Translate

Thursday 12 July 2012

சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் சிறீலங்கா அரசாங்கம் சிக்கியுள்ளது


சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் சிறீலங்கா அரசாங்கம் சிக்கியுள்ளதாகவும் இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தி, கிழக்கு மக்கள் தம்மோடு தான் இருக்கின்றார்கள் என்று காட்டி சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என்றும் அதன் மூலம் சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நினைப்பதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (11-07-2012) புதன்கிழமை நண்பகல் அளவில் பன்குளம் பகுதியில் சாந்திபுரம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபற்றி சம்பந்தன் உரையாற்றினார்.
அங்கு சம்பந்தன் மேலும் கூறியதாவது:-
இனியும் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது என்பது சிறீலங்கா அரசுக்குத் நன்றாகத் தெரியும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக்கூட்டம் ஒன்று எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கின்றது. வவுனியா சிறையிலிருந்து மஹர சிறைக்கு மாற்றப்பட்ட நிமலரூபன் கைதியின் மரணம் பற்றி அக்கூட்டத்தில் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் மற்றும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கை ஆகியன குறித்து கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய காலம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. அதிலிருந்து சிறீலங்கா அரசாங்கம் தப்பிக்க முடியாத நிலை ஏற்படும். சரியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிடில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.
இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் கொழும்பு வந்து மஹிந்தவையும் அவரின் இரண்டு சகோதரர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாராதூரமான விளக்கம் ஒன்று அவர்களுக்கு மேனன் அளித்தார். தரப்பட்ட உறுதிமொழிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிடில் எம்மீது குறை சொல்லாதீர்கள் என்ற கருத்துப்பட சிவ்சங்கர்மேனன் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் என்னுடனும் உரையாடினார்.
இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என அரசாங்கம் கூறிவருகின்ற போதிலும், ராஜதந்திர நகர்வுகளில் இடம்பெறும் எல்லாவற்றையும் வெளியே கசிய விட முடியாது என்றும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment