம் சிவகாமி அல்லது தமிழினி வெலிக்கடையிலுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து வவுனியா பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஜூன் 26 ஆம் திகதி மாற்றப்பட்டார். தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் பெண் அரசியல் பிரிவு பொறுப்பாளரான இவர், ஜுன் 22 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிபதி ரஷ்மி சிங்கப்புலியின் கட்டளைப்படியே மாற்றப்பட்டார். பூந்தோட்டம் பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் குறிப்பிட்டகாலம் புனர்வாழ்வுக்கு உள்ளாகிய பின் தமிழினி ஒரு கட்டத்தில் விடுதலை பெறவுள்ளதையே இந்த இடமாற்றம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. 


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கேணல் தரத்திலிருந்த அதிசிரேஷ்ட முக்கிய பெண் உறுப்பினரான 40 வயதுள்ள தமிழினி, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விடுதலை புலிகளின் மகளிர் அணிப் பொறுப்பாளராக தமிழினி இருந்தார். இதன்படி அவர் விடுதலை புலிகளின் ஆண் அரசியல் பொறுப்பாளராகவிருந்த நடேசனுக்கு சமமாக காணப்பட்டார். மாலதி படைப்பிரிவின் தளபதியாகவிருந்த கந்தையா ஞானபூரணி அல்லது விதுஷா மற்றும் சோதியா படைப்பிரிவின் தளபதி கலைச்செல்வி பொன்னுத்துரை அல்லது துர்க்கா ஆகியோருடன் தமிழினி சேர்ந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் விடுதலை புலிகளின் முக்கிய பெண் போராளிகளில் அதிமுக்கியத்துவம் பெற்ற மூவரில் ஒருவரானார். விதுஷா தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் 1986 இலும் துர்க்கா 1989 இலும் இணைந்துக்கொண்டனர்.

தமிழீழ விடுதலை புலிகளுடன் சேர்ந்திருந்ததற்காக தடுத்து வைக்கப்பட்டவர்கள் இனிவரும் காலங்களில் மேலும் மேலும் விடுவிக்கப்படுவர் என்ற நம்பிக்கையினை இது ஊட்டுமா என்ற சந்தேகங்களும் உள்ளது. தமிழினியின் விடுதலையில் ஒரு சூட்சுமம் இருப்பதாக் பலராலும் கருதப்படுகிறது. இலங்கை அரசாங்கம், குறிப்பாக பாதுகாப்பு அமைச்சு தமிழினி மீது கடுங்குற்றங்கள் எதனையும் சாட்டவில்லை. அவர் தற்கொலைத் தாக்குதலுக்கு உடந்தையாக இருக்கவில்லை என்றும் மற்றும் தென்னிலங்கையில் கொல்லப்பட்ட பிரமுகர்கள் எவரையும் அவர் குறிவைக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. இதன் காரணமாகவே தமிழினியை விடுதலைசெய்ய பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

யார் இந்த தமிழினி

சுப்பிரமணியம் சிவகாமி என்னும் சொந்த பெயர் கொண்ட தமிழினி 1972, ஏப்ரல் 23இல் பரந்தனில் பிறந்தார். இவரது குடும்பம் யாழ்ப்பாண அடியை கொண்டிருந்த போதும் பரந்தனில் குடியேறியது. பின்னர் கிளிநொச்சி, உதயநகரிலுள்ள கனகபுரம் வீதியிலிருந்த ஒரு வீட்டில் வாழ்ந்தனர். தாய் திருமணமாகிய இரண்டு சகோதரிகள், இவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் ஆவர். சகோதரிகளில் ஒருவர் நோர்வேயில் உள்ளார். மற்றவர் தாயாருடன் கிளிநொச்சியில் வாழ்ந்து வருகின்றார். இவரது இன்னுமொரு சகோதரி விடுதலை புலிகளில் முக்கிய உறுப்பினராக இருந்தார். இவர் 19982 இல் பந்தனில் நடந்த சத்ஜய௨ இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார் எனவும் அறியப்படுகிறது.

