Translate

Monday 12 March 2012

மகிந்த, கோத்தா, சரத் ஆகியோரே போர்க் குற்றங்களின் சூத்திரதாரிகள்!-சனல்4

மகிந்த, கோத்தா, சரத் ஆகியோரே போர்க் குற்றங்களின் சூத்திரதாரிகள்!-சனல்4

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், ஐ.நாவோ மேற்குலகமுமோ இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க காத்திரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என “சிறிலங்காவின் கொலைக்களங்கள்“ ஆவணப்பட இயக்குனர் கல்லம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு அவர் அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கல்லம் மக்ரே மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்படவுள்ள புதிய ஆவணப்படம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதை தெளிவாக உறுதி செய்கிறது.

இலங்கையின் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்கள், காணொளி நிபுணர்களால் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அது உண்மையானதே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களும், போராளிகளும் முறைப்படியாகத் திட்டமிட்ட அடிப்படையில் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை இந்தக் கொலை உறுதிப்படுத்துகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டதற்கு, ஜனாதிபதி மகந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம் என்று இந்த ஆவணப்படம் குற்றம் சாட்டுகிறது.
இலங்கை இராணுவம் மிகமிக ஒழுக்கமானது, நன்கு ஒருங்கிணைக்கப்பட்டது, என்றும் போரைத் தாமே வழிநடத்தியதாகவும் ஜனாதிபதி மகிந்தவும், பாதுகாப்புச் செயலாளரும் தொடர்ச்சியாக உரிமை கோரி வந்துள்ளனர்.

பாதுகாப்பு வலயங்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில், இலங்கையின் உயர்மட்டக் கட்டளையின் பேரிலேயே போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. இதற்கு நேரடியான பொறுப்பை இவர்களே வகித்துள்ளனர்.
இலங்கை அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் ஐ.நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையிலும், விக்கிலீக்சில் வெளியான அமெரிக்காவின் தொடர்பாடல் குறிப்புகளும், ஐ.நாவின் முன்னாள் மூத்த அதிகாரி ஜோன் ஹோம்ஸ்சின் செவ்வியும் உறுதி செய்துள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தில், அனைத்துலக சட்டங்களின் கீழ் பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது முதன்மையான கடமை. அந்தக் கடமை நிறைவேற்றப்படவில்லை. அதில் அனைத்துலக சமூகம் தவறிழைத்து விட்டது.

மேற்குலகம் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களைத் தடுக்கத் தவறியதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. அப்போதைய சூழலில் தீவிரவாதத்துக்கு எதிராக மேற்குலகம் நடத்திய உலகளாவிய போர் என்ற மேற்குலக நிகழ்ச்சி நிரலை ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு, தமது செயற்பாட்டை நியாயப்படுத்தியது.

பொதுமக்களுக்கோ விடுதலைப்பலிகளுக்கோ யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தின் தன்மையின் மூலம், அந்த இறப்பு ஒரு மோசமான படுகொலை என்பதை உறுதி செய்கிறது.

ஐ.நா பதுங்குகுழிகள் மீதும் அதனைச் சுற்றியும் முறைப்படி திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்களை படையினர் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும், கோத்தபாய ராஜபக்சவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் அது நேரடியாக தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சற்று விலகி தாக்குதல்கள் தொடர்ந்தன.

யுத்தத்தில் பொதுமக்களை கேடயமாக பாவித்தது உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களை எவரும் நிராகரிக்கவில்லை. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தெளிவானவை, ஆவணப்படுத்தப்பட்டவை, அவற்றுக்குச் சவால்விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment