Translate

Friday 24 August 2012

பிரிட்டனின் பயண எச்சரிக்கைக்கு அடிப்படைக் காரணம் : மனோ


வட மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக இராணுவத்தை அரசாங்கம் குவித்து வைத்துள்ளது. புலிகள் மீண்டும் தலையெடுக்கப் போகிறார்கள் என்று சொல்லி,அதைத் தடுப்பதற்கே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை என்று அரசாங்கம் இதை நியாயப்படுத்துகின்றது.

பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கலாம் என்று அரசாங்கமே அதிகாரபூர்வமாக சொல்வதால்தான், இன்று பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் பல நாடுகளும் இத்தகைய எச்சரிக்கையை விடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. தேவைக்கு அதிகமான இராணுவத்தை அகற்றினால், இத்தகைய எச்சரிக்கைகள் தானாக அகலும்.
இந்நிலையில் இராணுவத்தைக் குவித்து வைத்துக்கொண்டு அதற்கு பயங்கரவாத காரணமும் சொல்லிக்கொண்டு இந்தப் பயண எச்சரிக்கையை அகற்றுங்கள என்று வெளிவிவகார அமைச்சர், பிரிட்டனிடம் கோரிக்கை விடுப்பது நல்ல நகைச்சுவை என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
அரசாங்கம் வட ,கிழக்கு தமிழ் பிரதேசங்களில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதன் காரணம் எமக்கு தெரியும். சிவில் நடவடிக்கைகளில் தலையிட்டு தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தோல்வியடைந்த சமூகமாக வைத்திருப்பதற்கும், தமிழ் பிரதேசங்களில் நில அபகரிப்புகளைச் செய்யவும், தமிழர்களின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராகப் புலனாய்வு செய்வதற்கும் தான் அரசாங்கம் இராணுவத்தை அபரிமிதமாக வடக்கில் பயன்படுத்துகின்றது.
ஆனால் இந்தக் காரணங்களை வெளியில் சொல்ல முடியாது என்பதால், இதோ புலி வருகிறது, அதோ புலி வருகிறது என்று இவர்கள் புலிப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். மேலும் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியிலும், புலிக் கோஷம் அரசுக்கு நன்கு பயன்படுகின்றது.
எனவே அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக இராணுவத்தைக் குவித்து வைத்துள்ளது. அதை மறைப்பதற்கு பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் நடவடிக்கை எடுக்கிறோம் என்று அதிகாரபூர்வமாக சொல்லுகிறது.
இதனால்தான் இன்று பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு கவனம், ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடுக்கின்றது. எனவே இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ், பயண எச்சரிக்கை பிழை என்றும் அதை அகற்றுங்கள் என்றும் பிரிட்டனிடம் சொல்வது நல்ல நகைச்சுவை.
அபரிமிதமான இராணுவப் பிரசன்னம் இருக்கும் நாடுகளுக்கு தமது பிரஜைகளைச் செல்ல வேண்டாம் என்று மேற்குலக நாடுகள் சொல்வது சரியானது. புலிப் பயங்கரவாதம் இருக்கின்றதோ, இல்லையோ, அரச பயங்கரவாதம் நிச்சயமாக இருக்கின்றது.
மேலும் துப்பாக்கி தவறுதலாக வெடித்தால்கூட அது பயணிகளுக்கு ஆபத்தானது. அதுமாத்திரம் அல்ல, சிலவேளைகளில், தமிழ் ஜனநாயக அரசியல் செயல்பாட்டாளர்கள் மீது நடத்தப்படும் கழிவு எண்ணெய் தாக்குதல்களில், பிரிட்டிஷ் பயணிகளும் பாதிக்கப்படலாம்.
எனவே அரசாங்கம், தனது அரசியல் தேவைகளுக்கு வடக்கில் நிறுத்தி வைத்திருக்கும் இராணுவத்தை அகற்றிவிட்டு, பயண எச்சரிக்கையை வாபஸ் வாங்கும்படி பிரிட்டனிடம் சொல்ல வேண்டும். இதை செய்யாமல் வெளிவகார அமைச்சர் கோமாளி அமைச்சராக கருத்துத் தெரிவிக்கக் கூடாது.

No comments:

Post a Comment