சிவகாமி சுப்பிரமணியம் க.பொ.த (சா.த) வரை பரந்தன் இந்து கல்லூரியில் படித்தார். இவர் பின்னர் க.பொ.த (உயர்தரம்) படிப்பதற்காக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் சேர்ந்தார்.
புலிகள் ஆட்சேர்ப்பாளர்கள் பாடசாலைக்கு வந்து நடத்திய பிரசாரத்தினால் கவரப்பட்ட இவர், புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். இவர் 1991 ஜுலை 27 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முறையாக இணைந்துகொண்டார். யாழ். குடாநாட்டில் கிளாலி மற்றும் நீர்வேலியிலிருந்த புலிகளின் தளத்தில் இவர் தனது பயிற்சியை பெற்றுக்கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை இலக்கம் 1736 ஆகும். சிவகாமி தனது இயக்கப் பெயரை தமிழினி என வைத்துக்கொண்டார். இவர் குடாநாட்டின் வலிகாமம் பிரதேசத்தில் பல இடங்களில் கடமையிலிருந்துள்ளார்.

பின்னர் இவர் கிளிநொச்சி, கிளாலி பகுதிகளுக்கு மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் தமிழினி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளில் செயல்பட்டார். அப்போது அவர் பல சிறு தாக்குதல்களில் பங்குபற்றினார். செப்டெம்பர் 1993 இல் ஆனையிறவிலிருந்து முன்னேறிய இராணுவம் கிளாலியை பிடிக்க முயன்ற யாழ்தேவி நடவடிக்கைதான் அவரது முதலாவது பெரிய யுத்த அனுபவமாகியது. பூநகரி, நாகதேவன்துறை முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நவம்பர் 1993 இல் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையிலும் இவர் பங்குபற்றினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பூநகரி இராணுவத்திடமிருந்து ரி � 55 யுத்த டாங்கி ஓன்றை கைப்பற்றியது. அப்போது கைப்பற்றப்பட்ட தளபாடங்களை கடத்திக்கொண்டு செல்லும் அணியில் தமிழினி கடமையிலிருந்தார். இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரி - 55 டாங்கியை விரைந்து கடத்துவதற்கான பாதையொன்றை காட்டுப் பிரதேசத்திற்கு ஊடாக அவர்கள் அமைக்க வேண்டியிருந்தது. இப்பாதையை அமைத்து வெற்றிகரமாக டாங்கை நகர்த்தியதால், புலிகள் இயக்கத்தில் அவரைப் பற்றிய பேச்சுக்கள் உலாவரத்தொடங்கின.

இனதூடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் அவரது மனைவி அடேல் பாலசிங்கமும் தமிழினியுடன் பேசிய பின் தமிழினியால் கவரப்பட்டனர். தமிழினி பெண்களால் நடத்தப்பட்ட ஒரு தும்புத் தொழிற்சாலை மற்றும் விவசாயப் பண்ணை என்பவற்றுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அத்துடன் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பத்திரிகையான சுதந்திரப் பறவைகளின் ஆசிரியர்பீடத்தின் அங்கத்தவராகவும் நியமிக்கப்பட்டார். அடேல் பாலசிங்கத்தின் செல்வாக்கில் வந்த தமிழினி ஒரு பெண்ணியவாதியானார். இராணுவத்தால் 1995 ௯6 இல் வெற்றிகரமாக நடத்தப்பட்ட றிவிரெச நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். தமிழினி தொடர்ந்தும் அரசியல் பிரிவில் வேலை செய்தார். ஆயினும் 1997 - 1998 இல் இராணுவம் வன்னியை கைப்பற்ற ஜெயசிக்குரு நடவடிக்கையை தொடக்கிய பின் தமிழினி யுத்த அலகுகளில் சேரவேண்டியிருந்தது. அவர் மாங்குளம் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். அப்போது அவர் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது.

