Translate

Wednesday 29 August 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் மு.கா.வின் ஆதரவைக் கோரப்போவதில்லை: அரசாங்கம்


கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்கு ஆட்சியமைப்பதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறப்போவதில்லை. ௭ம்மால் கிழக்கு மாகாண சபையில் தனித்து ஆட்சியமைக்க முடியும். அந்த அதிகாரத்தை மக்கள் ௭ங்களுக்கு வழங்குவார்கள் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்
.


அரசியல் தீர்வு ,அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் என்பனவற்றை விரும்பும் மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் நிலைமைகள் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவற்றைக் குறிப்பிட்டார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டிய உறவு தற்போது இல்லை என்றே கூறவேண்டும். அதற்காக நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. காரணம் இது தேர்தல் காலம்.

அந்த வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஆளும் கட்சி நாடாது என்பதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றோம். அதற்கு மக்களின் ஆணை கிடைக்காது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்க மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறு மக்களின் ஆதரவுடன் எம்மால் ஆட்சியமைக்க முடியும்.

மக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுவோம். கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எந்தவொரு கட்சியினதும் ஆதரவை நாடாது.

ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கவில்லையாயின் ஆணையைப் பெறுபவர்கள் கிழக்கில் ஆட்சியமைத்துக்கொள்ள முடியும். எம்மைப் பொறுத்த வரை கிழக்கு மாகாணத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்துவருகின்றோம். அரசியல் தீர்வைக்காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துவருகின்றோம்.

இந்நிலையில் மக்கள் எம்மை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஆளும் கட்சிக்கு உள்ளது. இதேவேளை முஸ்லிம் காங்கிரஸுக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கவேண்டிய உறவு தற்போது இல்லை என்றே கூறவேண்டும்.

தனித்துப் போட்டியிடும் முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் 10 வேட்பாளர்களைக் கேட்டது. நாங்கள் ஒன்பது வேட்பாளர்களைத் தருவதாகக்  கூறினோம். அதனை விரும்பாது தனித்துச் சென்றனர். ஆனால் தற்போது அவர்களால் ஒன்பது ஆசனங்களைக் கூடப் பெற முடியுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எம்முடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் அந்த ஒன்பது ஆசனங்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது என்றார்.

No comments:

Post a Comment