Translate

Saturday 8 October 2011

வேதம் ஓதும் சாத்தான் - பழ. நெடுமாறன்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இருப்பதாகவும் சட்டமன்றத்தில் சனநாயகம் தேடப்பட்ட பொருளாகிவிட்டதாகவும், அ.தி.மு.க. அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்துகொள்வதாகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கி யிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு முன்னால் அவர் தன்னை சுயபரிசோதனைக்கு ஆட் படுத்திக்கொண்டிருக்க வேண்டும். இத்தகைய குற்றச் சாட்டுகளை கூறும் தகுதி தனக்கு உண்டா என்பதை யும் அவரது மனசாட்சியிடம் கேட்டிருக்க வேண்டும்.


கடந்த தி.மு.க. ஆட்சியில் 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி களும் வழக்கறிஞர்களும் பொதுமக்களும் கண்மூடித் தனமாக தாக்கப்பட்டனர். சிறப்புப் பயிற்சி பெற்ற காவலர் களின் தாக்குதல் படை முதன்முறையாக இச்சம்பவத் தில் பயன்படுத்தப்பட்டது. கட்டுக்கடங்காத பெரும் கலவரங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்தப் படை கற்றறிந்த வழக்கறிஞர்களின் அறவழி யான போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு முதன் முறையாக ஏவப்பட்டது.

1919ஆம் ஆண்டில் பஞ்சாபில் உள்ள அமிர் தசரசு நகரில் ஜாலியன்வாலாபாக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது பிரிட்டிசு இராணுவம் கண் மூடித்தனமாக சுட்டு 400 பேருக்கு மேல் சுருண்டு விழுந்து செத்தனர். அந்தக் கொடிய ஜாலியன்வாலா பாக் சம்பவத்திற்கு இணையாக நடந்த நிகழ்ச்சி உயர்நீதிமன்ற நிகழ்ச்சியே ஆகும்.

அதே காலக்கட்டத்தில் மதுரையில் அமைதி யாக ஊர்வலமாக சென்ற வழக்கறிஞர்களை டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியானது.

தலைமை நீதிபதியும் தலைமைப் பதிவாளரும் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் காவல் துறையை தாங்கள் அழைக்கவில்லை என வெளிப்படையாக அறிவித்தார்கள். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து தடியடி நடத்துவதற்கு காவல்துறைக்கு ஆணை பிறப்பித்தது யார் என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது. இத்துயர நிகழ்ச்சிகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட cகிருஷ்ணா ஆணையம் காவல் துறையின் வரம்புமீறிய நடவடிக்கைகளையும் எல்லை மீறிய தாக்குதல்களையும் கண்டித்தது. அவர் அளித்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம் காவல் துறையினரின் அத்துமீறல்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

29-10-2009 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த முக்கியத் தீர்ப்பில், உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வேண்டாத நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பா னவர்கள் என 4 உயர் அதிகாரிகளை பெயர் சுட்டி அவர்களைத் தற்காலிக வேலை நீக்கம் செய்து, துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவை பிறப்பித்த ஆணைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அன்றைய முதலமைச்சர் கருணாநிதி இறுதிவரை முன்வரவில்லை. இந்த நிகழ்ச்சிகளுக்கு தார்மீக ரீதியில் மட்டுமல்ல நேரடியாகவும் முதலமைச் சரே பொறுப்பு என்பதால்தான் தவறிழைத்த அதிகாரிகள் மீது கடைசிவரை அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொடுமைகளைப் போல கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அடக்குமுறைகளும் அநீதி களும் எண்ணிலடங்காதவையாகும். அவசரகால நிலை இருந்தபோதுகூட இதுபோன்ற அட்டூழியங்கள் நடை பெறவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்தது போல, தான் செய்த கொடு மைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு புனிதராகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்கு கருணாநிதி முயற்சி செய்கிறார்.

சட்டமன்றத்தில் சனநாயகம் தேடப்படவேண் டிய பொருளாக ஆகிவிட்டது என குற்றம் சாட்டி யிருக்கிறார். 1972ம் ஆண்டு தி.மு.க. பிளவுபட்டு எம்.ஜி. ஆர். தலைமையில் அ.தி.மு.க தோன்றிய பிறகு சட்ட மன்றத்தில் சனநாயகத்தின் வேரை அறுக்கும் முயற் சிகள் வெளிப்படையாக நடைபெற்றன. அவற்றிற்குத் தலைமை தாங்கியவர் கருணாநிதியே ஆவார்.

அப்போது சபாநாயகராக இருந்த கே.ஏ. மதியழ கன் எம்.ஜி.ஆரோடு இரகசிய உறவு வைத்திருக்கிறார் என்ற காரணத்தினால் அவருக்கு எதிராக துணை சபாநாயகராக இருந்த சீனிவாசனை முதலமைச்சர் கருணாநிதி பயன்படுத்தி சட்டமன்றத்தில் ஒரே நேரத் தில் இரு சபாநாயகர்கள் வீற்றிருந்து எதிர்மறையான ஆணைகளைப் பிறப்பித்து சட்டமன்றத்தை மட்டுமல்ல சனநாயகத்தையே மூச்சுத் திணற வைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எம்.ஜி.ஆரை அவமானகரமாகப் பேசி சபைக்கே வராமல் விரட்டியடித்தார்.