ஒரு கட்டத்தில் இவர்களுக்கு சமைத்த உணவு பெற முடியாமல் போனபோது, பல நாட்களாக காட்டுப் பழங்களை சாப்பிட்டு உயிர்வாழ வேண்டியிருந்தது. இதன் பின்னர், அன்ரன் பாலசிங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகியோரின் மனதில் தமிழினி இடம்பிடித்துக்கொண்டார். தொடர்ந்து செயல்பட்டு வந்த தமிழினி காலகதியில் ஜுன் 2000 இல் பெண்கள் பிரிவு அரசியல் தலைவராகினார். இராணுவம் ஆணையிறவை மீண்டும் கைப்பற்றுவதற்காக 2001 இல் அக்னி சுவாலை இராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது தமிழினி மீண்டும் தாக்குதலில் ஈடுபட வேண்டியிருந்தது.

கிளிநொச்சி:

ஒஸ்லோ அனுசரணையுடன் பெப்ரவரி 2002 இல் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டபோது தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஒரு நிரந்தர அரசியல் செயலகத்தை அமைத்துக் கொண்டனர். தமிழினி தீவிர பெண்ணியவாதியாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பினுள் சமத்துவத்துக்காக போராடி, சில வெற்றிகளை பெற்றுக்கொண்டார். முன்பு பெண்கள் அரசியல் பிரிவு பிரதான அரசியல் பிரிவின் ஒரு பகுதியாகவே இருந்தது. தமிழினி பெண்கள் அரசியல் பிரிவின் சுயாதீனத்தை முன் நிறுத்திப் போராடினார். இதனூடாக அரசியல் பிரிவில் தனித்து இயங்கக்கூடிய பெண்கள் பிரிவை இவர் உருவாக்கிக்கொண்டார். யுத்த நிறுத்த காலம் தமிழினி பல வகையிலும் தனது பார்வையை விசாலித்துக்கொள்ள உதவியது. அவர் பெண்கள் உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக கொழும்பில் நடந்த கருத்தரங்குகளில் பங்குபெறுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் அணிக்கு தலைமை தாங்கிச் சென்றார்.

அவர் 2003 மற்றும் 2005 இல் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுக்களிலும் உறுப்பினராக இருந்தார். ஐரோப்பாவிலிருந்தபோது தமிழினி பல புலம்பெயர்ந்தோர் குழுக்களுடன் தொடர்புகொண்டிருந்தார். அவர் பல கூட்டங்களில் பேசினார். அவரது பேச்சு சபையோரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில்தான் தமிழினிக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. இவரை இனி நான் 'கே' என குறிப்பிடுவேன். தேசிய தலைவர், முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை சோடியாக்கி.. திருமணம் செய்துவைத்தபோது தமிழினி திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

கே எனப்படும் நபருக்கும் தமிழினிக்கும் இடையே பரஸ்பர கவர்ச்சியும், குறைந்தபட்சதம் சிறிது காதலும் காணப்பட்டது. கேயும் வன்னிக்கும் வந்துவிட்டார். அவர் கிளிநொச்சியில் சில காலம் வாழ்ந்தார். இவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனிடையே யுத்தம் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தம் வெடித்தது. மெதுவாக இராணுவம் முன்னேறியது. தமிழீழ விடுதலை புலிகள் சற்றும் எதிர்பாராத வகையில் பாரிய பின்னடைவைச் சந்தித்தார்கள். இறுதியாக முள்ளிவாய்க்காலில் ஒடுங்கிய நிலப்பரப்பில் புலிகள் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

