Translate

Thursday 30 August 2012

கிழக்கில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்! அரசின் நாடகம் தலைகீழாக மாறும் நிலை!

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் தான் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் மோசடிகளைச் செய்து, அமைச்சர் அதாவுல்லாவினால் களமிறக்கிய மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற முடிந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


நேற்று இடம்பெற்ற தேர்தர் பிரச்சார கூட்டத்தி்ல் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஹக்கீம் இந்த கருத்துக்களை தெரிவித்து்ள்ளார்.

சர்வதேசத்துக்குக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலே ஆணவத்தோடும், இறுமாப்போடும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அரசு தீர்மானித்தது. ஆனால் அரசாங்கம் ஆரம்பித்த இந்த நாடகம் இன்று தலைகீழாக மாறுகின்றதொரு நிலை உருவாகியுள்ளது.

அம்பாறைத் தொகுதியில் சிங்கள மக்களின் 10 ஆயிரம் வாக்குகள் மரச் சின்னத்துக்கு கிடைக்கும் நிலைவரமொன்று உள்ளதாக உளவுப் பிரிவு அரசுக்கு அறிக்கையொன்றினை சமர்ப்பித்திருக்கின்றது.

சென்ற முறை போன்று இம்முறை மோசடிகளுக்கு இடமிருக்காது. இப்போது புதிய தேர்தல் ஆணையாளர் இறுக்கமான உத்தரவுகளை பிறப்பிக்கின்றார். அக்கரைப்பற்றில் கடந்த இப்தார் நிகழ்வுகளின் போது தொந்தரவுகளைத் தந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று பொலிஸ் மா அதிபரால் கட்டளையிடப்பட்டுள்ளது.

அதனால், அம்பாறை கரையோரப் பிரதேசத்துக்கு என்று தனியானதொரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளார்.

அதேவேளை எனது அமைச்சுப் பதவியினைப் பணயம் வைத்துக் களமிறங்கியுள்ளதொரு தேர்தலாகத் தான் இது இருக்கின்றது. நாங்கள் இத்தேர்தல் தொடர்பாக எடுத்துள்ள முடிவினால் அரசாங்கம் தடுமாறிப் போயுள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் எமது கட்சியின் வெற்றியினைத் தடுப்பதற்கான முயற்சிகள் பல்வேறு கோணங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கிழக்குத் தேர்தலுக்குப் பிறகு முஸ்லிம் காங்கிரஸ் அதனுடைய செல்வாக்கினை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்திற்கும், அதனோடு இணைந்துள்ள சக்திகளுக்கும் காட்டுவதற்கான சந்தர்ப்பம் இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்துள்ளது.

கிழக்கிலே முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இனவாதம் பேசி வாக்கு கேட்பதாக ஒரு பசாதையினை முஸ்லிம் அமைச்சர்கள், அரசின் தலைமைக்கு அவிழ்த்து விட்டுள்ளனர். ஆனால் நான் ஒரு போதும் இனவாதம் பேசவில்லை.

முஸ்லிம் சமூகத்திற்கு நடக்கும் அநியாயங்களைப் பற்றிதான் பேசுகிறோம். பேசுவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. அதனைப் பற்றி அரசின் தலைமை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களினால் அமைச்சு எனும் பதவியில்லாமல் அரசியல் செய்ய முடியாது. ஆனால் முஸ்லிம் காங்ரஸினால் அமைச்சுப் பதவிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியும். அதனை செய்தும் காட்டியுள்ளது.

கிழக்கிலே முஸ்லிம் காங்கிரஸ் வெல்வதானது கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல. வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களை பாதுகாப்பதற்பதற்கான அவர்கள் சந்திக்கின்ற சவால்களுக்கான அவர்களின் விமோசனத்திற்கான ஒரே மார்க்கம் கிழக்கிலே முஸ்லிம் காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்பதுதான்.

இதுவே வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரார்த்தனையாகும். எனவே இத்தேர்தலில் அனைத்து முஸ்லிம்களும் ஒரணியில் இணைந்து ஒட்டு மொத்த வாக்குகளையும் முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திற்கு வழங்கி எமது இருப்பினைப் பாதுகாக்க வேண்டும்.

நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத் தேர்தலை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடிவையும், அடுத்த தலைமுறையின் தலை விதியையும் தீர்மானிக்கின்ற தேர்தலாக முஸ்லிம்கள் நுணுக்கமாக பார்க்க வேண்டும்” என்றும் ஹக்கீம் குறிப்பிட்டார்.

சம்மாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ரவூப் ஹக்கீமினை கடுமையாக சாடிப் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment