Translate

Thursday 18 October 2012

யாழில் நடைபெறும் காட்டாட்சியை ஜனாதிபதி முடிவிற்குக் கொண்டுவரவேண்டும்: சுரேஷ் எம்.பி.

மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மிகப் பெரும் அளவில் பிரசங்கம் செய்யும் ஜனாதிபதியே! யாழ்ப்பாணத்தின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நல்லூர் பிரதேசசபை தவிசாளர் பரமலிங்கம் வசந்தகுமார் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்திற்கு கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள தனது கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,,

வடமாகாண உள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல்களுக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இராணுவத்தினர் பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி, கலந்துகொண்ட மக்களையும் அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவம் நடைபெறுவதற்குச் சிலநாட்களுக்கு முன்னர், எனது செயலாளர் அச்சுவேலியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட்டார். அதனைப் போன்றே பல்கலைக்கழக மாணவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணம் வந்திருந்த ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் இதே புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட்டார்.

மல்லாகத்தில் தமது காணிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனநாயகப் போராட்டத்திற்குத் திரும்பியவர்களின் பேருந்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டு கழிவு ஓயில் ஊற்றப்பட்டது. நெல்லியடியில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் கொடியுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சமூட்டினர். சுன்னாகம் பிரதேசசபையின் புதிய கட்டடத்தின்மீது கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது. முல்லைத்தீவில் நடைபெற்ற காணிப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்மீது கற்களும் சாணமும் வீசப்பட்டது.

இப்பொழுது நல்லூர் பிரதேசசபையின் தவிசாளர் பரமலிங்கம் வசந்தகுமார் வழிமறிக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். பிரதேசசபைக்குச் சொந்தமான சிறுவர் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியை இராணுவத்தினர் அபகரித்ததை கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் வெளிப்படுத்தியதாலும், கோப்பாய் பொலிசில் முறைப்பாடு செய்ததாலும் நல்லூர் பிரதேசசபையின் தவிசாளரும் இதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கூறும் 'ஐந்து நட்சத்திர' ஜனநாயகம் இவ்வாறுதான் இருக்கின்றது. ஒரு நாட்டில் தேர்தல் நடத்துவதால் மாத்திரம் ஜனநாயகம் வந்துவிடாது என்பதற்கு யாழ்ப்பாணம் ஒரு உதாரணம்.
தமிழ் மக்களுக்கு உரித்தான ஜனநாயக உரிமை இராணுவத்தினரால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்படுகின்றது. மக்கள் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு என்பது மிகவும் மோசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இராணுவத்தினருக்கு முன்பாக பொலிசார் கையாலாகதவர்களாக இருக்கின்றனர்.

ஜெனிவாவில் இனங்களுக்கிடையில் நல்லுறவைப் பற்றியும் மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மிகப் பெரும் அளவில் பிரசங்கம் செய்யும் ஜனாதிபதியே! யாழ்ப்பாணத்தின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்;. தெற்கு வடக்கு உறவுகள் பலப்பட வேண்டுமாக இருந்தால் இந்த விடயங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesar...al.php?vid=1129 

No comments:

Post a Comment