புலிகளின் வட பிரதேச தளபதியான தீபன் கொல்லப்பட்ட 2009 ஏப்ரல் 4 � 5 இல் நடந்த ஆனந்தபுரம் சண்டையின் போது யுத்தத்தின் முடிவு எப்படி அமையும் என்பது தெளிவாயிற்று. பெண் தளபதியான விதுஷாவும் துர்காவும் இந்த போரில்தான் கொல்லப்பட்டனர். தமிழினியும் இந்த யுத்தத்தில் பங்கேற்றார் என்பது பலருக்குத் தெரியாது. போரில் இழந்ததாக கருதப்பட்ட இவர் உயிரோடு இருப்பது பின்னர் தெரியவந்தது. இவர் பிறிதொரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பில் வெளியேறியிருந்தார். தனது நெருங்கிய தோழியர்களான விதுஷா, துர்க்கா ஆகியோரின் மரணத்தினால் தமிழினி நொடிந்து போனார். இனி தோல்வி நிச்சயம் என்பதனை அவர் கண்டுகொண்ட போதிலும், இயக்கத்தின் மீதான விசுவாசம் காரணமாக முற்றுகையிடப்பட்டிருந்த புதுமாத்தளனில் தங்கியிருந்தார்.

வவுனியா:

2009 மே நடுப்பகுதியில் யுத்தம் முடிவை நெருங்கிவிட்டபோது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று சரணடைய விரும்பியவர்களை போகவிட வேண்டிய நிர்ப்பந்தம் புலிகளுக்கு ஏற்பட்டது.
தமிழினி, அவரது ஆயுதம், சீருடை, அடையாள அட்டை மற்றும் சயனைட் குப்பி ஆகியவற்றை மறைத்துவிட்டு, தனது குடும்பத்தினருடன், பெருந்திரளாக அரசாங்க பகுதிக்கு சென்றுகொண்டிருந்த மக்களுடன் கலந்துகொண்டனர். அவர்கள் புலிகள் அல்லாத பொதுமக்கள் என ஏற்கப்பட்டு 2009 மே 20 இல் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் இவர்கள் நலன்புரி முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டனர். ஆனால், மிகவும் பிரபலமான தமிழினி, முகாமிலிருந்தவர்களினால் விரைவில் இனங்காணப்பட்டார். தமிழர்களால் சிங்கள அதிகாரிகளுக்கு இரகசிய தகவலும் வழங்கப்பட்டது. தமிழினி 2009 மே 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பொலிஸ் புலனாய்வு பிரிவினாராலும் தேசிய மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினராலும் கடுமையாக விசாரிக்கப்பட்டார்.

இவர் பின்னர் 2009 ஜூன் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் பிரதான நீதவான் நிசாந்த ஹப்புவாராய்ச்சி முன்னர் ஆஜர் செய்யப்பட்டார். தமிழீழ விடுதலை புலிகளுடன் இருந்த போது இவரது நடவடிக்கைகள் பற்றி ஆரம்பக்கட்ட அறிக்கையொன்றை அதிகாரிகள் சமர்ப்ப்பித்தனர். இவரை மேலும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்ட போது 2009 ஜூலை 17ஆம் திகதி மீண்டும் நீதிமன்றம் கொண்டு வரும்படி பிரதான நீதவான் கட்டளை பிறப்பித்தார். இதனால் மேலும் இரண்டு வார அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே தமிழினியின் வழக்கு கிடப்பில் போடப்படவில்லை. நிலுவையிலும் இடப்படவில்லை. இதனால் சுமார் 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒருமுறை அவர் நீதிமன்றில் ஆஜராகவேண்டி இருந்தது.

தமிழினிக்கு நீதிமன்றம் காட்டிய கருணை ஒரு குறிப்பிடத்தக்க விடையமாகும். இதில் நீதிபதி ஒரு பெண்ணாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
தமிழினி நன்கு நடத்தப்படுகின்றாரா, தடுத்து வைப்பதற்கான தேவை உண்மையில் காணப்படுகின்றதா என்பவற்றை நீதிமன்றம் நிச்சயப்படுத்துவதில் உறுதியாக இருந்தது என்று தான் சொல்லவேண்டும். கொழும்பு பிரதான முன்னாள் நீதவான் ஹப்புவாராச்சி அவசர கால சட்டத்தின் கீழ் தனக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி 2009 ஓகஸ்ட் 5ஆம் திகதி நேரில் குற்றப்புலனாய்வு பிரிவின் தலைமையகத்திற்கு சென்று நிலைமையை அவதானித்த பின்னரே தடுத்துவைக்க மேலும் காலஅவகாசம் வழங்கினார்.