1990ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த செயலலிதாவை பெண் என்றும் பாராமல் தனது சகாக்களை விட்டுத் தாக்கச் செய்தார்.

சட்டமன்றத்தில் தனக்கு எதிரான நிலையெடுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்டுக் கட்சி, முஸ்லீம் லீக், பார்வர்டு பிளாக், பா.ம.க. போன்ற பல கட்சிகளையும் இரண்டாக உடைத்து சாதனை படைத்தார். சனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்க இவர் ஆற்றிய அருஞ்செயல் களைப் பட்டியலிட்டால் இடம்கொள்ளாது.

இலஞ்சம், ஊழல் போன்றவற்றின் மூலம் திரட்டிய வரைமுறையில்லாத செல்வம் போதாது என்று அப்பாவி பொதுமக்களின் சொத்துக்களையும் தொழிற் சாலைகளையும் நிலங்களையும் மிரட்டியும் சட்டவிரோதமாகவும் பறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் கருணாநிதியின் கீழ் அமைச்சர்களாக இருந்த பலரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் மற்றும் மாவட்ட அளவில் நிர்வாகிகளாகப் பணியாற்றியவர் களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளை முறையாக நீதிமன்றத்தில் சந்தித்துக் குற்றமற்றவர்கள் என நிரூபித்து வெளியே வருவதற்குப் பதில், பழிவாங்கும் போக்குடன் இவர்கள் மீது பொய்யான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன என கருணாநிதி நா கூசாது பேசுகிறார். மேலே கண்டவர்கள் செய்த சட்டவிரோதமான செயல்கள் அனைத்தும் இவர் முதலமைச்சராக இருந்த போது நடைபெற்றவைதான். அப்போது அவற்றைத் தடுத்து நிறுத்தவோ கண்டிக் கவோ முன்வராத இவர் இப்போது புலம்புவதில் எவ்விதப் பயனும் இல்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும் என எத்தனை தடவை இவர் முதலமைச்சராக இருந்தபோது சொல்லியிருக்கிறார். இப்போது சட்டம் தனது கடமையைச் செய்யும் போது அதற்கு எதிராகக் கூப்பாடு போடுவது ஏன்?

உள்ளாட்சித் தேர்தலை பாரபட்சமற்ற முறையில் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணை யரிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாவட்டக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தேர்தல்களை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என தி.மு.க. வற்புறுத்துவது கண்டு மக்கள் நகைக்கிறார்கள். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திருமங்கலத்தில் தொடங்கி நடைபெற்ற துணைத் தேர்தல்கள் அத்தனையிலும் அராஜகம் கொடிகட்டிப் பறந்தது. 'திருமங்கலம் தில்லுமுல்லு' என்ற புதிய தேர்தல் தந்திரத்தையே கையாண்டு வெற்றி தேடித் தந்த தனது மகனை உச்சிமுகர்ந்து பாராட்டியவர் இன்று தேர்தல்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என பேசுவது மனசாட்சியைக் கொன்ற தன்மையாகும்.

தி.மு.க.வை வீழ்த்த இந்திரா காந்தியினாலே முடியாதபோது வேறு யாரால் முடியப் போகிறது என பெருமை பேசியிருக்கிறார். ஏதோ இவர் இந்திரா காந்தியை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நின்றது போல சவடால் அடிக்கிறார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காமராஜர் - இராஜாஜி கூட்டு கண்டு பயந்து இந்திராவிடம் சரணடைந்ததை மறந்துவிட்டார்.

1975ஆம் ஆண்டு அவசரகால நிலைமை இருந்த போது இவரது ஆட்சியை இந்திரா பதவிநீக்கம் செய்ததையும் இந்திராவை சர்வதிகாரி என இவரும் இவரது சகாக்களும் ஏசியதையும் வசதியாக மறந்து விட்டு 1980 பொதுத் தேர்தலின்போது நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக என அவரிடம் சரண் புகுந்ததையும் மறைத்துப் பேசுகிறார். இந்திராவின் தயவினால் எம்.ஜி.ஆரின் ஆட்சியை பதவி நீக்கம் செய்ய வைத்து மறுதேர்தலை சந்தித்தும்கூட எம்.ஜி.ஆரின் வெற்றியை இவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

மக்களிடம் இயற்கையாக குடிகொண்டுள்ள மறதியைப் பயன்படுத்திக் கொண்டு பழைய நிகழ்ச்சிகளை மறைத்தும் திரித்தும் பேசுகிற கலை அவருக்கு மட்டுமே உரியதாகும்.

ஐந்துமுறை முதலமைச்சராகப் பதவிவகித்துக் கொடிகட்டிப் பறந்தவர் இன்றைக்கு குடியரசுத் தலைவர், ஆளுநர், மாநிலத் தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனுப்போட்டு மன்றாடும் நிலைக்கு ஆளாகியிருப்பதும், இனி யாரிடம் முறையிடுவது என தேடித்தேடி அலைவதும் பரிதாபத்திற்குரியதாகும்.

சனநாயகம், நேர்மையான தேர்தல், அவசரகால நிலைமை, பழிவாங்கும் போக்கு ஆகியவற்றைக் குறித்து கருணாநிதி பேசுவதும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்.

நன்றி : 'தினமணி' 13-09-11 

No comments:

Post a Comment