Translate

Saturday 10 March 2012

இன்னும் இரு தினங்களில் ஒரு தமிழனின் வெற்றியை எதிர்பார்க்கிறது சுவிசர்லாந்து "வோ" (Vaud) மாநிலம்


தமிழ் மக்கள் தங்களுக்கு என ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதென்பது ஒரு மகத்தான விடயம். எமது பிரச்சனையை எங்கும் எடுத்துச் செல்ல, ஒரு பிரதிநிதியில்லையே என ஏங்கும் மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக ஒரு தமிழர் வருவது அரசியலில் கூட ஆரோக்கியமான விடயம். இதை பெறக்கூடிய சந்தர்ப்பம் இந்த வோ (Vaud) மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது.
திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள், லவுசான் மாநகர சபையின் உறுப்பினராக இரண்டாவது தடவையாக 2011ல் போட்டியிட்டு, லவுசான் மாநகர சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர், இந்த மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வாய்ப்பை, வோ (Vaud) மாநிலத்தில் 2012.03.11ல் நடைபெறவுள்ள தேர்தலில், வெற்றி பெற களமிறங்கியுள்ளார்.
இவர் இத்தேர்தலில் வெற்றி பெற்றால், ஒரு ஈழத்தமிழன், சுவிஸ் மாநிலத்தின் பாராளுமன்றத்தில் காலடி பதித்து விட்டார் என்ற செய்தி, சுவிஸ் தமிழர் மத்தியில் மட்டுமல்ல, உலக தமிழர் மத்தியிலும், ஈழத்து மக்கள் மத்தியிலும் மகிழ்வை, பெருமையை ஏற்படுத்தும் என்பது உண்மையே!
எனவே! இவரின் இந்த முயற்சிக்கு நாம் பக்கபலமாக, நிற்கவேண்டியது எமது கடமையும் கூட, வேறு மாநிலத்திற்கு கிடைக்காத ஒரு சந்தர்ப்பம், வோ (Vaud) மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது.
இவர் வெற்றியால் மற்றைய மாநிலங்களிலும், எமது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு, எங்கும் தமிழ், எதிலும் தழிழன் என்ற நிலை சுவிசில் ஏற்பட, இந்த நண்பர் திரு.தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களின் வெற்றி, ஒரு எடுத்துக்காட்டாக அமையப்போகிறது. இப்போ, இறுதிக்கட்ட நேரம், இதுவரை வாக்களிக்காது இருப்பவர்கள், 11ம் திகதி நேரடியாக வாக்களிக்க இருப்பவர்கள், உங்கள் பொன்னான வாக்குகளை, வெற்றிவாக்குகளாக மாற்றுங்கள் தமிழர்களே!
உங்களுக்கான வாக்களிக்கும் இலகுவான ஒரு முறை:- கடைசியாக ஒரு வெற்று தாள் பட்டியல் என தனி கோடிடப்பட்டு இருக்கிறது. அதில் பட்டியல் என்ற இடத்தில் PS என (கட்டாயம்) போட்டு விட்டு. 01.24 Thambipillai Namasivayam (Shiva) என இரு தடவைகள் எழுதவேண்டும். இவ்வாறு எழுதுவதால், PS கட்சியின் அதிகப்படியான வாக்குகள் பெற்ற கட்சி என்ற ஸ்தானத்தையும் பெறும் வாய்பை பெற வழி செய்கிறது. வேட்பாளருக்கு இரண்டு வாக்குகளும், PS என எழுதுவதால் கட்சிக்கு 27 வாக்குகளும் கிடைக்கிறது. இது சிறந்த வாக்களிக்கும் முறையாகும்.
வாக்கு சாவடியில் நேரில் சென்று பங்குனி 11ம் திகதி காலை 10.30 மணிக்கு முன்னர் போடவேண்டும். உங்கள் வாக்குகளை தவறாது, சரியாக பயன்படுத்துங்கள். உங்கள் ஆதரவும், அன்பும் காலத்தால் அழியாத ஒரு வரலாற்றை பதிவு செய்யும், 11ம் திகதி மாலை உங்கள் வாக்குகளால் வோ (Vaud) மாநிலத்தில் தமிழ்மக்களுக்கு பெருமை நிலைக்கும் என்பதை மறவாதீர்கள்!
11.03.2012ல் வரும் தேர்தலில், திரு.தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துவோம், வாக்களிப்போம், எமது பங்கைச் செய்து மன நிறைவடைவோம்.
sivanesan vijayaratnam ragupathy83@gmail.com

No comments:

Post a Comment