இவரும் தற்போதைய கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கபுலியும் அதிகாரிகளுக்கு விசாரணையை முடிப்பதற்கு குறுகிய காலமே வழங்கினார்கள். இவ்வாறு செய்தமையினாலேயே நீண்ட காலமாக பொலிஸ் தடுப்பில் வைத்திருக்கும் போக்கை கட்டுப்படுத்தினர். விசாரணைகள் முடிந்து தமிழினியின் சட்டமா அதிபரின் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர் அவர் பாதுகாப்பு தடுப்பில் வைக்கப்பட்டார். முன்னைய பல வழக்குகள் போல தமிழினியின் வழக்கும் கிடப்பிலிடப்படக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் குறுகிய தவணைகளை தொடர்ந்து வழங்கியது. அவர் ஒரு டசினுக்கு மேற்பட்ட தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ந்து இழுத்தடித்தது.

புலன் விசாரணைகள்:

தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் பற்றிய விசாரணைகளை மேற்பார்வை செய்ய வந்த பாதுகாப்பு அமைச்சு, இவர்கள் தொடர்பில் இரண்டு கொள்கைகைளை கடைப்பிடித்து வருகின்றது என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வழக்கும் அதன் இயல்புகளுக்கு ஏற்ப தனியாக ஆராயப்பட்டது. இவை இதனடிப்படையில் வன்மை, மென்மை என வகைப்படுத்தப்பட்டன. தமது வன்முறை தொடர்பில் மன வருத்தம் இல்லாதோர், கரும்புலி தற்கொலை சத்திய பிரமாணம் எடுத்தோர், கொடூரமான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டோர் ஆகியோர் வன்மை என கருதப்பட்டனர்.

நேரடியாக போரில் மட்டும் பங்குபற்றியோர் மென்மை என கருதப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களில் 1235 பேர் வன்மை என வகைப்படுத்தப்பட்டு இன்னமும் தடுப்புகாவலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் பல ஆரம்ப கால உறுப்பினர்களை இராணுவம் சரணடையும்போதே சுட்டுக்கொன்றுவிட்டனர்.

இவர்கள்(1235 பேர்) பூஸா உட்பட மூன்று வெவ்வேறு தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அறியப்படுகிறது. 11,989 பேர் மென்மை என வகைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு மையங்கள் 18 இல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் விடுதலையாகியும் உள்ளனர். அண்மையில் அமைச்சின் தகவல்படி, மருதமடு, வெலிகந்தை, கண்டல்காடு, பூந்தோட்டம் ஆகிய இடங்களில் நான்கு பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தற்போது 635 பேர் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தால் வன்மமான புலிகள் எனக் கருதப்பட்ட 1235 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும்போது, தற்போது 635 பேரே தம்மிடம் மீதம் உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அப்படி என்றால் மீதம் 600 பேருக்கு என்ன நடந்தது என்ற கேள்விகளுக் எழுந்துள்ளது.

கொழும்பில் அல்லது தென் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எந்த தாக்குதலிலும் தமிழினி சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அத்துடன், தமிழினி தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு அரசியல் பொறுப்பாளர் என பிரபலமாக இருந்தவர். அவர், தடுப்பிலுள்ள முன்னாள் பெண் புலிகளுள் அதியுயர் தரத்தினராக உள்ள போதிலும் இராணுவ போராளி என்பதைவிட கூடுதலாக அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்றே அறியப்பட்டவர். இந்த பின்னணியில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தமிழினியை இலக்கு வைத்து, தண்டிக்க வேண்டிய தேவை அல்லது நிர்ப்பந்தம் இருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இருப்பினும் இவர் தடுப்பிலிருந்து விடுதலையான பின்னர் என்ன செய்வார் என்று எதனையும் கூறமுடியாத நிலை உள்ளது. இருப்பினும் இவர் இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து செயல்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இவர் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது:

No comments:

Post a Comment