Translate

Monday 27 August 2012

வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது: – ஸ்ரீகாந்தா


வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது: – ஸ்ரீகாந்தா

Posted by www.telo.org
வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது. வடக்கு கிழக்கை பிரித்து சிங்கள மயப்படுத்த நினைக்கும் பேரினவாத சக்திகளுக்கும் அவர்களுக்கு பின்னால் திரிபவர்களுக்கும் தமிழ் மக்கள் தங்கள் வாக்குசீட்டை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவர்களில் ஒருவருமான சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு தேற்றாத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் கோவிந்தன் கரணாகரம் ஜனாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகைலேயே அவர் இதனைக் கூறினார்.
கிழக்கு மாகாணம் முஸ்லீம்களுக்கு உரியது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க விடமாட்டோம் என திமிருடன் பேசிய சிறிலங்காவின் அரை அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு ஸ்ரீகாந்தா பலத்த செருப்படி கொடுத்துள்ளார்.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாதது ஒரு விபத்து என்று கூறமுடியாது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறு. அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டிருந்தால் சிங்கள பேரினாவாதிகளின் சில கைக்கூலிகள் முகவரி இல்லாமல் இருந்திருப்பார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாததால் சிங்கள பேரினவாதிகளின் கைக்கூலிகள் இன்று மீண்டும் முதலமைச்சர் கனவுடன் சுற்றி திரிகிறார்கள். எனினும் இம்முறை கிழக்கு மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என ஸ்ரீகாந்தா கூறியுனார்.
இலங்கையில் அதிகுறைந்த வயதில் நாடாளுமன்னறம் சென்றவர் என்ற பெருமையை கோ.கருணாகரமையே சாரும். இச்சாதனையை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியாதுள்ளது. கோ.கருணாகரம் கடந்த 1989 ஆம் ஆண்டு 25 வயதில் இலங்கைப் நாடாளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவராவார்.
வடக்கு கிழக்கு பிரதேசம் 88,000 சதுரமைல் பிரதேசத்தினைக் கொண்டுள்ளது. இது எமது தாயக பூமி. ஆனால் தற்போது திருகோணமலையிலும் அம்பாறை மாவட்டத்திலும் பெரும்பான்மை இனத்தவர்கள் எமது தாயக பூமியைச் சூறையாடி வருகின்றார்கள்.
ஆனால் இலங்கை அரசாங்கம் அவர்களுக்குத் தெரியாமலேயே வடக்கு கிழக்கு இணைப்புக்கு அத்திவாரமிட்டுள்ளார்கள். இதனை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிளையும் வெளிநாட்டின் உதவிகளுடன் புணருத்தருணம் செய்துள்ளார்கள். இது எம்மினத்திற்கும் வடகிழக்கு இணைப்புக்கு இவை பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
எம்மினத்தவர்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் போர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். நமக்கு வடகிழக்கில் வேண்டிய நிலங்கள் உண்டு. வெளிநாட்டில் உள்ளவர்கள் மீண்டும் இங்கு வரும் வாய்ப்புக்கள் உள்ளன.
இவற்றுக்கு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உந்து சக்தியாக அமைய வேண்டும். கடந்த 2007 ஆம் ஆண்டு நான் லண்டன் சென்றபோது கோ.கருணாகரன் மிகவும் வசதி வாய்ப்புக்களோடு லண்டனில் வாழ்ந்ததை பார்த்தேன். இந்த அரசியலில் இறங்கி சம்பாதிக்க வேண்டிய தேவை அவருக்கில்லை. ஆனால் நம் உறவுகள் சுவாசிக்கும் காற்றை இந்த வெயிலில் அடிபட்டு நம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான இத்தேர்தல் மூலம் போராட வந்துள்ளார். எனவே இத்தேர்தலில் அரசுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்கு எம்மினம் ஒன்று திரள வேண்டும்.
வடக்கு கிழக்கினைப் பொறுத்த மட்டில் வடக்கினைவிட கிழக்கு மாகாணம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டதாகும். அந்த வகையில் மக்கள் தங்களது வாக்குச் சீட்டை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் இம்முறை தமிழ்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றும்.
சிலாபம், உட்பட வடக்கு. கிழக்கு, பிராந்தியம் தழிழர்களின் தாயக பூமியாகும். எனவே இத்தேர்தலை கிழக்கு மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிரும் அரசியல் அனுபவமுள்ள அரசியல்வாதியுமான கோ.கருணாகரம் போன்றவர்களை ஆதரித்து அதிகூடிய விருப்பு வாக்கினால் வெற்றிபெறச் செய்ய வேண்டும்� என கேட்கின்றேன் என ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment